உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..பரவாயில்லையே! இன்று
உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதே! மிகப் பெரிய கடிதம் போலத் தோன்றுகிறதே! இன்று முழுவதும் படித்தாலும் படித்துத் தீர்க்க முடியாத ஒரு கடிதமல்லவா இது! இக்கடிதம் உங்களுக்காகவே வெகு தொலைவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
எங்கேயிருந்து இக்கடிதம் வந்திருக்கிறது?
சீனாவிலிருந்தா இல்லையேல் ஆஸ்திரேலியாவிலிருந்தா?
அவற்றைக் காட்டிலும் வெகு தொலைவிலிருந்தல்லவா வந்திருக்கிறது!
பூமியின் கடையாந்திரங்களிலிருந்து வந்திருக்கக் கூடுமோ?
இல்லை, இல்லை அங்கிருந்துமில்லை!
நிலாவிலிருந்தோ ? செவ்வாய், வெள்ளி இது போன்ற கிரகங்களிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறதோ?
ஒரு வேளை துருவ நட்சத்திரத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதோ?
இல்லை அவற்றைப் பார்க்கிலும் வெகு தொலைவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது !
சரி அப்படியானால் உங்கள் கடிதம் எங்கேயிருந்து தான் அனுப்பப்பட்டிருக்க முடியும்?
எப்பொழுதும் விருந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் சந்தோசம் நிறைந்த, ஆஸ்பத்திரிகளோ, டாக்டர்களோ, சவக்கல்லறைகளோ இல்லாத, இரவென்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டிலிருந்தல்லவா இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது!
ஆம், பரலோக நாட்டிலிருந்து தான் இது அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த நகரத்திலிருந்து?
பரம எருசலேமிலிருந்து! (இதை தான் மோட்சமென்று சொல்லுகிறார்கள்)
தெருவின் பேரென்ன?
சுத்தப் பொன் வீதி!
அனுப்பியவரின் பேரென்ன?
சர்வ வல்லமையுள்ள தேவன்!
அவர் உங்களை அறிவார். அவர் உங்களை நேசிக்கிறார்.
அவர் சிரமம் பாராமல். இந்த அற்புதமான நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுதியுள்ளார்.
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறபடியால் இக்கடிதத்தை தனிப்பட்டமுறையில் அவர் எழுதி உங்களுக்கு அனுப்பியிருக்கிறார்.
அற்புதமான ஒரு கடிதம்!
என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு முறை இருபது பக்கங்களடங்கிய ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அது ஒரு அபூர்வமான கடிதம் தான். ஆனால் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதமோ 1,462 பக்கங்களடங்கியது!
ஒரு வேளை அக்கடிதம் என்னவென்று இதற்குள்ளாக நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.
ஆம், அக்கடிதம் பரிசுத்த வேதாகமமே!
இந்த தெய்வீக புத்தகத்தை பைபிள் என்றும், திருமறை என்றும்,
விவிலியம் என்றும், தேவனுடைய வார்த்தை என்றும் அழைக்கிறார்கள். ஆனால், பைபிள் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒன்றா?
நிச்சயமாகவே அது பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒன்றுதான்!
இல்லையில்லை அது அமெரிக்காவிலோ, அல்லது இங்கிலாந்திலோ இல்லையேல் வேறு ஏதாவது ஒரு வேதாகமச் சங்கத்திலிருந்தோ அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அது மனிதரால் எழுதப்பட்டு, மனிதரால் அச்சடிக்கப்பட்ட ஒன்றே, என்று நீங்கள் கூறுவது என் காதுகளில் கேட்கிறது!
அது சரிதான், ஆனால் வேதாகமச் சங்கத்திற்கு இவ்வார்த்தைகள் எங்கேயிருந்து கிடைத்தன?
அவை பரிசுத்த பூமியாகிய இஸ்ரேல் நாட்டிலிருந்து தான் கிடைத்தன.
அங்கேதான் வேதாகமத்தை எழுதிய தேவமனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.
அப்படியானால் வேதாகமம் இஸ்ரேலிலிருந்துதான் வந்ததா? பரலோகத்திலிருந்து வரவில்லையா?
ஒரு மேலதிகாரி தனது அலுவலகத்தில் இருந்து கொண்டு தனது செயலாளரிடம் ஒரு கடிதத்தை எழுதும்படி கூறுகிறார். அவர் சொல்லச் சொல்ல செயலாளர் எழுதிக்கொள்கிறார். ஒரு மணி நேரத்திற்குப் பின் டைப் செய்யப்பட்ட அக்கடிதத்தில் மேலதிகாரி கையெழுத்திடுகிறார். அக்கடிதம் பின் தபாலில் அனுப்பப்படுகிறது.
இப்பொழுது நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா ?
அக்கடிதத்தை எழுதியது யார்? மேலதிகாரியா? அல்லது அவரது செயலாளரா?
சரியாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள் கூறும் பதில், செயலாளர் தான் எழுதினார், என்பதே.
ஆனால் புத்தியுள்ளவர்கள் என்ன சொல்லுவார்கள்? அக்கடிதம் மேலதிகாரியால்தான் எழுதப்பட்டது, அவர் சொல்லச் சொல்ல செயலாளர் எழுதிக் கொண்டார் அல்லவா ?
மேலதிகாரி எழுத விரும்பியதை செயலாளர் கேட்டு எழுதிக் கொண்டு போய் டைப் செய்தார். அவ்வளவே!
வேதாகமமும் இப்படித்தான் எழுதப்பட்டது. பைபிளை எழுதிய தேவ மனிதர்கள் அதை எழுதும்போது தேவனுடைய சத்தத்தைக் கேட்டு அவர் சொன்னதை அப்படியே எழுதினார்கள். தேவன் எழுத விரும்பினதை வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து கேட்டுக் கவனமாக எழுதினார்கள்.
ஒரு இசைக் கருவி வாசிக்கப்படுவதோடு இதை ஒப்பிட்டால் நீங்கள்
இக்காரியத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். டிரம்பெட் என்றழைக்கப்படும் இசைக்கருவியில், இனிய இசை எப்படி உண்டாகிறது? ஒரு இசைக்கலைஞன் அதை எடுத்து வாசிக்கும் போது!
அது போலவே தேவன் தனது எண்ணங்களைத் தனது ஊழியக்காரர்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
தேவனுடைய சுவாசம், அதாவது அவருடைய சத்தம் தேவமனிதர்களின் இருதயங்களிலிருந்து. அவரது பரிசுத்த ஆவியானவர் தேவமனிதர்களின் இருதயங்களில் இருந்தார். இப்படியாக அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டனர். தேவ ஆவியானவர் தேவ மனிதர்களுக்குள் ஊடுருவி அவர்களை நடத்தினார். தேவ ஆவியால் அவர்கள் நடத்தப்பட்டனர். உட்சுவாசித்தல் என்றும் பொருளுண்டு. தேவ ஆவியை அவர்கள் உட்சுவாசித்து தேவ வார்த்தைகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். தேவன் தமது சுவாசத்தை அவர்களுக்குள் ஊதினபடியால் அப்படியாயிற்று.
டேப் ரிக்கார்டர் மாயாஜாலம்
எனது நன்பர் ஒரு நல்ல இசைக் கலைஞர். அவருக்கு அநேகம் இசைக் கருவிகளை வாசிக்கத் தெரியும். தனது டேப் ரிக்கார்டர் உதவியோடு அவர் ஒரு தந்திரம் செய்தார்.
அவர் கூறினார், முதலாவதாக நான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே எனது பின்னனிப் பாடகியின் குரலைப் பதிவு செய்து விடுவேன். பின்பு அதே ஒலிநாடாவில் முன்பு ஒலிப்பதிவு செய்து வைத்ததை அழிக்காமல் அதே பெண்ணை உச்ச தொனியில் பாடும்படி கூறுவேன். இதே முறைப்படி அந்த ஒலி நாடாவில் ஒவ்வொரு இசைக் கருவியின் இசையையும் பதிவு செய்வேன்.
இப்போது இந்த ஒலி நாடாவில் எட்டு இசைக் கருவிகளின் இசை பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்படி என் சாதனை?
அவர் ஒலிநாடாவை டேப் ரிக்கார்டரில் பொருத்திவிட்டு அதைப் பாடச் செய்தார். எந்த இசைக் குழுவினரின் இசை இது? என்று நான் அப்பாவி போலக் கேட்டேன். எனது நண்பர் வாய் விட்டுச் சிரித்தார். இத்தனை இசைக் கருவிகளையும் நான் ஒருவனே வாசித்து இப் பாடலைப் பதிவு செய்தேன் என்று அவர் கூறியபோது நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு இசைக் குழுவினர் ஒழுங்காக இசைத்தால் எப்படியிருக்குமோ , அதே போன்ற இசை அதில் பதிவுசெய்யப்பட்டு இருந்தது.
எனது நண்பர் மறுபடியும் கூறினார், நான் வேறொரு இசைக் கலைஞரை அறிவேன். அவர் இதே போல முப்பது இசைக் கருவிகளை உபயோகித்து அவர் ஒருவராகவே ஒரு இன்னிசை நிகழ்ச்சியை ஒலி நாடாவில் பதிவு செய்துள்ளார். அக்கலைஞர் தனது சுவாசத்தை 30 இசைக் கருவிகளில் ஊதி இருக்கிறார் என்றார்.
வேதாகமும் இப்படித்தான். நாற்பது எழுத்தாளர்கள் எழுதியிருப்பினும், இந்த நாற்பது இசைக் கருவிகளையும் இசைத்த இசைக் கலைஞர் தேவன் ஒருவரே! தனது சுவாசத்தை இந்த நாற்பது இசைக் கருவிகளிலும் அவர் ஊதி அவற்றை உயிப்பித்து இருக்கிறார்.
பைபிளின் பேரதிசயம் இதுதான். அது மனிதனுடைய குரலோ எழுத்தோ அல்ல. அது தேவனுடைய சத்தமும் எழுத்தும் ஆகும்.
இக் கடிதத்தின் உள்ளடக்கம்
வீட்டு எண்ணும் தெருப் பெயரும்:
வேதம் கூறுகிறது: சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன்.(வெளிப்படுத்தின விசேஷம் 2:13, புதிய ஏற்பாட்டில் பக்கம் 335).
கர்த்தாவே….என் உட்காருதலையும், என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர். என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரியும். முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். (சங்கீதம் 139) பக்கம் 757.
இதை விடச் சரியான விலாசம் யாராவது எழுத முடியுமா?
விலாசத்தை விட தனிப்பட்ட முறையில் அவர் உங்களை அறிந்திருப்பதையே இது காட்டுகிறது. இது உங்கள் இதயத்தின் விலாசமே அன்றி உங்களது புறம்பான மனிதனின் விலாசமல்ல!
உங்களது பெயரும் குடும்பப் பெயரும்:
வேதம் உங்களுக்கு கொடுக்கும் பெயர், பாவி (புதிய ஏற்பாட்டில் 212-ஆம் பக்கம்) (ரோமர் 5:8) நீங்கள் ஒரு பாவியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர். முழு உலகமும் தேவனுக்கு முன்பாகக் குற்றம் உள்ளதே! (ரோமர் 3:9-12) மனிதருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித் தனங்களும், கொலை பாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டு வரும். (மாற்கு 7:21,22)
உங்கள் இருதயத்தைக் குறித்து இதைக் காட்டிலும் திட்டமாக யாராலும் கூற இயலாதே!
ஆனாலும் அதுதான் உங்கள் பெயர். உங்கள் இதயத்தின் பெயரும் அதுவே! அதாவது பாவி என்பது!
முற்றிலும் பரிசுத்தமும் நீதியும் நிறைந்த இறைவன் மனிதனை நன்கு அறிந்து இருக்கிறார். அவர் மனிதர்கள் எல்லாரையும் பாவிகள் என்று தீர்ப்பளித்து இருக்கிறார். அவர்கள் பாவ மன்னிப்பை பெற வேண்டும் என்று விரும்புகிறார்.
நீதிபதியின் தீர்ப்பு:
அப்படியானால் தேவனிடத்திலிருந்து வந்த இக்கடிதம், அவரது நீதிமன்றத்தின் தீர்ப்பா?
ஆம், உண்மையிலேயே அது பயங்கரமான ஒன்றுதான். ஆனால் அது உண்மை.
நீங்கள் செய்த சகல அக்கிரமங்களையும் அவர் அறிவார். நீங்கள் செய்த பாவங்களுக்காக உங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அச்சிறையோ அவியாத அக்கினிக் கடல்! இதுதான் நரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு பயங்கரமான ஒரு காரியம் இது!
நீங்கள் இத் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்தான் என்று உங்களுக்குப் புரிகிறதா?
ஆனால் நேர்மையோடு நான் கடவுளுக்கு முன்பாக ஒரு பாவி என்றும், இத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலையில் தான் நான் உள்ளேன் என்றும் யார் ஒத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஓர் நற்செய்தி உண்டு.
நிரபராதி என்ற தீர்ப்பும், கிருபையும்:
கிறிஸ்து பாவ மனிதரால் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால், தேவகுமாரன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது தேவனால் தண்டிக்கப்பட்டவராகத்தான் அத்தண்டனையை அனுபவித்தார். அவர் குற்;றவாளியா? இல்லை, நிச்சயமாக இல்லை! அவர் பாவமறியாத பரிசுத்தர்!
