அன்பே உருவான இறைவன் பாவ இருளுக்குள் மறைந்து போன மனித உறவைத் தேடி வந்த நாளே கிறிஸ்மஸ் தினமாகும். உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவா.1:9) என்று வேதம் கூறுகிறது.
பாவ இருளாவது யாது?
உருவாக்கிய கடவுளிடமிருநது; மனிதனைப் பிரிப்பதே பாவம். மனிதன் தன் ஆத்துமாவை மறந்தது மட்டுமின்றி படைத்த கடவுளையே கூட அறியாதபடி மறைத்தும், நிலையற்றதை நிலையானதென்றும், நல்லதைச் செய்ய விரும்பினாலும் அதைச் செய்ய முடியாதபடி மனிதனைக் கட்டிப் போட்டும், தீமையை தீமையென அவன் அறிந்து கொண்டாலும் தீமையானது அவனை விட்டுவிடாதபடி பற்றிக் கொண்டும் இருக்கும் மாயையே இருளாகும்.
இதை வேதம் இப்படியாகக் கூறுகிறது: நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் சய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோ.7:18-24)
பாவ இருளினால் தன்னைத் தானே மறந்து உணர்வற்ற நிலையில் இருக்கும் மனித ஆத்துமாவை தேவன் உணர்த்தி உயிர்ப்பித்தால் உணர்வடைந்து இயல்பான நிலைக்குத் திரும்பும் வல்லமை கொண்டது.
அன்பே உருவான இறைவன் மனிதனது பாவநோயை நீக்கி அவனோடு ஐக்கியம் கொள்ளும்படியாய் அவரது பரலோகவாழ்வைத் துறந்து பூமியிலே மனிதனாய் பாவமின்றி கன்னியினிடத்தில் பிறந்தார். பாவ இருளை நீக்க ஒளிப்பிரவாகமான இறைவன் மெய்கொண்டு பூமியில் உதித்தார். அவரே இயேசு. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்.1:23) என்று வேதம் கூறுகிறது.
இயேசு என்ற கிரேக்க பதம் தமிழிலே குரு எனப்படும். கு என்றால் பாவம். ரு என்றால் நீக்குபவர் என்பதே அர்த்தம். உணர்வற்று மயக்க நிலையில் இருக்கும் ஆத்துமாவை தேவ ஞானத்தை உபதேசித்து உயிர்ப்பிக்க தேவன் சித்தம்கொண்டார். தேவனுடைய வார்த்தையை மீறியதால் ஏற்பட்ட மனிதனுடைய பாவ இருளை தனது மரண பரியந்தமான கீழ்ப்படிவினால் நீக்கும்படியாக அவர் மனிதனாகிப் பிறந்தார். பூமியிலே இயேசு (குரு)வின் நிலை: 100 வீதம் மனிதன் 100 வீதம் தேவன். அவர் (மனிதனாக) பசித்திருந்தார.; களைத்திருந்தார.; கண்ணீர் விட்டார். பாடுகள் அனுபவித்தார். மரித்தார். (தேவனாக) மரித்தோரை உயிரோடெழுப்பினார். கடல் மேல் நடந்தார். புயலை அடக்கினார். பேய், பிசாசுகள் அவரை அறிக்கையிட்டு அடங்கிப் போயின. மனிதனின் பாவங்களை இரட்சித்து மீட்பளிக்கிறார். மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். பரமேறினார்.
இவை யாவும் தொலைந்து போனதைத் தேடும் தேவனின் நிகழ்ச்சி நிரலே. மனிதகுலம் தமது ஆத்துமாவை மறந்த நிலையில் அழிவுக்கு வைக்கப்பட்டிருக்கும் தமது பணம், பொருள், நிலம், வீடு, மற்றும் பிள்ளைகள்,உறவினர், சுற்றத்தார் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. ஆத்துமாவிலோ அக்கறையின்றி உள்ளனர். இது ஒரு பெரிய வஞ்சகமாகும். அதுதான் ஆதிப்பெற்றோர் செய்த மீறுதலின் பாவமாகும். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் அவனும் புசித்தான்.-ஆதி.2:12,3:8 அதனால் மனித ஆத்துமா மரித்தது. அதற்கு ஜீவன் கொடுக்கவே இயேசு பூமிக்கு வந்தார். அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.(யோவா.1:10-13)
அன்பானவர்களே! துன்பங்கள் துயரங்கள், வேதனைகள் மத்தியிலும் கடவுளைத் தேடும் உங்கள் ஒவ்வொருவரையும் இயேசு அன்போடு அழைக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து வழி தப்பிச் சென்ற சொந்த ஜனங்களாயிருக்கிறீர்கள். உங்களை அழைத்துச் செல்லவே இப் பூமியிலே பிறந்தார்.
இயேசு அந்நியக் கடவுளல்ல. மெய்கண்டதேவர் என்ற தமிழ் புலவர் இப்படியாகக் கூறுகிறார்:
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.
விளக்கம்: ஐம்புல வேடரின் வளர்ந்து – (மெய்,,வாய்,கண்,மூக்கு,செவி என்ற ஐம்புலங்களாலாகிய சரீரமான) வேடரிடம் அகப்பட்டுத் தன்னையும், தன் (படைத்தவரையும்)தலைவனையும் அறியாதிருக்கும் ஆன்மாவுக்கு அயர்ந்தனை என – உன்னையும் உன் தலைவன் யார் என்றும் அறியாதபடி உன்னை மயக்கி வைத்திருக்கிறார்கள் என்று குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு அன்னியம் இன்மையின் – உனது தலைவன் நீ பயந்து ஒளித்துக்கொள்ளாதபடி தானும் உன்னைப் போலவே சரீரம் தரித்து வந்து எடுத்துச் சொல்லி வேடரால்(பாவத்தால்) உனக்கு வரும் துன்பத்தை (சிலுவைத் தவத்தால்) விலக்கி அரன்கழல்செலுமே – உனக்கும் உன் தலைவனுக்குமிடையே இருந்த பிரிவு நீங்கி ஒற்றுமையானதால் நீ அவருடன் அவருடைய மாளிகையில் சென்று அவருடன் வாழ முடியும்.
இப்பாடலின் எளிமையான விளக்கத்தில் இயேசுவின் அழைப்பின் குரலைக் கேட்டீர்களா? இதோ! மிகவும் பழைமைவாய்ந்த மற்றுமொரு நூலான போற்றிப்பஃறொடை பிறந்த இயேசுவை வரவேற்கிறது. இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்தான்.-(பாடல் 69)
கருத்து: காலஎல்லையற்ற பேரின்ப வாழ்வுக்கு எம்மை அழைத்துச் செல்வதற்காகவே பிறக்கவேண்டிய அவசியமேயற்ற சிருஷ்டி கர்த்தா பூமியிலே பிறந்தார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் இந் நாட்களில் உங்கள் உள்ளங்களில் இயேசு பிறக்கட்டும்!
உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணி விடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஓரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டு பிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். (அப்.17:24-30)
இதோ! கர்த்தர் வருகிறார்! ஆயத்தமாவோம்!!
கர்த்தர் தாமே ஆசிர்வதிப்பாராக!