பின்பு ஏன் அவர் தேவனால் கைவிடப்பட்டார்? ஏன் அவர் சிலுவையில் தொங்கி மரிக்க நேரிட்டது? அவர் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றும்படியாக அப்படிப்பட்ட சாவை அடைந்தார். நமது சகல அக்கிரமங்களையும் தேவன் அவர்மேல் சுமத்தினார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. (ஏசாயா 53:5) பழைய ஏற்பாட்டில் பக்கம் 860.
ஆயிரத்திற்கும் மேலான வாக்குறுதிகள் (வாக்குத்தத்தங்கள்)
இத் தெய்வீகக் கடிதத்தின் முக்கிய கருப்பொருள் இதோ:
1. நீங்கள் கெட்டவர் (பாவி) ஆதலால் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
2. ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். புதிய ஏற்பாற்டில் பக்கம் 328 (1.யோவான் 4:8) அவர் உங்கள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்க விரும்புகிறார். அவரால் இதைச் செய்ய முடியும். ஏனென்றால், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து பாவிகளாகிய நமக்கு பதிலாக, நாம் அடைய வேண்டிய தண்டனையை, அவர் அடைந்தார். நாம் செலுத்தி தீர்க்க வேண்டிய கடனை அவர் செலுத்தினார். தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு தான் ஒரு பாவி என ஒத்துக் கொள்ளும் எந்த மனிதனையும் காப்பாற்றுவதற்கு அவசியமான சகல காரியங்களையும் நமது இரட்சகர் சிலுவையில் செய்து முடித்தார். இவ்வுண்மை இதை விசுவாசிக்கிற எவருக்கும் பொருந்தும்.
அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராகும் எந்த ஒரு நபருக்கும் அளவிட முடியாத செல்வமாகிய ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குத்தத்தத்தங்களை அவர் அளித்துள்ளார். தேவன் மக்களுக்கு அளிக்க விரும்பும் ஆசீர்வாதங்களை தாம் அருளிச் செய்வதற்கு முன்னமே சொல்லி விடுகிறார். இதுதான் வாக்குத்தத்தம் என்று அழைக்கப்படுகிறது.
பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் இக்கடிதத்திற்கு உங்கள் பதில் என்ன ?
பைபிள் பற்றிய விமர்சனம்
1. புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம் என்றழைக்கப்படும் புத்தகம் நானே!
2. தேவனால் எழுதப்பட்ட புத்தகம் நானே!
3. இரண்டு பகுதிகள் – 66 புத்தகங்கள்
4. 1600 வருடங்களுக்கும் மேலாக 40 எழுத்தாளர்கள் மூலமாக எழுதப்பட்டேன்.
5. ஆனாலும் நான் ஒரே ஒரு புத்தகம் தான்.
6. என்னுடைய மிகப் பெரிய விஷயம் – கிறிஸ்துவே.
மிகப் பெரிய அறிஞர்களின் கருத்துக்கள்!
நான் ஒரு வேளை சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது, என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன்.
– (கோதே) –
வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல. அது நித்திய நித்திய காலமாக உள்ள ஓர் அழிவற்ற நூலாகும்.
– (மார்ட்டின் லூத்தர்) –
ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்.
– (பேராசிரியர் பீட்டெக்ஸ்) –
உலகப் புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழுத்தாளர் சர் வால்டர் ஸ்காட் தனது மரணப் படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம் அந்த புத்தகத்தை எனக்குத் தா, என்றாராம். மகன் அவரிடம் எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்? என்று கேட்டார். அப்பொழுது ஸ்கார்ட் பதிலுரைத்தார். இவ்வுலகில் புத்தகம் என அழைக்கப்படக்;கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே.!
நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்தப் பின் ஸ்பர்ஜன் கூறினார், நான் நூறாவது முறை வேதத்தை வாசித்தபோது, முதல் முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்.
வேதாகமத்தை நாம் பெற்றுக் கொண்டது எப்படி ?
ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இருப்பது போல அரிச்சுவடியோ, பேனாவும் மையும் காகிதமும் உபயோகித்து எழுதப்பட்ட கடிதங்களோ கிடையாது. அந் நாட்களில் கியூனி பாரம் என்றழைக்கப்படும் ஆப்பு எழுத்துக்கள் உபயோகிக்கப்பட்டன. ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு அடையாளம் இருந்தது.
இச் சின்னங்கள் கற்களில் உளிவெட்டாகவோ, களிமண் அச்சுக்களாகவோ செய்யப்பட்டன. களிமண் அச்சுக்கள் பின் தீயிலிட்டு சுடப்பட்டன.
அநேகம் ஆண்டுகளுக்கு முன் பாலைவன மணலில் புதையுண்டு போன நகரங்களை மீண்டும் தோண்டி எடுத்த போது ஆயிரக்கணக்கான களிமண் பலகைகளைக் கண்டு பிடித்தனர். அப்பலகைகளில் கியூனிபார எழுத்து முறைப்படி எழுதப்பட்டிருந்த செய்திகள் இருந்தன. சலவை கற்களிலும் கியூனிபாரம் பொறிக்கப்பட்டிருந்தது.
எகிப்தியர்கள் சித்திர எழுத்து முறையைக் (ஹீரோ கிளிபிக்ஸ்) கண்டு பிடித்தனர். அவை பிரமிடுகளில் (எகிப்து மன்னர்களின் சவக்கல்லறைகளில்) காணப்படுகின்றன. பெரு முயற்சி செய்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இச்சங்கேத வாசகங்களை மொழிபெயர்த்துள்ளனர்.
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு களிமண், கல், மரம் இவை மட்டுமல்லாமல் காகிதமும் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாபிரஸ் எனும் நாணலின் மரச்சோற்றிலிருந்து இக்காகிதம் உண்டாக்கப்பட்டது. தோல் சுருள்களும் எழுதுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டன.
புத்தகங்களின் தனிப்கக்கங்களை அட்டையிட்டுத் தைத்து சீராக்கும் கலையை அவர்கள் அறியாததால் தோல் சுருள்களை அதிகமாக பயன்படுத்தினர்.
வேதாகமத்தின் முதல் எழுத்தாளர் மோசே ஆவார். சம்பவித்த காரியங்களைப் புத்தகத்தில் எழுதி வைக்கும்படியாக தேவன் மோசேக்கு கட்டளை கொடுத்தார். என்று அநேகம் முறை நாம் வேதாகமத்திலே வாசிக்கிறோம்.
வேதாகமத்தின் அநேக புத்தகங்களை பெற்றுக் கொள்ளும் பாதுகாக்கும் சிலாக்கியம் இஸ்ரேல் மக்களுக்கு கிடைத்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு பழைய ஏற்பாடு எழுதி முடிக்கப்பட்டது.
கிறிஸ்துவின் மரணத்திற்கு 1.500 ஆண்டுகளுக்கு முன் மோசே வாழ்ந்து வந்தார். எனவே வேதாகமம் 1600 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டது எனலாம்.
தேவனுடைய வார்த்தைகளல்லாத அநேகம் புத்தகங்களும் இக்கால அளவில் எழுதப்பட்டன.
அது நமக்கு எப்படித் தெரியும்?
தேவ ஆவியானவரின் நடத்துதலால், விசுவாசிகள் எந்தப் புத்தகம் தேவனால் அருளப்பட்டது, எது வேதாகமத்தில் உட்படுத்தப்பட்ட புத்தகமல்ல என்று எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
மெய்கிறிஸ்தவர்கள் எது சரியான புத்தகமென்று, எது தள்ளப்பட்ட புத்தகமென்றும் பகுத்தரிந்து கொள்ள முடியும். பரிசுத்த வேதாகம புத்தகத்தின் தொகுப்புக்குள் இல்லாத புத்தகங்கள் தள்ளும்படி ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தள்ளும்படியாகமத்திலுள்ள சில புத்தகங்கள் படிப்பதற்குச் சிறந்தவை போலத் தோன்றும். ஆனால் மிகக் கவனமாக வாசித்துப் பார்க்கும்போது அவை வேதாகமத்திற்கு முரணான கருத்துக்களை உடையவை எனக் கண்டறிய முடியும். கதைகளும், வேடிக்கையான காரியங்களும், தவறுகளும் அவற்றின் நிறைந்துள்ளன. பரிசுத்த வேதாகமத்தில் அப்படிப்பட்ட காரியங்களைக் காணவியலாது. தேவனுடைய வார்த்தை என்பது ஏதோ ஒரு திருச்சபையின் போதகர் குழுவினராலோ அல்லது ஒரு ஆலோசனைக் குழுவினராலோ தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டதல்ல. அது தேவனுடைய வழி நடத்துதலால் தொகுக்கப்பட்டதாகும். 66 புத்தகங்கள் அடங்கிய இது வேதாகம தொகுப்பு, கேனான் (ஊழயெn)என்று அழைக்கப்படுகிறது.
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் அச்சடிக்கும் முறை இவ்வுலகத்தையே மாற்றியமைத்தது.
முன் நாட்களில் யாராவது ஒருவருக்கு ஒரு வேதாகமம் தேவைப்பட்டால் அவர் அதன் பிரதியை எழுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இது அதிக செலவையும், கால தாமதத்தையும் உண்டாக்கிற்று.
வேதாகமம் தேவையானால் அவர் தனக்கு ஒரு கைப்பிரதியை வாங்கி வருவார். பின்பு அதைப் பார்த்து அவர் நகல் எடுப்பார். இப்படி நகல் எடுக்கும்போது பிழைகள் ஏற்பட வாய்புண்டு. அநேகம் வருடங்களுக்குப் பின் வேறொருவர் இந்நகலைப் பார்த்து எழுதிக் கொள்ளும்போது அந்நகலிலுள்ள பிழைகளைக் கவனிக்க மாட்டார். இப்படியாக ஒவ்வொரு முறை நகல் எடுக்கும்போதும் பிழைகள் அதிகரிக்க வாய்புண்டு. எனவே முதன் முறையாக, எழுதப்பட்ட, மிகப் பழைய கையெழுத்துப் பிரதிகளை நாம் கண்டடைய வேண்டியது அவசியமாயிற்று. எழுத்தாளர்கள் வாழ்ந்த நூற்றாண்டிலேயே எழுதப்பட்ட கைப்பிரதிகள் கிடைக்குமாயின் அவை கலப்படமில்லாத நல்ல பிரதிகளாய்த் திகழ வாய்புண்டல்லவா ?
வான் டிஸ்சென்டார்ஃப் என்பவரின் மாபெரும் முயற்ச்சி
வறண்ட பாலைவனத்தில் மனித புத்திக்கு எட்டாத இருண்ட ஓர் இரவு அது. நரிகளின் ஊளை வேறு – பயணிகளின் கூட்டம் ஒன்று மணல் மேட்டிற்குக் குறுக்கேயுள்ள ஒரு புதர்வழியாகக் கடந்து செல்கிறது. அப்பயணிகளின் கூட்டத்திற்கு தலைவர்களான இரு அரேபியர்களின் கைகளிலும் இரு கைத்துப்பாக்கிகள். அப்பகுதியில் வாழும் பெடொலின் இனத்தார் ஒருவரொடொருவர் பகையுணர்வு கொண்டவர்கள்;. அவ்விரு அரேபியர்களுக்குப் பின்னால் ஒரு மேலை நாட்டவர் ஒட்டகத்தின் மீது வருகிறார்.
தீடிரென்று வெடியோசை கேட்கிறது. பாலைவனத்தில் ஒருவரோடொருவர் சண்டை செய்து கொண்டிருக்கும் யுத்த களத்திற்குள் பயணிகளின் கூட்டம் புகுந்து விட்டது. ஒட்டகங்களின் மேல் சவாரி செய்து கொண்டு வந்தவர்கள் கீழே குதிக்கின்றனர். வெள்ளையர் தனது இரட்டைக் குழல் துப்பாக்கியை இறுகப் பிடிக்கின்றார். தரையின் மேல் ஊர்ந்து ஊர்ந்து பயணிகளின் கூட்டம் முன்னேறுகிறது. தீடிரென்று அவர்கள் ஒட்டகங்களின் மேலேறி மின்னல் வேகத்தில் ஓடி மறைகின்றனர்.
அவ்வெள்ளையர் வேறு யாருமல்ல! லீப்ஸிக் பிரதேச பிரபுவான வான்டிஸ்சென்டார்ஃப் தான் அவர்! அவர், சீனாய் வனாந்திரத்தில் இவ்விருண்ட இரவில் என்ன தீரச்செயல் புரிய வந்திருக்கக் கூடும்?
அவரது உள்ளத்தின் ஒரே ஒரு நோக்கம் இதுதான்: சீனாய் மலையிலுள்ள ஒரு மடத்திற்குச் செல்ல வேண்டும். எகிப்திலிருந்து வந்து கொண்டிருந்த அப்பயணிகள் கூட்டத்தோடு அவரும் சேர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார். வேதாகமத்தின் மிகப் பழைய கைப்பிரதிகள் அம்மடத்தில் இருப்பதாக அவர் கேள்விப்பட்டிருந்தார்.
பழைய ஏற்பாட்டின் பிரதிகள் சரியானவையே என்று நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. நூற்றுக்கணக்கான புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. சில பிரதிகள் கி.பி 400-ல் நகலெடுக்கப்பட்டவையாயிருந்தன. டிஸ்சென்டர்ஃப் பிரபு அவைகள் அனைத்தையும் நன்கு பரிசீலித்துப்பார்த்திருந்தார். ஆனால் அவர் மிகப் பழைய ஒரு கைப்பிரதியைக் கண்டுபிடிக்கவே அங்கே போய்க் கொண்டிருந்தார்.
எழுத்தாளர் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட பிரதி கிடைக்குமாயின் அது எவ்வளவு நன்றாக இருக்கும்!
இறுதியில் அவர் அம்மாடாலயத்தைச் சென்றடைந்தார். அவருக்குக் கிடைத்திருந்த கைப் பிரதிகளில் சில சிறு வார்த்தைகளைக் குறித்த சந்தேகங்களை நீக்கிக் கொள்ளவே அவர் பழைய கைப் பிரதிகளைத் தேடி அம்மடத்திற்குப் பிரயாணப்பட்டிருந்தார்.
அம்மடமானது மிகவும் உயர்ந்த ஒரு குன்றின் மீது கட்டப்பட்டிருந்தது. வழியில் போவோரும் வருவோரும் அம்மடத்தில் தங்கியிருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கவே அது அவ்வளவு உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. கப்பிகளால் இயக்கப்படும் ஒரு இயந்திரத்தின் மூலம் டிஸ்சென்டர்ஃப் மேலே இழுக்கப்பட்டார். இனி அவர் அம்மடத்தில் தங்கியிருக்கும் மற்றவர்களின் உதவியோடு அந்த நூல் நிலயத்திலுள்ள கைப்பிரதிகளை எல்லாம் ஆராய முடியும்.
அநேக வாரங்கள் அயராது உழைத்த போதிலும் ஒன்றையும் கண்டறிய முடியவில்லை. இந்நீண்ட பயணம் தோல்வியைத் தழுவப் போகிறதோ?
ஆனால், இறுதியாக, அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்படும் முன் ஒரு குப்பை கூடைக்குள் சில தோற்சுருட்கள் எறியப்பட்டிருப்பதைக் கண்டார். அச்சுருட்களில் இவர் அதற்கு முன் கண்டிராத கையெழுத்தும் சிறப்பான மொழி நடையும் இருக்கக் கண்டார். அப்போஸ்தலர்களின் நாட்களிலோ அல்லது அவர்கள் இறந்தவுடனேயோ அவை எழுதப்பட்டிருக்க வேண்டும். அவை வேதாகமத்தை எழுதிய எழுத்தாளர்களின் கைப்பிரதியிலிருந்து எழுதி எடுக்கப்பட்ட நகல்களாக இருக்கவும் வாய்ப்புண்டு!
சில மாதங்கள் கழித்துப் 1859-ல் அவர் மிகப் பொறுமையோடும் கவனத்தோடும் அம் மடத்தில் பிரதிகளைத் தேடிப் பார்த்த பொழுது ஒரு நிலவறைக்குள் 346 பக்கங்கள் அடங்கிய பாக்கி தோல் சுருள்களைக் கண்டு பிடித்தார். இவை அவர் முன் குப்பைக் கூடைக்குள் இருந்து எடுத்த தோல் சுருள்களின் தொடர்ச்சியே!
புதிய ஏற்பாற்டின் உண்மையான, பிழையில்லாத சுருள்கள் கிடைத்து விட்டன!
டிஸ்சென்டர்ஃப் அவை அனைத்தையும் கொண்டு செல்ல அனுமதி கிடைத்தது. அவை எல்லாவற்றையும் அச்சிட்டு வெளியிடுவதே அவரது வாழ்வின் முக்கியமான நோக்கமாகத் திகழ்ந்தது.
இக்கைப்பிரதிகள் சீனாய் கைப்பிரதித் தொகுப்பு (ஊழுனுநுஓ ளுஐNயுஐவுஐஊருளு) என்று பேரிடப்பட்டன. அவை இப்பொழுதும் லண்டன் மாநகரத்திலுள்ள பிரிட்டிஷ் கண்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வேதாகமத்தை மொழி பெயர்ப்பதென்றால் அது மிகவும் கடினமான வேலையாகும். எபிரேய, கிரேக்க புதிய ஏற்பாடுகள் பெரிய எழுத்துக்களில் (ஊயிவையட டநவவநசள) மாத்திரமே எழுதப்பட்டிருந்தன. நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தாமல் நெருக்கமாக எழுதப்பட்டிருந்தமையால் ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தையும் முடிவையும் கண்டு பிடிப்பதே மிகக் கடினமான வேலையாயிற்று. எபிரேய மொழியில் உயிரெழுத்துக்கள் கிடையாது. (அதாவது அ, ஆ, இ, ஈ…….) மெய்யெழுத்துக்கள் மாத்திரமே உண்டு. (க், ங், ச்…) நாம் தான் ஏற்ற உயிரெழுத்துக்களைச் சேர்த்து வார்த்தைகளை உண்டாக்க வேண்டும்.
உதாரணமாக ஆதியாகமம் 1:1 ஐ ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களைப் பயன்படுத்தாமல் எழுதினால் இப்படிக் காணப்படும்.
Nவுர்டீபுNNNபுபுனுஊசுவுனுவுர்ர்ஏNளுNனுவுர்சுவுர் ( ஐN வுர்நு டீநுபுஐNNஐNபு புழுனு ஊசுநுயுவுநுனு வுர்நு ர்நுயுஏநுNளு யுNனு வுர்நு நுயுசுவுர்). முதலில் எழுதப்பட்ட எழுத்துக்களின் வரிசையிலிருந்து இரண்டாவதாக எழுதப்பட்ட அழகிய சொற்றொடரை உங்களால் பகுத்தறிய இயலுகிறதா? ஆதலால் நாம் வேதபண்டிதர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவங்களை அனுபவித்து அக்கைப் பிரதிகளை நாம் இன்று காணும் அழகிய வேதாகமாக வனைந்திருக்கிறார்கள்.
சிறப்பாக, வேதாகமத்தைமொழி பெயர்க்கும் சேவையில் அதிகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மார்ட்டின் லூத்தர் ஆவார். இவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அது முதல் அநேக வேத பண்டிதர்கள் வேதாகமத்தை மிகக் கவனத்தோடு மொழிபெயர்த்து சரியான மொழி பெயர்ப்பை நமக்கு நல்கும் சேவையில் ஈடுபட்டனர்.
கும்ரான் குகைகள்
கி.பி. 1947-ல் சவக் கடலின் அருகே தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டிடையன் எப்படியோ வழிதப்பி போய்விட்டான்.
கும்ரான் இடிபாடுகளுக்கருகே பாதுகாப்பற்ற பாறைகளுக்கிடையில் ஒரு துவாரம் இருப்பதை அவன் கண்டுபிடித்தான். மிகச் சிரமத்தோடு அத்துவாரத்தின் வழியாக அவன் இறங்கி ஊர்ந்து சென்றான். அத்துவாரம் அதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு குகையின் நுழைவாயில் போலக் காணப்பட்டது. அவன் அக்குகைக்குள் சென்றதும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான். ஏனெனில் அங்கே பெரிய பெரிய ஜாடிகளுக்குள் தோல் சுருள்கள் அநேகம் இருந்தன. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் யுத்த காலத்தில் அவைகள் அழிக்கப்படாதிருப்பதற்காக யாரோ அவற்றை அங்கே ஒளித்து வைத்திருக்க வேண்டும். அவ்வாட்டிடையன் ஒரு தோல் சுருளை மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக கொண்டு போனான். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தைக் கவரக் கூடிய ஒன்றை தான் கண்டு பிடித்ததை அறிந்த போது அவனடைந்த வியப்பிற்கு அளவேயில்லை. வேத பண்டிதர்களும், பொருளாசைப் பிடித்த அராபியரும், அப்பகுதியை இப்போது அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அநேக இரகசிய நூல் நிலையங்களும் கண்டு பிடிக்கப்பட்டன. இத்தோல் சுருள்கள் அநேக லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ளவை.
தீவிர உணர்ச்சியையும், ஆவலையும் கிளரக்கூடிய இக் கும்ரான் குகைச் சுருள்கள் உலகம் எங்குமுள்ள வேதபண்டிதர்களைத் தட்டி எழுப்பிற்று. அச்சுருளிலுள்ள இரகசிய மொழியை நவீனகால மொழிஇலக்கணத்திற்கு ஏற்ற விதத்தில் மொழிபெயர்க்கும் பணி இப்போது நடந்துகொண்டிருக்கிறது.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகமடங்கிய தோல் சுருள் மிக மிக முக்கியமான ஒன்றாகும். அது எருசலேமிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கெய்கர் கணக்கிடும் கருவியை உபயோகித்து இச்சுருளானது கி.மு. 70ல் எழுதப்பட்டு இருக்கவேண்டுமெனக் கண்டுபிடித்துள்ளனர்.
வேதாகமம் பிழைகள் நிறைந்தது என்று வாக்கவாதம் செய்து கொண்டிருந்தவர்களின் வாயை அடைக்க இச்சுருள் பயன்பட்டது. மிகக்கவனமாக இச்சுருள்களைப் படித்து ஆராய்ச்சி செய்தபோது நமது கையிலுள்ள வேதாகமத்திற்கும் அவற்றிலுள்ள கருத்திற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. வேதாகமத்தை விரும்பி வாசிப்பவர்களுக்கு ஒரு உற்சாகமூட்டும் செய்தியாக அமைந்தது.
தேவனுடைய வார்த்தை ஒரு பாறை போன்றது. அது ஒருநாளும் அசையாது.
வேதத்திற்கு விரோதமான விமர்சனங்கள்:
நான் இத்தனை காரியங்களைக் கூறியதற்குப் பின்னும் நீங்கள் கூறலாம். நல்லது ஐயா! உங்களைப் பார்க்கிலும் படிப்பறிவில் சிறந்த அநேகர் வேதாகமம் மனிதால் எழுதப்பட்ட ஒன்றுதான் என்றும், பிழைகள் நிறைந்தது என்றும் கூறுகிறார்களே. அவர்கள் தங்களது கூற்றை நிரூபிக்கமுடியும் என்றும் கூறுகிறார்களே. அவர்கள் தங்களது கூற்றை நிரூபிக்கமுடியும் என்று சவால் விடுகிறார்களே.
நீங்கள் மேற்கண்டதுபோலக் கூறுவீர்களாயின் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? இப்படி விவாதிக்கும் மனிதர்களில் யாராவது ஒருவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து அன்போடும், பயபக்தியோடும் பேசுவதை நீங்கள் கேட்டதுண்டா?
நான் சொல்லுவதை தயவு செய்து நம்புங்கள். இவர்கள் விமரிசனம் என்கிற பெயரில் தாங்கள் செய்வதெல்லாம் சரியென்று நிரூபிக்க முயலுகிறார்கள். தேவனுடைய வார்த்தையின் வல்லமையை அதிலிருந்து மாற்றவே இவ்வளவு காரியங்களையும் செய்கிறார்கள். தேவனையும், தேவகுமாரனையும் அவர்கள் வெறுக்கிறார்கள் (யோ.15:22-24). ஏனெனில் மனிதன் பொல்லாதவன் (யோ.7:7) என்றும் அவனுக்கு தேவனின் உதவி தேவை என்றும் அவர் கூறுவதால் தான். மனிதனுடைய அகக் கண்கள் திறக்கப்படும் வரை அவன் தேவனையே சார்ந்திருக்கவேண்டும் என நினைக்கும்பொழுதோ அவன் மனிதகுமாரன் உலகத்திற்கு வந்தார் என்றும், அவர் தனக்காக மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்றும் நம்புகிறான். அதுவரை அவர் செய்த அற்புதங்களை நம்பாதவன் அக்கணம் முதல் நம்பத் தொடங்குகிறான். தேவ ஆவியானவரின் நடத்துதலால் வேதாகமம் தேவனால் அருளப்பட்ட தேவவார்த்தையே என விசுவாசிக்கிறான்.
மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகம்
இவ்வுலகில் ஏறத்தாழ 2000 மொழிகள் பேசப்பட்டுவருகின்றன. ஏறக்குறைய 1200 மொழிகளில் பரிசுத்த வேதாகமமானது முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வசந்தத்தோடு வந்த தூய்மை
அவனது படுக்கையறை பார்க்கவே அசிங்கமாக இருந்தது. அரை நிர்வாணப்படங்கள் அவ்வறையின் சுவர்களை அலங்கோலப்படுத்திக்கொண்டிருந்தன.
ஒரு நாள் அவனுடைய மாமா அவனைக் காண வந்தார். அவர் ஒரு நல்ல ஓவியர். அவ்வறையின் அலங்கோலத்தைக் கண்ட அவர் ஒரு நிமிடம் ஒன்றுமே பேசாமல் நின்றார். அவர் அவ்வறையை விட்டுப் போகும் வரை அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை.
சில நாட்களுக்குப் பின் அவர் ஒரு அழகான ஓவியத்தை அவனுக்கு அனுப்பி வைத்தார். அவ்வழகிய ஓவியத்தை மாட்டுவதற்காக தனது அறையிலுள்ள சில அரை நிர்வாணப்படங்களை அப்புறப்படுத்தினான். அந்த ஓவியத்திற்கு ஒவ்வாத ஒவ்வொரு ஆபாசப்படத்தையும் அப்புறப்படுத்தித் தீர்ந்தபோது அவனுடைய அறையை அவ்வழகிய ஓவியம் மாத்திரமே அலங்கரித்தது.
நீங்களும் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்குவீர்களானால் உங்கள் இதய அறையிலுள்ள ஆபாசப்படங்கள் மட்டுமல்ல உங்களது வீட்டுச் சுவர்களை அலங்கோலமாக்கிக் கொண்டிருப்பவைகளும் உங்களது புத்தக அலமாரியிலுள்ள அருவருப்பான புத்தகங்களும் மறையத் தொடங்கும்.
உங்களது இதயத்தின் இருண்ட அறைகளிலுள்ள சில கேடுபாடுகளும் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளுமானால் வியப்பில்லை.
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2.கொரி.5:17).
மாய வித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டு வந்து எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள். அவைகளின் கிரயத்தைத் தொகை பார்த்து ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது(அப்.19.19-20).
எவ்வளவு நேரம் தேவை ?
வேதாகமத்தை வாசித்து முடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும்? தமிழ் வேதாகமத்தில் 3 556 480 எழுத்துக்களும், 810 697 வார்த்தைகளும் 31 173 வசனங்களும் உள்ளன.
பழைய ஏற்பாட்டை ஒரே மூச்சில் வாசித்து முடிக்க 38 மணி நேரமும், புதிய ஏற்பாட்டை வாசித்து தீர்க்க 11 மணி நேரமும் ஆகிறது. 49 மணி நேரத்திற்குள் வேதாகமம் முழுமையாக வாசித்து முடித்து விடலாம். நான் பேசும் வேகத்தில் வேதாகமத்தை உரக்க வாசித்து முடிக்க வேண்டுமானால் 70 மணி நேரம் தேவைப்படும். தினசரி நான்கு அதிகாரங்கள் வீதம் வாசித்தால் ஒரு வருடத்திற்குள் (365 நாட்கள்) வேதாகமத்தை முழுமையாக வாசித்து விடமுடியும்.
உங்களை உற்சாகப்படுத்தும் வேறு சில விவரங்கள்:
வேதப்புத்தகத்தினுள்ளே:
சரித்திரப் புத்தகங்கள் – 17, பாடல் புத்தகங்கள் – 5 , தீர்க்கதரிசனப் புத்தகங்கள் 17, சுவிசேஷங்கள் 4 , நிருபங்கள் 21 , வெளிப்படுத்தின விசேஷம் 1 ஆக மொத்தம் 66 புத்தகங்கள்.
பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரங்கள். பதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்கள். மொத்தம் 1189 அதிகாரங்கள். கர்த்தர் என்ற வார்த்தை 6853 தடவை வருகிறது.
வேதாகமத்தில் நீண்ட அதிகாரம் – சங்கீதம் 119. வேதாகமத்தில் மிகச் சிறிய அதிகாரம் – சங்கீதம் 117. தமிழ் வேதாகமத்தில் நீண்ட வசனம் – தானியேல் 5:23. ஆங்கில வேதாகமத்தில் நீண்ட வசனம்: எஸ்தர் 8:9. தமிழ்: வேதாகமத்தில் மிகச் சிறிய வசனம் – யோவான் 11:35. வேதாகமத்தில் மத்திய அதிகாரம் சங்கீதம் 117.
பழைய ஏற்பாட்டின் மத்திய வசனம் – 2. நாளா.20:18
புதிய ஏற்பாட்டின் மத்திய வசனம் அப்போஸ்தலர் 17:17
ஆங்கில வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டில் 592 439 வார்த்தைகளும், புதிய ஏற்பாட்டில் 181 259 வார்த்தைகளும் உள்ளன. (முiபெ துயஅநள ஏநசளழைn).
வேதாகமம்
மிகச் சுவாரசியமான ஒரு புத்தகம் !
அம்மா, அம்மா, தயவு செய்து வாசிப்பதை நிறுத்தாதீர்கள். தொடர்ந்து வாசியுங்கள் அம்மா. சிறுமியின் குரலில் தான் எத்தனை ஆர்வம்.
அம்மா அந்தக் கதை மிகவும் நன்றாக இருக்கிறதம்மா, அதை வாசித்து முடிக்க மாட்டீர்களா?
ஆம். அந்தப் பெண்மணி வாசித்துக் கொண்டிருந்தது யோசேப்பின் சரித்திரத்தத்தைத்தான். யோசேப்பு தன் சகோதரரால் வெறுக்கப்பட்டதையும், ஒரு குழியில் போடப்பட்டதையும், பின்னர் அக்குழியிலிருந்து தூக்கி எடுக்கப்பட்டு எகிப்தியர்களிடம் ஒரு அடிமையாக விற்கப்பட்டதையும் அந்தப் பெண்மணி வாசித்துக் காண்பித்தாள்.
நிரபராதியான யோசேப்பு பின்னர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. ஆனால் முடிவில் எகிப்திய மன்னனாகிய பார்வோனுக்கு அடுத்த இடம் அவனுக்குக் கிடைத்தது. பஞ்ச காலத்தில் அவன் தனது குடும்பத்தை மாத்திரமல்ல, அந்நாட்டிலுள்ள அனைவரையும் அவன் காப்பாற்றினான்.
வேதம் முழுவதும் இப்படிப்பட்ட சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.
அவர்கள் அக்கினிச் சூளையில் எறியப்பட்ட போதிலும் அவர்களுக்கு ஒரு சேதமுமுண்டாகவில்லை.
வேதாகமம் மெய்யாகவே ஒரு சுவாரசியமான புத்தகம்தான். சிறு பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, வாலிபர்களுக்கும் வாலிபப் பெண்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகமே அது!
கொள்ளைக்காரிக்கு ஒரு கடிதம்
சிகாகோ நகரிலுள்ள கொள்ளைக் கும்பலில் அவளும் ஒரு அங்கமானாள். ஆரம்பத்தில் அவளுக்கு உற்சாகமாயிருந்தவையெல்லாம் நாட்கள் செல்ல செல்ல அவளை வெறுப்படையச் செய்தன.
தனது காதலர்களுடனும், தோழிகளுடனும் மனம் போன போக்கிலே அவள் வாழத் தொடங்கினாள். ஆனாலும் அவளுடைய இதயத்தின் ஆழத்தில் ஒரு வேதனை. தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு மகளின் பிரிவு உணர்வே அது!
அவள் வீட்டை விட்டுப் போனது முதல் அவளது தாயார் அவளது வருகைக்காக் காத்திருக்கிறார்கள். தனது மகளிடம் எப்படிப்போவது? அன்பு அதற்கான வழியைக் கண்டு பிடித்தது. தனது மகளுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். அனால் கடிதத்தை எங்கே அனுப்புவது? அநேக வருடங்களாகப் போலீசாரால் கூட அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவளுடைய தாயார் தனது துக்க முகத்தைப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் கீழே இப்படி எழுதினார்கள்.
வீட்டிற்குத் திரும்பி வா !
உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். – அம்மா
கொள்ளையர்கள் மதுவருந்த வரும் மதுபானக் கடைகளிலெல்லாம் அச்சுவரொட்டிகளை அவர்களது அனுமதியோடு ஒட்டி வைத்தார்கள்.
இதனால் ஏதாவது பலனுண்டா? தன்னுடைய மகள் அதைப் பார்ப்பாளா, படிப்பாளா? அவள் பதில் எழுதுவாளா?
வீட்டிற்குத் திரும்பி வா !
உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் – அம்மா
நள்ளிரவு நேரம். இரவு விடுதி உன்றில் ஜாஸ் இசை முழங்கிக்கொண்டிருக்கிறது. இருண்ட எதிர்காலத்தை தன் உடைந்த உள்ளத்தில் சுமந்துகொண்டு ஓரிளம் பெண் அவ்விடுதிக்குள் கடந்து செல்கிறாள். திடீரென்று தனது தலையின்மேல் இடி விழுந்தது போல அவள் திடுக்குற்று நிற்கிறாள். ஆ…. அந்தச் சுவரின் மேலுள்ள புகைப்படம் அந்த வயதான முகம்…… தன் தாயினுடையதல்லவா?
வீட்டிற்குத் திரும்பி வா!
உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – அம்மா
அனைவருடைய இதயங்களையும் கிழித்து விடுவதைப் போல ஒரு வேதனைக்குரல் அவ்விடுதியை நிறைத்தது.
சில மணி நேரங்களுக்குள் அவள் தனது வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள்.
ஏழு வார்த்தைகள் மாத்திரமே!
இந்த ஏழு வார்த்தைகளே வேதாகமத்தின் கருப்பொருள்.
வீட்டிற்குத் திரும்பி வா!
உன்னை நேசிக்கிற ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார்!
உனக்காக !!!
இவ்வுலகிலேயே மிகப் பெரிய வேதாகமம்
லாஸ் ஏஞ்செல்ஸ் பட்டணத்திலுள்ள ஒரு தச்சன் இரண்டு வருடங்கள் இரவு பகலாக உழைத்து மரப்பலகைகளால் ஒரு வேதாகமத்தைச் செய்து முடித்தார்.
ஒவ்வொரு பக்கமும் 3 அடி உயரமுள்ள பலகையால் செய்யப்பட்டது. அதில் எழுத்துக்கள் உளி வெட்டாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவ் வேதாகமத்திற்கு 8048 பக்கங்களுண்டு. இதன் மொத்த எடை 1206 பவுண்டு. இதன் பருமன் 8.2 அடியாகும். 23ம் சங்கீதம்
தாவீதின் சங்கீதம்
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
வாலிபர்களுக்கும், வாலிபப் பெண்களுக்கும் உரிய சங்கீதம் இது. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் என்று இளைஞர்கள் கூறுவதைப் பார்க்கிலும் சிறந்தது வேறேதும் உண்டோ? இது முதிர் வயதுள்ளவருக்கும் உரிய ஒரு சங்கீதமாகும். சிறப்பாக மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு!
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்.
இவ்வுலகத்திற்காகவே எழுதப்பட்ட புத்தகம்
நாற்பது எழுத்தாளர்களால் எழுதப்பட்டது !
நூற்றுக்கணக்கானவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களால் அச்சடிக்கப்பட்டது.
இலட்சக்கணக்கானவர்கள் வாசிக்கப்பட்டது.
1534ல் மார்ட்டின் லூத்தர் Nஐர்மனிய மொழியில் வேதாகமத்தை அச்சிட்டு வெளியிட்டபோது எறத்தாழ 15 மொழிபெயர்ப்புகள் புழக்கத்தில் இருந்தன. 1600ல் 40 மொழிபெயர்ப்புகளும், 1700ல் 52 மொழிபெயர்ப்புகளும் நடைமுறையில் கையாளப்பட்டு வந்தன. அது முதல் அநேக மிஷனரிச் சங்கங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் ஏற்பட்டதின் விளைவாக அநேக மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்காங்கு பணிபுரியும் மிஷனறிகள் அவர்களுடைய பணித்தளத்திற்கு பேசப்படும் மொழிகளில் வேதாகமம் தேவை எனக் கூறியதும், அநேக மொழிபெயர்ப்புகள் வெளிவரக் காரணமாயிற்று. பன்மொழிப் புலவர்கள் இம்மொழிப் பெயர்ப்பு வேலையில் ஈடுபட்டனர்.
1661ல் வடக்கு அமெரிக்காவிலுள்ள ஒரு இந்திய மொழியில் வேதாகமம் வெளியிடப்பட்டது.
பின்பு எத்தியோப்பிய மொழியிலும், தமிழ் மொழியிலும் வேதாகமங்கள் வெளியிடப்பட்டன. 1744ல் கிரீன்லாந்திலுள்ள எஸ்கிமோக்களுக்கு அவர்களது மொழியிலேயே வேதாகமம் கிடைத்தது.
சில மொழிபெயர்ப்பாளர்கள் மூன்று வருடங்களுக்குள் முழு வேதாகமத்தையும் மொழியாக்கம் செய்துவிடுவர். சிலர் ஆயுட்காலம் முழுவதும் கடினமாக உழைக்க நேரிடும். அவர்கள் கையாளும் மொழி மிகக் கடினமானதாக இருப்பதால் தான் அவ்வளவு காலதாமதம் நேரிடுகிறது.
வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டுள்ள எல்லா மொழிகளின் பெயரும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக இன்செங்கா, இம்போட்டோ, ஓமியன், பிரை-பாஸா, பொனேரி – கௌவன் போன்றவை.
கி.பி. 1800ல் 75 மொழிபெயர்ப்புகளும் 1900ல் 567 மொழிபெயர்ப்புகளும் 1953ல் 1167 மொழிபெயர்ப்புகளும் நடப்பில் இருந்தன. இப்பொழுது 1200 மொழிபெயர்ப்புகள் கையாளப்பட்டு வருகின்றன.
பேசுவதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு ?
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
ஒரு புத்தகத்திலாவது நாம் இப்படிப்பட்ட சொற்றொடரைக் காண்பதில்லை. பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே இச் சொற்றொடர் நூற்றுக்கணக்கான முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மல்கியா என்றழைக்கப்படும் ஒரு சிறிய நூலில் மட்டும் 24 முறை இச் சொற்றொடர் வருகிறது. 22 முறை சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் எனும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பரிசுத்த வேதாகமம் வலியுறுத்திக் கூறுவதென்ன? இங்கே தேவன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதே!
இது உண்மையல்ல என்றால் வேதாகமம் பச்சைப் பொய்களால் பின்னப்பட்ட ஒரு புனைந்துரையாகும். நாம் இங்கே ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். என்ன அது ?
வேதாகமத்திற்கு நூற்றுக்கு நூறு தேவனால் அருளப்பட்ட சத்திய வசனங்கள் அடங்கிய ஒன்று. இல்லையேல் அது இவ்வுலகிலேயே மிகவும் மோசமான பொய்கள் நிறைந்த ஒரு புத்தகம்.
நீங்கள் விஷம் குடித்ததுண்டா ?
விஷம் மிகவும் அபாயகரமானது என்று நாமனைவரும் அறிவோம். விஷம் அபாயகரமானதா என்று தெரிந்து கொள்ள நான் அதைக் குடித்துப் பார்க்கவேண்டும் என்று யாராவது கூறினால், அவா எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கவேண்டம்? தீமை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக மோசமான புத்தகங்களையும் வாசித்துப் பார்க்கவேண்டும் என்று அறிவுரை கூறியவர்களும் அப்படிப்பட்ட முடர்களே.
சிறந்தவோர் அறிவுரை:
விஷம் குடிக்காதே !
உங்களது வீட்டில் கீழ்தரமான புத்தகங்களை வைக்க வேண்டாம். நல்ல புத்தகங்களையே வாசியுங்கள்.
விசுவாச வீரர்களின் சரித்திரங்களையும், கர்த்தருக்கென்று பெரிய காரியங்களைச் செய்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் வாசியுங்கள். இவர்கள் வேதத்தைக் குறித்து என்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்றும் படித்துப் பாருங்கள்.
ஆனால், இச் சிறிய புத்தகங்கள் போலும் வேதாகமத்தின் சிறப்பை கவர்ந்தெடுக்க முடியாது. அதற்கு ஈடும் இல்லை. இணையும் இல்லை. வேதாகமத்திற்கு என்றும் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் முதலிடம் கொடுங்கள்.
ஒரு காதல் கடிதம்
அவ்விளவரசிக்கு அன்று பிறந்தநாள். அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் வாலிபன் ஒரு உருண்டைப் பொட்டலத்தை அன்பளிப்பாக அனுப்பியிருந்தான்.
அதைத் திறந்து பார்த்த போதோ….. அவள் கண்டது… ஒரு பீரங்கிக் குண்டு.
அவள் கோபத்துடன் அதை மூலையில் எறிந்தாள். ஆனால் சம்பவித்தது என்ன? அது வெடித்து அதற்குள்ளிருந்து வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு குண்டு வெளிப்பட்டது.
அதைத் தன் கைகளால் எடுத்து மெதுவாக அழுத்தியபோது தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பெட்டி வெளியே வந்தது.
அதைத் திறந்தபோதோ வெல்வெட் துணியின் மீது வைக்கப்பட்டிருந்த வைரங்கள் பதிக்கப்பட் ஒரு அழகிய மோதிரத்தைக் கண்டாள். அத்துடன் ஒரு சிறு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.
நான் உன்னை அதிகமாக நேசிப்பதால்…..
அவ்விளவரசி எப்படிக் கோபப்பட்டாளோ அதைப் போலவே நாமும் சில வேளைகளில் நடந்து கொள்கிறோம். நாம் வேதாகமத்தை விரும்புவதில்லை. நம்மால் புரிந்து கொள்ளமுடியாத, அறிவுக்கு எட்டாத காரியங்கள் அதில் எழுதப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் அதைக் கவனமாக வாசிப்பவர்களுக்கு அழகான, விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. அவர்கள் தேவனுடைய அன்பின் செய்தியை, தெய்வீகப் பேரன்பைப் புரிந்து கொள்கின்றனர்.
வேதாகமத்தின் தெய்வீக அன்பின் செய்தி இதுதான்.
நான் உன்னை அதிகமாக நேசிப்பதால்…..
நல்லவோர் நிரூபணம் !!!
ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழம் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது வேதாகமத்தை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே.
ஓருமுறை ஒரு வாடிக்கையாளர்கள் கேட்டார். எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்துக் கொண்டிருக்கிறாய்?
ஐயா, இது தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள் அவள்.
ஏனம்மா, இது தேவனுடைய வார்த்தைதான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா? வாடிக்கையாளர் வியப்போடு வினாவினார்.
அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா என்றாள் அவள். தேவன் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?
சற்று நேரம் அவள் நிலைதடுமாறினாள். வேதாகமம் தேவனுடைய வார்த்தைதான் என நிருபிக்கவேண்டுமே.
அவள் திடீரென வானத்தை அண்ணாந்து பார்த்து சூரியனைச் சுட்டிக்காட்டி , ஏனய்யா அது சூரியன்தான் என்று உங்களால் நிரூபிக்கமுடியுமா? என்று கேட்டாள்.
அது சூரியன்தான் என்று நிரூபிப்பது எளிதான காரியம். அது ஒளியையும் வெப்பத்தையும் அளிக்கிறதே என்றார் அவர்.
உண்மைதான். வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதற்கான நிரூபணமும் இதுதான். அது என் உள்ளத்திற்கு அனலையும் வெளிச்சத்தையும் அளிக்கிறது. மகிழ்ச்சியோடு பதிலுறுத்தாள் அவள்.
வேதாகமத்தில் முரண்பாடுகள் கிடையாது
விஞ்ஞானக் கருத்துகளும், தொல்பொருள் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புகளும் பொருளியல், பூமி அமைப்பியல், வானவெளி ஆராய்ச்சி – இவை போன்றவற்றின் கண்டுபிடிப்புகளும், வேதாகமத்திற்கு முரண்பட்டவை அல்ல. வேறு எப்படி இருக்கமுடியும்?
இப் பிரபஞ்சத்தை உருவாக்கியவர் தன்னுடைய சிருஷ்டிப்பிற்கு முரண்பட்ட காரியங்களை எப்படி கூறுவார்? வேதாகமம் பரிபூரணமான ஒன்றே !
சுத்தப் பொன்னிற்கு தங்கமூலாம் தேவையா?
மாணிக்கங்களின் மேல் சிவந்த சாயம் பூச வேண்டுமா?
வேதாகமத்தைச் சிறப்புள்ளதாக்க அதோடு வேறு ஒன்றையும் கூட்டிச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சூரியனைக் காண்பதற்கு யாராவது விளக்கேற்றி வைப்பார்களா?
சூரியனுக்கு தான்தான் சூரியன் என்று நிரூபிக்க வேண்டிய தேவையுமில்லை.
வேதாகமும் அப்படித்தான். அது தேவனுடைய முத்திரையால் முத்திரையிடப்பட்டிருக்கிறது.
நீங்கள் வேதாகமத்தை வாசிக்க நேரம் ஒதுக்குகிறீர்களா?
இரட்சிக்கப்படும்படியாக நேரத்தை செலவழிக்க உங்களுக்கு மனதுண்டா?
ஜெபிப்பதில் நேரத்தைச் செலவழிக்கிறீர்களா?
வாழ்வு மிகக் குறுகினது. ஒரு திரைப்படம் போல அது வேகத்தில் கடந்து செல்கிறது. உங்களது வாழ்வில் மிகத் தாமதமாகிவிட்டது எனக் கூறவேண்டிய நிலை வருமா?
தீங்கு நாட்கள் வராததற்கு முன்…… நீ உன் வாலிபப் பிராயத்தில் சிருஷ்டிகரை நினை (பிர.12:1).
விந்தையே இந்த வேதத்தின் அமைப்பு
வேதத்தின் முதல் ஐந்து ஆகமங்கள் பஞ்சாகமம் என்றழைக்கப்படுகின்றன. வேதாகமத்தின் முழுத்திட்டத்தையும், அமைப்பையும் இவை எடுத்துக்காட்டுகின்றன. வேதாகமம் எழுதப்பட்டுள்ள விதத்தை விளக்கும் மாதிரியாக இவை உள்ளன என்றால் மிகையாகாது.
ஆதியாகமம் சிருஷ்டிப்பை மையமாகக் கொண்டு இயங்கி, ஏழு பரிசுத்தவான்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது. தொடக்கங்களின் தொன்னூலாகிய இது வேதாகமத் திட்டத்தின் வித்து என்றழைக்கப்படுகிறது. சகல உபதேசங்களுக்கும் தேவையான விதையை இதிலே காணலாம். இதுவே இதன் தனிப்பண்பு.
யாத்திராகமம், மீட்பை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது. அடிமைகள் மீட்கப்பட்டு, ஆண்டவரோடு இணைந்து வாழ தேவவல்லமையும், இரத்தமும் அடிப்படையாக அமைவதை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இவ்வாகமத்தின் பின்பகுதி தேவனுடைய வாசஸ்தலம் மனிதருக்கிடையே அமைக்கப்படுவதை அழகாக விளக்குகிறது. தேவ-மனித உறவு மீட்பின் அடிப்படையில் அமைவதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
லேவியாராகமத்தில் தேவனுடைய ஆலயத்தின் அலங்காரமாயிருக்கும் பரிசுத்தத்தை மானிடர் அடையத் தேவையான பலிகளைக் குறித்துப் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தனிச் சிறப்பையும், பாவ பரிகாரக் கிரியையையும் நிழலோவியங்களாகத் தீட்டுகிறது அது!
எண்ணாகமத்தில் தேவஜனத்தின் வனாந்திர வாழ்க்கையும், தேவனுடைய கரங்கள் அவர்களை அரவணைத்துப் போற்றிப் பாதுகாப்பதையும் காணவியலும் சோதனையில் வீழுந்து போகும் மனிதர்களையும் மாறாத தேவ இரக்கத்தையும் இதில் காணலாம்.
உபாகமத்தில் அவர்களது வனாந்திர யாத்திரையின் ஆரம்பம் முதல் நடந்த காரியங்களின் நினைவு கூருதலைக் காணலாம். தேவன் அவர்களை நடத்திய விதத்தையும், அவர்களது பலவீனங்களையும், வீழ்ச்சிகளையும் திரும்பி நோக்கிப் பார்க்கச் செய்கிறார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் பிரவேசிக்கும் முன் அவரது இரக்கங்களையும், நற்குணத்தையும் எண்ணிப் பார்த்து கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளும்படி அவர்களை அறிவுறுத்துகிறார்.
சுருங்கக் கூறின் பஞ்சாகமம் விளக்கும் கருத்துக்கள் பின்வருமாறு:
1. ஆதியாகமம் – தொடக்கம், முதல் நிலை
2. யாத்திராகமம் – மீட்பு, ஆன்மீக உறவு
3. லேவியராகமம் – தேவனுடைய வாசஸ்தலத்துக்குள் பிரவேசம்
4. எண்ணாகமம் – வானாந்திர யாத்திரை
5. உபாகமம் – மனிதனோடுள்ள தேவனுடைய மதிப்புரை
முழு வேதாகமமும் இத்திட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளது. அதாவது முதலாவதாக தொடக்கம். இரண்டாவதாக மீட்பும், ஐக்கியமும். மூன்றாவதாக தேவனுடைய வாசஸ்தலத்துக்குள் பிரவேசம். நான்காவதாக வனாந்தர யாத்திரை. ஐந்தாவதாக மதிப்புரை! எனவே முழு வேதாகமமும் ஒரு பஞ்சாகமம் எனில் முதல் ஐந்து நூல்களை பஞ்சாகமங்களின் பஞ்சாகமம் என அழைப்பதில் தவறில்லையே? இம் முதல் தொகுதியில் சகலவற்றின் தொடக்கங்களும் காணப்படுவதால் இத்தொகுதியை பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் என்றழைக்கப்படுகிறது.
சரித்திரப் புத்தகங்களின் பஞ்சாகமம்
சரித்திரப் புத்தகங்களின் முதல் நூலாகிய யோசுவா இஸ்ரேல் நாடு பிறப்பதை உருவாவதைக் கூறுகிறபடியால் அதுவே சரித்திரப் புத்தகங்களின் ஆதியாகமம்.
நியாயதிபதிகள், ரூத், இவையிரண்டும் இஸ்ரவேலர் அடிமைத்தனத்துக்கு உட்படுவதையும், தேவன் அவர்களை மீட்கும் விதத்தையும் காட்டுவதால் இவை சரித்திர நூல்களின் யாத்திராகமம்.
1.சாமுவேல், 2.சாமுவேல் 1.இராஜாக்கள், 2.இராஜாக்கள் இவை நான்கும் ஆசாரிய ஊழியம், சீலோவிலுள்ள கர்த்தருடைய வாசஸ்தலம், எருசலேமிலுள்ள தேவாலயம், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் இவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதால் இவற்றைச் சரித்திர நூல்களின் லேவியராகமம் எனலாம்!
சிறையிருப்பு நூல்களான எஸ்றா, நெகேமியா, எஸ்தர் என்பவை சோதனைகளில் விழுந்துபோன இஸ்ரவேலர், வனாந்தரத்திலே தேவனால் தண்டிக்கப்பட்டதை நினைவூட்டும் எண்ணாகமாக அமைக்கின்றன.
1.நாளாகமம், 2.நாளாகமம் இவை இரண்டும் தேவன் இஸ்ரவேலுக்கு சரித்திரத்தை மறுபடியும் நினைவூட்டி கீழ்ப்படிதலுக்கு அழைப்புக்கொடுக்கும் உபாகமமாக அமைகின்றன. இவ்விரண்டாம் தொகுதியில் (யோசுவா – எஸ்தர்) அடிமை நுகத்துக்கு உட்படுதலும், அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்படுதலும் திரும்பத் திரும்ப கூறப்படுவதால், இத் தொகுதி யாத்திராகமத்திற்கு ஒத்திருக்கிறது.
தீர்க்கதரிசன புத்தகங்களின் பஞ்சாகமம்
எபிரெய வேதாகமத்தில் செய்யுட் புத்தகங்கள் தீர்க்கதரிசன ஆகமங்களுக்குப் பிறகே வருகின்றன. எனவே முதலாவதாக தீர்க்கதரிசன நூல்களைக் குறித்து சிந்திப்போம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், பழைய ஏற்பாட்டைக் குறித்துப் பேசும்போது மோசேயின் நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசிகளின் ஆகமங்கள், சங்கீதங்கள் எனும் வரிசையிலேயே குறிப்பிட்டார் (லூக்.24:44).
ஏசாயா தீர்க்கதரிசின ஆகமங்களின் இளவரசனாகும். அதுவே சிறு விவிலியம்தான். தேவே ஆசீர்வாதங்களுக்கும், ஆலோசனைகளுக்கும், ஆற்றலுக்கும் மூலமுதல்வர் என்று தொடக்கங்களைக் குறித்த சத்தியங்களை வெளிப்படுத்தும் ஆதியாகமாக அது அமைகிறது. புதிய வானம், புதிய பூமி சிருஷ்டிக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆதியாகமம் அது.
எரேமியா, புலம்பல் இவ்விரண்டிலும் யாத்திராகமத்தின் நெடியை உணராமல் இருக்க முடியாது. பாவத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பையும், மீட்பையும், எரேமியாவின் மூலம் தேவன் வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.
எசேக்கியேல் சுத்திகரித்தலையும், வாசஸ்தலத்தையும் குறித்து விளக்கும் லேவியராகமமாக அமைகிறது. வாசஸ்தலத்தை தீட்டுப்படுத்தும் நபர்களையும், பொருட்களையும் அகற்றி விடாதபடியால் வாசஸ்தலமே (கர்த்தடைய மகிமை) அவர்கள் மத்தியிலிருந்து அகற்றப்பட்டு விடுகிறது.
தானியேல் வனாந்திர வாழ்வை விளக்கும் எண்ணாகமமாகத் திகழுகிறது. புறஜாதியாருக்கிடையில் தானியேல் வாழுகிறான். தானியேலின் புத்தகத்திலே காலங்களைக் குறித்தும், சோதனையில் விழுந்து போகும் புறஜாதியாரைக் குறித்தும் வாசிக்கிறோம். எண்ணாகமத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பத்தைப் போல சங்கரிக்கப்படப்போகும் மேசியா (தானி.9:26) இதிலே அறிமுகப்படுத்தப்படுகிறார்.
சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களாகிய ஒசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா இவை பன்னிரண்டும் உபாகமத்தைப் போன்றே தேவனுடைய வழிகளையும் அவரது ஆளுகையையும் மனிதருடைய வீழ்ச்சிகளையும் மறுபடியும் அவர்களுக்கு நினைவூட்டுபவையாக அமைகின்றன.
இம் மூன்றாம் பிரிவாகிய தீர்க்கதரிசன நூல்கள் தேவனுடைய வாசஸ்தலத்தை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளபடியால் இப்பிரிவை பழைய ஏற்பாட்டின் லேவியராகமப் பகுதி எனலாம்.
கவிதை நூல்களின் பஞ்சாகமம்
அனுபவ ஊற்றுகளில் உருவாகி, அறிவு வாய்க்கால்களாக வழிந்தோடி, ஞானக்கடலில் சங்கமிக்கும் கவிதைகளின் தொடக்கமாக சங்கீதங்கள் அமைவதால் அவை ஆதியாகமத்தின் ருசியைப் பெற்றுள்ளன.
இரண்டாவதாக அமையும் யோபு தேவபிள்ளையின் பாடுகளையும், மீட்பர் அவனை மீட்பதையும் அதன் மூலமாக அவன் படித்த பாடங்களையும் கூறும் யாத்திராகமமாக அமைகிறது.
உன்னதப்பாட்டு நம்மை தேவப்பிரசன்னத்திற்கே அழைத்துக்கொண்டு போகிறது. ஜீவபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்த மணவாட்டி மணவாளனைத் துதித்து தன் உதடுகளின் காளைகளைச் செலுத்தும் லேவியராகமம் அதுவே!
பிரசங்கி சகலவற்றையும் சோதித்துப் பார்த்து விரக்தியோடு மாயை மாயை எல்லாம் மாயை என்று வனாந்திர யாத்திரையைக் குறித்துக் கூறி எண்ணாகமத்தின் சிறப்பை பிரசங்கியின் புத்தகத்திற்குத் தருகிறார்.
மனித வாழ்வை விமர்சித்து மறுபடியும் அவனைச் சில காரியங்களை நினைவு கூரச் செய்து அறிவுரையையும், ஞானத்தையும் நல்கும் உபாகமாக நீதிமொழிகள் அமைகிறது.
நான்காம் பஞ்சாகம வரிசையான கவிதை நூல்கள் சோதனை, பரீட்சைக்குள்ளாகக் கடந்து செல்லும் மனிதர்களின் அனுபவங்களைக் கொண்டதாகையால் இந்த நான்காம் தொகுதி எண்ணாகமத்தின் மணத்தையும், சுவையையும் பெற்றிருப்பது இயல்பே !
நம்மை வியப்படையச் செய்யும் வேறொரு செயல் என்னவெனில், மனிதருடைய பாடுகள் நிறைந்த அனுபவங்கள் எக்காலத்திலும் கவிதைகளாகவே உருவெடுக்கின்றன. இந்த வனாந்திரயாத்திரையில் நாம் அனுபவிக்கும் பாடுகள் இராக் காலத்திலும் நம்மைக் கீதம் பாடச் செய்யவேண்டும் எனும் பெரிய சத்தியத்தை தேவன் அவற்றின் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறார் (சங்.119:54).
சங்கீத புத்தகத்தை பஞ்சாகமாகப் பிரிக்கலாம்.
1. சங்கீதம் 1-41 ஆதியாகமம்
2. சங்கீதம் 42-72 யாத்திராகமம்
3. சங்கீதம் 73-89 லேவியாராகமம்
4. சங்கீதம் 90-106 எண்ணாகமம்
5. சங்கீதம் 107-150 உபாகமம்
சங்கீதப் பகுதிகளை பஞ்சாகமமாக நீங்களே தியானித்துப் பாருங்கள். அடுத்த இதழில் புதிய ஏற்பாட்டின் பஞ்சாகம அமைப்பைக் குறித்துத் தியானிப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
புதிய ஏற்பாடு
மண்ணானவனாகிய முந்தின ஆதாமைக் குறித்தும் மாம்சத்தின்படி அவனிலிருந்து தோன்றிய மனிதரைக் குறித்தும் பழைய ஏற்பாடு விவரிக்கிறது.
உயிர்ப்பிக்கிற ஆவியான பிந்தின ஆதாமைக் (1.கொரி.15:45) குறித்தும், ஆவியினாலும் ஜலத்தினாலும் மறுபடியும் பிறந்த அவரோடு இணைக்கப்படுபவர்களைக் குறித்தும் புதிய ஏற்பாடு விவரிக்கிறது.
ஆதியாகமம்
கிறிஸ்துவோடு தொடங்கும் புதிய துவக்கத்தை விளக்கும் ஆதியாகமமாக நான்கு சுவிசேஷங்களும் திகழுகின்றன. பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதியாகமத்தில் காணப்படுவது போல ஏழு முற்பிதாக்களின் சரித்திரம் புதிய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் காணப்படவில்லை. துதிக்குப் பாத்திரராகிய ஒருவரின் துவக்கத்தை விளக்கவே, நான்கு சுவிசேஷங்களும் நான்கு கண்ணாடிகளாம். ஒவ்வொன்றும் கிறிஸ்துவானவரை ஒவ்வொரு கோணத்தில் பிரதிபலிக்கின்றன. முழு உருவத்தையும் காண, புரிந்துகொள்ள நான்கு பிரதிபலிப்புகளையும் இணைத்துப் பார்த்தல் அவசியமாம்.
மத்தேயுவில் அவரைப் புறக்கணிக்கப்பட்ட ராஜாவாக தாவீதின் குமாரனாகக் காண்கிறோம். மாற்குவில் அவரை ஓர் உத்தம ஊழியக்காரனாகக் காண்கிறோம். தேவ மனிதனாக அதில் அவர் வெளிப்படுகிறார்.
லூக்காவில் அவர் பாவமற்ற பரிசுத்த மனிதனாக மனுஷ குமாரனாக வெளிப்படுகிறார். யோவானில் அவரை தேவகுமாரனாகத் தரிசிக்கிறோம்.
மன்னவன் மாடய் உழைப்பவன். மெய்யான மனிதன், மெய்த்தேவமைந்தன் எனும் மேசியாவின் நான்கு பண்புகளையும் நான்கு சுவிசேஷங்கள் எடுத்துக் கூறி புதிய ஏற்பாட்டின் ஆதியாகமமாகத் திகழுகின்றன.
யாத்திராகமம்
யூத மதத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று பரம கானானுக்குள் பயணம் செய்யும் விசுவாசிகளின் யாத்திராகமமே அப்போஸ்தலருடைய நடபடிகள். திருச்சபையின் மீட்பின் சரித்திரமே அது. புறஜாதியாரும் விக்கிர ஆராதனையிலிருந்தும் பேய் வணக்கத்திலிருந்தும் மீட்கப்பட்டு பரம கானானுக்குப் புறப்படும் யாத்திராகமமாக அது அமைகிறது.
இந் நிருபங்களையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் பிரிவு விசுவாசியின் நிலைமையையும், இரண்டாம் பிரிவு அவனது கடமையையும் விளக்கிக் கூறுகின்றன. லேவியாராகமத்திலும் இரு பிரிவுகள் உண்டல்லவா? முதற்பிரிவில் பலிகளைக் குறித்தும், பலிகளில் வெளிப்படும் கிறிஸ்துவானவரின் தன்மையைக் குறித்தும் காண்கிறோம். இரண்டாம் பிரிவிலோ சுத்திகரிப்பு. தேவனோடு இணைந்திருக்கத் தேவையான சட்டதிட்டங்களைக் குறித்தும் வாசிக்கிறோம். அது கடமையைக் குறித்துப் பேசும் பகுதியல்லவா?
பவுலடியாரின் நிருபங்களை இரு பிரிவுகளாக பிரிக்கும்போது ஒவ்வொரு பிரிவிலும் பஞ்சாகமத்தைக் காணவியலும்.
முதற் பிரிவு: கிறிஸ்தவனின் நிலைமை
ரோமர் அடிப்படை உண்மைகளைக் கூறும் ஆதியாகமம். கலாத்தியர் நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் யாத்திராகமம். உன்னதங்களிலே நம்மை உட்காரவைக்கும் எபேசியர் லேவியராகமமாகும். கொலோசியரும் அதன் துணை நூலான பிலேமோனும் இவ்வுலகில் கிறிஸ்துவோடு நாம் நடக்கும்போது உண்டாகும் சோதனைகளை விளக்கும் எண்ணாகமமே. பிலிப்பியர் அனைத்து உண்மைகளையும் மறுபடியும் உபதேசிக்கும் உபாகமமாக ஒளிவிடுகிறது.
இரண்டாம் பிரிவு: கிறிஸ்தவனின் கடமை
1-2 தெசலோனிக்கேயர் நிருபங்கள் கடமைக்கு ஆதாரமாக அமையும் உறவின் புதிய பிறப்பை விளக்கும் ஆதியாகமம்.
1-2 கொரிந்தியர் நிருபங்கள் மீட்பின் விளைவாக உண்டாகும் ஐக்கியத்தை விளக்கும் யாத்திராகமம்.
1-2 தீமோத்தேயு நிருபங்கள் சபைக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கும் எண்ணாகமமாகும். சோதனைகளைக் குறித்த குறிப்புகள் அவற்றில் உண்டு.
தீத்து அனைத்து சத்தியங்களையும் திரும்ப உபதேசிக்கும் உபாகமமாக அமைகிறது.
எண்ணாகமம்
பேதுரு, யாக்கோபு, யோவான் யூதா இந் நால்வரும் எழுதிய பொதுவான நிருபங்கள் இவ் வானாந்திர வாழ்வில் நமக்கு நேரிடும் சோதனைகளையும், நமது கடமைகளையும் எடுத்துரைக்கும் எண்ணாகமாக அமைகின்றன. பரதேசியின் நிருபங்களான இவை வனாந்திர யாத்திரையில் தேவன் நமக்கருளும் பாதுகாப்பையும் இதர காரியங்களையும் குறித்துக்கூறுகின்றன. பேதுரு விசுவாசிகளைப் பரதேசிகள் என்றே அழைக்கிறார்.
யாக்கோபு பரதேசிகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பி யாத்திரையைச் செம்மையான வழியில் நடத்த அழைப்பு விடுகிறார்.
வானந்திர வாழ்க்கையில் பரிசுத்த வழியைக் காட்டும் நூலாக யோவானின் நிருபங்கள் அமைகின்றன.
ஒளியையையும், அன்பையும், கடமையையும் வாழ்வின் குறிக்கோள்களாகக் கருதும்படி அவர் ஆலோசனை தருகிறார்.
விசுவாச துரோகம் எனும் இருள் நம்மைச் சூழ்ந்தாலும் எவ்வாறு வனாந்திர யாத்திரையில் முன்னேறிச் செல்ல வேண்டும்மென்று யூதா விளக்கிக் கூறுகிறது.
உபாகமம்
வெளிப்படுத்தின விசேஷமே புதிய ஏற்பாட்டிற்கும் ஏன் முழு வேதாகமத்திற்குமுரிய உபாகமமாகத் திகழுகிறது. பழைய , புதிய ஏற்பாட்டிலுள்ள ஊடும் பாவமாகிய அநேக வர்ணமுள்ள நூல்கள் ஒன்றிணைந்து அழகான வஸ்திரமாக மாறுகின்றன. அனைத்து தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலையும் அதிலே காணலாம். இயேசுவைப் பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது (வெளி.19:10).
வேதாகமம் தேவ ஆவியானவரால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க அதன் அமைப்பு கூட உதவிசெய்கிறது. இவ்விந்தையை ஒரு விசுவாசி எண்ணி எண்ணித் துதிக்காமலிருக்க முடியுமா ?
சுவரிலிருந்த வேதாகமம்
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல வேண்டுமானால் பரி. கோட்தார்டு கணவாய் வழியாகவே கடந்து செல்லவேண்டும். ஏனெனில் கோட்தார்டு சுரங்கப்பாதை அப்பொழுது கட்டப்படவில்லை. எனவே இப் பயணம் நீண்ட பயணமாகவும், காலதாமதத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவுமே இருந்தது.
அந்நாட்களில் பயணிகள் கூட்டமாகவே சுவிட்சலர்லாந்திற்கு செல்வார்கள் லூகானாவிலிருந்து மத்திய சுவிட்சர்லாந்திற்கு சில கொத்தனார்கள் பயணப்பட்டார்கள். சுவிட்சர்லாந்தில் அதிக கூலி கிடைப்பதே அதற்குக் காரணம். அவர்களுக்கிடையே அன்டோனியோ எனும் பேருள்ள ஒரு கொத்தனும் இருந்தான். அவன் ஒரு இளைஞன். அவனை ஒரு வயதான அம்மையார் சந்தித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றி கூறினார்கள். அன்டோனியோ அவர்களது வார்த்தைகளைக் கேட்கக்கூட விரும்பவில்லை. அவன் எரிச்சலோடு கூறினான்.
எங்களுக்கு மரியாளும் பாதிரிகளும் உண்டு. அது போதும்.
அந்த வயதான அம்மையார் அவனுக்கு ஒரு அழகான வேதாகமத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதின் அட்டைகள் தோலினால் செய்யப்பட்டிருந்தன. அவன் அதைப் பெற்றுக்கொண்டான். ஆனால் வாசிக்க விரும்பவில்லை.
கிளாரஸ் பட்டணத்தில் ஒரு பெரிய வீட்டைக் கட்டும் வேலையில் அவன் உதவி செய்ய நேரிட்டது. வேலைசெய்யும்போது அவனுடைய நண்பர்களைப்போலவே அவனும் கெட்ட வார்த்தைகளைப் பேசிக்கொண்டு இருந்தான். இறுதியாகச் சுவர்களுக்கு சாந்து பூசிக்கொண்டிருந்தபோது ஒரு துவாரத்தைக் கண்டான். உடனே அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட வேதாகமத்தை நினைவுகூர்ந்தான். அது அவனுடைய பையில்தான் இருந்தது. அவன் தன் நண்பர்களிடம் கூறினான், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இந்த பைபிளைப் பாருங்கள். இதை நான் இந்த துவாரத்திற்குள் வைத்துவிடப்போகிறேன்.
துவாரம் சிறிதாக இருந்தபடியினால், வேதாகமத்தை அத்துவாரத்திற்குள் நுழைத்தபோது அது சற்றே கிழிந்துபோயிற்று. அதற்குமேல் சாந்தைப் பூசிக் கொண்டே அவன் கூறினான். இனி இந்த இடத்திலிருந்து இந்த வேதாகமத்தைப் பிசாசினால்கூட எடுக்கமுடியாது.
சில வாரங்கள் கழிந்தன. அன்டோனியோ தன் வீட்டிற்குத் திரும்பச் சென்றுவிட்டான்.
கி.பி. 1861ம் வருடம் மே 10ம் நாள் கிளாரஸ் பட்டணத்தில் ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டது. 490 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. பட்டணம் பாழாயிற்று. அது மறுபடியும் கட்டப்படவேண்டும் என்ற கட்டளையும் பிறந்தது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோகன்னெஸ் என்கிற ஒரு மேஸ்திரி தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டை மேற்பார்வையிடச் சென்றிருந்தார். அது முழுவதும் கருகிப்போகாத நிலையிலிருந்தது. அங்கிருந்த ஒரு சுவரைத் தன் சுத்தியால் தட்டிப்பார்த்தபோது அதின்மேற்பூச்சு இடிந்துவிழுந்தது. அச் சுவற்றினுள்ளே ஒரு புத்தகம் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அதை வெளியே எடுத்துப் பார்த்த போதுதான் அது ஒரு வேதாகமம் என்றறிந்தார்.. என்ன ஆச்சரியம்! யார் அதை அங்கே வைத்திருக்கக்கூடும்?
தனது ஓய்வு நேரத்தில் அவ்வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினார். அநேக காரியங்கள் அவருக்குப் புரியவில்லை. ஆனால் சங்கீதங்களிலிருந்தும் சுவிசேஷங்களிலிருந்தும் ஜெபிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டார்.
நாம் உண்மையுள்ளவர்களாயின் தேவன் நமக்கு உதவி செய்யத் தவறுவதில்லை. தான் ஒரு பாவி என்பதையும் தேவன் தன்னை நேசிக்கிறார் என்பதையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் பாவமன்னிப்பைப் பெறலாம் என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்.
இலையுதிர் காலத்தில் தன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற அவர் தான் போகும் இடங்களில் எல்லாம் நற்செய்தியைப் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து) பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
ஓய்வு வேளைகளில் ஒரு பெட்டி நிறைய வேதாகமங்களை நிறைத்துக்கொண்டு அருகாமையிலுள்ள கிராமங்களில் எல்லாம் போய் நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
அன்டோனியோ வாழ்ந்துகொண்டிருந்த இடத்தி;ற்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஒரு திருவிழா நடந்துகொண்டிருந்தது. ஜோகானெஸ் அங்கே ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார்.
அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்த அன்டோனியோ அக்கடையைக் கண்டான். ஓ, பைபிள்களா, எனக்கு அது தேவையில்லை. எனக்கு அது தேவைப்பட்டால் கிளரஸ் பட்டணத்தில் நான் சுவருக்குள் வைத்துவிட்டு வந்த அந்த வேதாகமத்தையே எடுத்துக்கொள்வேனே, பிசாசினால்கூட அந்த வேதாகமத்தை அங்கிருந்து எடுக்கமுடியாது எனக் கூறிவிட்டுச் சிரித்தான்.
ஜோகன்னெஸ் கம்பீரத்துடன் அவனை நோக்கிப் பார்த்தார். அவருக்கு இ;மைப்பொழுதில் எல்லாம் புரிந்துவிட்டது. இளைஞனே! கவனமாகப் பேசு. ஏளனமாகப் பேசாதே. அதே வேதாகமத்தை நான் உனக்கு காண்பித்தால் நீ என்ன கூறுவாய்? என்றார் ஜோகெனஸ்.
நான் இதை நம்பமாட்டேன். அந்த வேதாகமத்தை நான் கண்டவுடனே தெரிந்து கொள்வேன். பிசாசினால் கூட அந்த பைபிளை வெளியே கொண்டுவர முடியாது.
ஜோகெனஸ் ஒரு பழைய கிழிந்த வேதாகமத்தை எடுத்துக்காண்பித்தார். இதுதானா அது? நீ போட்ட அடையாளம் இதிலுள்ளதா என்று பார்.
அன்டோனியோ பேச்சிழந்தான். காரணம் அது அவன் சுவருக்குள் வைத்த அதே வேதாகமம் தான்.
பார்த்தாயா? இது பிசாசின் வேலையல்ல. தேவனின் கிரியை. தான் என்றைக்கும் உயிரோடிருக்கிறவர் என உனக்குக் காண்பிக்கவே இப்படிச் செய்தார். அவர் உன்னை இரட்சிக்க விரும்புகிறார்.
ஜோகெனஸ்சின் வார்த்தைகள் எட்டியாகக் கசந்தன. எல்லோரும் வாங்கடா. இவனும் இவன் பைபிள் கடையும். வார்த்தைகளில் கோபம் கொப்புளிக்க அன்டோனியோ அவர்மீது பாய்ந்தான். கடை சூறையாடப்பட்டது. ஜோகெனஸ் நையப் புடைக்கப்பட்டார். குண்டர்கள் கூட்டத்தோடு கலந்தனர்.
அன்றுமுதல் அன்டோனியோ தேவனை வெறுக்கத் தொடங்கினான். ஒருநாள் குடிபோதையில் 56 அடி உயரச் சாரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்தான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஜோகெனஸ் இதைக் கேள்வியுற்றபோது அவனுக்கு ஒரு பூச்செண்டை அனுப்பி வைத்தார். பின்பு அவனை அவரே நேரில் போய்க் கண்டார். அனால் அன்டோனியோவின் இதயம் பாறைபோலக் கடினப்பட்டது. ஜோகெனஸ்சின் அன்பு அவனை நெகிழ வைத்தது. தனது தவறை உணர்ந்து அதைக் கடவுளிடம் அறிக்கையிட்டான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனக்காகச் சிலுவையில் செய்து முடித்த காரியங்களை அவன் புரிந்துகொண்டான். அவனது ஆத்துமாவிற்கு சுகம் கிடைத்தது. அவன் இரட்சிக்கப்பட்டான். ஆனால், அவனது உடலோ குணமடையவில்லை. அவனது தொடைப்பகுதி பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து போயிற்று. இனி அவன் கட்டிட வேலைகளைச் செய்ய முடியாது. தனக்கு ஏற்ற வேலையை அவன் தெரிந்துகொண்டான். பின்னர் ஜோகெனஸ்சின் மகளைத் திருமணம் செய்துகொண்டான்.
அவனது நண்பர், அவனது மாமனாராக மாறினார். அவன் இறைவனடி சேர்ந்ததற்குப் பிறகும், அவனுடைய பிள்ளைகள் அவ்வேதாகமத்தை (சுவருக்குள் வைக்கப்பட்ட) பொன்போலப் பாதுகாத்து வருகின்றனர்.
ரொட்டிக்குள் வேதாகமம்
ஜான் காஸ் ஒரு தீர்க்கதரிசியும், சீர்திருத்தவாதியும் ஆவார். அவர் ஒரு இரத்தசாட்சியும்கூட! பொகீமியாவில் வாழ்ந்த அவருடைய சாட்சியின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டன. பொய்ப் போதகத்தை வெறுத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த காரியங்களை விசுவாசிக்கத் தொடங்கினார். ஆனால், பகிரங்கமாக சுவிசேஷத்தை இந்நாட்டில் அதிக நாட்கள் அறிவிக்க முடியவில்லை. ஜான் காஸ் உயிரோடே தீக்கொளுத்தப்பட்டார். அநேகக் கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்பட்டனர். எல்லா இடங்களையும் தேடிப்பார்த்து கிடைக்கக்கூடிய வேதாகமங்களை எல்லாம் தீக்கிரையாக்கினார்கள்.
தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக நேசிக்கும் ஒரு பெண்மணி தனது வீட்டில் அடுப்பினருகே நின்று கொண்டிருந்தாள். ரொட்டி சுடவதற்கான ஆயத்தங்களை அவள் செய்து கொண்டிருந்தாள். ரொட்டி சுடத்தொடங்குமுன் ஆட்களின் காலோசையைக் கேட்டாள். யாராக இருக்கக்கூடும்? கத்தோலிக்கர்களின் மதச் சார்பான நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவளது வீட்டிற்குள் நுழைந்தது. யாரிடத்தில் எல்லாம் வேதாகமம் உண்டோ அவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைக்கவே அவர்கள் வந்திருந்தனர்.
இமைப்பொழுதில் அப்பெண்மணி தன் வேதாகமத்தை பிசைந்த மாவிற்குள் வைத்து பெரிய ரொட்டி போலாக்கி, அதை ரொட்டி அடுப்புக்குள் போட்டுவிட்டாள்.
அவளது வீட்டிற்குள் நுழைந்தவர்கள் மூலை முடுக்குகளெல்லாம் தேடிப்பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.
தன்னைத் துன்புறுத்த வந்தவர்கள் வீட்டைவிட்டுப் போனதும் அப்பெண்மணி ரொட்டி அடுப்பிலிருந்து ரொட்டிகளையும் அப்பெரிய ரொட்டியையும் வெளியே எடுத்தார்கள்.
என்ன ஆச்சரியம்! சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ மூவரும் எப்படி ஒரு சேதமுமின்றி அக்கினிச் சூளையிலிருந்து வெளிப்பட்டனரோ, அதேபோல அவ் வேதாகமமும் கரிந்தோ, எரிந்தோ போகாமல் இருந்தது. அப்பெண்மணியின் சந்ததியார் அவ் வேதாகமத்தை இன்றுவரை ஒரு குடும்பச்சொத்தாகப் கருதிப் பாதுகாத்து வருகின்றனர். அவளது சந்ததியில் இறுதியாக ஓகியோவில் வாழ்ந்து வந்த பொகீமியரான ஸ்கீபோல்டு எனும் ஒரு விவசாயி அவ் வேதாகமத்தைப் பொன்போலப் பாதுகாத்து வந்தார்.
துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட வேதாகமம்
வெட்கக் கேடான செய்கை. யாராவது பைபிளைத் துப்பாக்கியால் சுடுவார்களா? யாரும் அப்படிச் செய்யமாட்டார்கள்.
ஆனால் அது உண்மை. அற்புதம் என்றுதான் கூற வேண்டும். துப்பாக்கியாமல் துளைக்கப்பட்ட வேதாகமம் தான் என் உயிரைக் காத்தது. ஒரு போர்வீரனின் கூற்று இது. அவர் கூறுவதைத் தொடர்ந்து கேளுங்கள்.
போர்க்களத்தில் முன்னணியில் பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் ஒரு அரணிலிருந்த மற்றொரு அரணுக்கு முன்னேறிச் சென்றுகொண்டிருந்தோம். ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்த எனக்குத் திடீரென்று நெஞ்சின்மேல் ஏதோ ஒன்று கடினமாக மோதியதைப் போலத் தோன்றிற்று. அதைத் தொடர்ந்து பயங்கரமான வலியும் உண்டாயிற்று. என்ன சம்பவித்திருக்கக்கூடும்?
வழக்கம் போல் நான் எனது வேதாகமத்தைச் சட்டைப் பையில்தான் வைத்திருந்தேன். (அது எனக்கு எனது தாயார் அன்பளிப்பாகத் தந்தது) ஒரு வேளை அவ்வேதாகமம் அங்கே இல்லாதிருந்தால் எதிரியின் குண்டு என் நெஞ்சைப் பிளந்திருக்கும். எனக்கு சிறிய காயமே ஏற்பட்டது. சீக்கிரமாக அது ஆறிவிட்டது. தேவனுடைய இரக்கமே அப்படிச் செய்தது என நான் நம்புகிறேன்.
துப்பாக்கிக் குண்டால் துளைக்கப்பட்ட இவ்வேதாகமம் இருமுறை என் உயிரைக் காத்தது. முதலாவது அது எனக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழிமுறையைக் காட்டிற்று. இரட்சகரான இயேசு கிறிஸ்துவை அதன் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். இரண்டாவதாக சாவுக்கேதுவான எதிரியின் குண்டிலிருந்தும் அது என்னைக் காத்தது.
விற்கப்பட்ட வேதாகமம்
திருமதி லின்னரின் வாழ்வில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. அவளது கணவரின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை வருணிக்க முடியாது.
வீட்டிலுள்ள நகையும், நாற்காலியும், மேசை போன்றவைகளையும் பழைய சாமான்களை விற்கும் ஒரு கடைக்காரனிடம் விற்று விட்டாள். ஒரு நாள் திருமணப் பரிசாகத் தனக்குத் தரப்பட்டிருந்த குடும்பச் சொத்தான வேதாகமத்தையும் விற்றுவிட நேரிட்டது. கடந்த நாட்களிலெல்லாம் அதை வாசித்துப் பெலனடைந்து மகிழ்ந்ததுண்டு. இப்பொழுதோ அதை வாசிக்க மனமில்லை.
தனிமையாயிருந்தபோது திருமதி லின்னரின் எண்ணங்கள் அவளை அலைக்கழித்தன. அப்புத்தகத்தை விற்றுவிட்டது சரியா? விலை மதிக்கமுடியாத அப்புத்தகத்தை அவ்வளவு எளிதாக விற்றுவிட்டது தவறல்லவா? நினைக்க நினைக்க நெஞ்சமே வெடித்துவிடும் போலிருந்தது. அவளுடைய பிள்ளைகள் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தனர். பழைய பொருட்களை விற்கும் கடைக்கு அவளுடைய கால்கள் நடை போட்டன. கடையை அடைந்ததும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.
திடுக்கிட வைக்கும் காட்சி. கடைக்காரன் லேவி ஏதோ ஒரு புத்தகத்தை (அது.. அது…. அவளுடைய வேதாகமதல்லவா) வாசித்துக் கொண்டிருக்கிறான். அதிலுள்ள உவமைகளை வாசித்து ஏளனம் செய்ய அவனுடைய நண்பர்களும் அவனைச் சுற்றிக் கூடியிருந்தனர். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து வாசிக்கும்போது அவர்களது முகத்தில் ஓர் இனமறியாத மாற்றம். கெத்சமனேயில் அவர் அனுபவித்த வேதனைகளை லேவி வாசிக்கும்போது அவனுக்குத் தொண்டை அடைக்கிறது. அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. விடைபெற்றுக்கொள்ள மனமின்றி அவனுடைய நண்பர்கள் அவ்விடம் விட்டு அகலுகின்றனர்.
திருமதி லின்னரின் கதி என்ன? தனது வேதாகமத்திலுள்ள உவமைகளை வாசிக்கக் கேட்டு அவர்களது ஏளனம் செய்த போது குற்ற உணர்வு அவளை வாட்டிற்று. கிறிஸ்துவின் பாடுகளை வாசிக்கக் கேட்ட போதோ அவளது உள்ளம் உடைந்தது. அழுதுகொண்டே அங்கே நிற்க மனமின்றி தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டிலே முழங்காற்படியிட்டு தனது ஆண்டவரும் கர்த்தருமாகிய தேவனை மறந்து விட்ட காரியத்தை அறிக்கையிட்டு கேவிக் கேவிக் அழுதாள்.
காலையில் ஆறுதலும், நம்பிக்கையும் அவளது உள்ளத்தை நிறைத்தன. தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்கிற உணர்வும், தனது இரட்சகர் தனதருகில் உண்டு என்கிற நிச்சயமும் அவளைப் பரவசப்படுத்தின. லேவியின் கடைக்குச் சென்று தனது வேதாகமத்தை வாங்கிக்கொண்டுவரத் தீர்மானித்தாள். அவள் கடைக்குச் சென்ற போதோ அவளுடைய கண்களை அவளால் நம்ப முடியவில்லை. லேவி அந்த வேதாகமத்தை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாதவனாய் அக்காலை வேளையில்தானே அதை சிரத்தையோடு வாசித்துக்கொண்டிருந்தான். அவள் வந்ததைக் கவனியாமல் அவன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறான். தேவ ஆட்டுக்குட்டியானவரின் பாடு மரணங்களைக் குறித்துத்தான் அவன் வாசித்துக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டே, பிதாவே இவர்களுக்கு மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்று அவர் கூறியதை வாசித்துவிட்டு தேவநடத்துதலால் ஏசாயா 53 ம் அதிகாரத்தையும் வாசிக்கிறான். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். இதை வாசிக்கும்போது லேவி துக்கமடைந்தான். பாவமறியாத அவர் கொல்லப்பட்டதை எண்ணி வேதனையடைந்தான். கடந்த இரவு அவரையல்லவா அவள் ஏளனம் செய்துகொண்டிருந்தான். அவன் வாய்விட்டுக் கதறினான். நசரேயனாகிய இயேசுவே நீரே எனது மேசியா! நீரே தேவனால் வாக்குப்பண்ணப்பட்ட இரட்சகர்.
பிரமிப்புடன் வாசலில் நின்று கொண்டிருந்த திருமதி லின்னரைப் பார்த்து அவன் கூறினான். அம்மா உங்களுடைய புத்தகத்திலிருந்து எனக்கு விலைமதிக்கமுடியாத புதையல் கிடைத்து விட்டதம்மா. இவ்வுலகத்தைப் பார்க்கிலும் விலையுள்ள புதையல்தான் அது.
அவளுடைய கடந்த இரவுதான் இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கடந்து வந்த விதத்தைக் கூறினாள்.
திருமதி லின்னர் தனது வேதாகமத்தைப் பெற்றுக்கொண்டாள். லேவி புதியதொரு வேதாகமத்தை வாங்கினாள்.
லேவியின் மனைவியும் சில நாட்களுக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றாள்.
இச் சம்பவம் ஸ்ட்ரேஸ்புர்க் நகரில் யூதர்களுக்கிடையில் மிஷனறியாகப் பணிபுரியும் ஜேக்கப் ஆகஸ்ட் கவுல் மெயிஸ்டர் என்பவரால் அவர் கர்த்தருக்குள் நித்திரையடையமுன் கூறப்பட்டது.
மிதந்த வேதாகமம்
நாகசாகி துறைமுகத்தின் வழியாகக் கடற்பயணம் செய்து கொண்டிருந்த ஜப்பானிய அதிகாரி தண்ணீர் மீது ஒரு சிறிய புத்தகம் மிதந்துகொண்டிருப்பதைக் கண்டார். அவர் அதைத் தண்ணீலிருந்து எடுத்துப் பார்த்தபொழுது அது அவரது மொழியல்ல, வேறொரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என்று அறிந்தாhர். சிலரிடம் அது எதைப்பற்றியது என்று கேட்டும் பார்த்தபொழுது அவர்களும் எங்களுக்கு தெரியவில்லை எனக் கூறிவிட்டனர்.
இறுதியில் சீன நாட்டவரான ஒரு வியாபாரி, அவருக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்தபடியால், அவர் அப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு அது இயேசுவின் புத்தகம் என்றார். அழைக்கப்படாமல் மற்றவர்கள் காரியங்களில் தலையிடும் வெளிநாட்டவர்களின் புத்தகம் இது. இதின் சீனமொழிபெயர்ப்பு வேண்டுமானால் கிடைக்கும் என்று வேண்டா வெறுப்பாகக் கூறினார். அவ்வதிகாரிக்கு சீனமொழியைச் சிறிதளவு புரிந்து கொள்ளமுடியுமாதலால் அவ்வியாபாரியிடம் தனக்கு ஒரு புதிய ஏற்பாட்டை வாங்கித் தருமாறு கேட்டார். அவ்வாறே அவ் வியாபாரி சீன மொழியிலுள்ள புதிய எற்பாட்டை வாங்கிக் கொடுத்தார்.
சீன மொழியை நன்றாகக் கற்றுக்கொள்வதற்காக அவர் அதைக் கருத்தோடு வாசித்தார். அவர் வாசிக்க வாசிக்க பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யத் தொடங்கினார். அவர் அதை வாசித்து முடித்தபோது ஆண்டவரை ஏற்றுக் கொண்ட சந்தோஷமுள்ள மனிதராக மாறி இருந்தார்.
ஜப்பானிலுள்ள விக்கிர ஆராதனையை நிலைநிறுத்துவதற்காக வேறு எந்த மத ஆராதனைகளையும் அங்கே அனுமதிக்க மறுத்தனர்.
ஆனால் இந்த அதிகாரி தனது குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் வேதாகமத்தை வாசிக்கும்படி வற்புறுத்தினார். சில நாட்களுக்குள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு காட்டுத் தீ போலப் பரவிற்று.
மத சுதந்திரம் விரைவில் கிடைத்தபடியால் நாகசாகியில் பணிபுரிய ஒரு மிஷன் வந்தார். அப்பொழுது அவ்வதிகாரி சுதந்திரமாகத் தனது இயேசுவைக் குறித்து மற்றவர்களிடம் கூறமுடிந்தது.
ஜப்பானில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட முதல் மனிதர் அவர்தான். அவரது வாழ்க்கையும், நடக்கையும் ஒரு சவாலான சாட்சியாக இருந்தன. நாகசாகி துறைமுகத்தில் மிதந்து கொண்டிருந்த வேதாகமமமே அவரது வாழ்வில் மாற்றம் உண்டாகக் காரணமாயிற்று.
விசுவாசிக்கிற எவரையம் மாற்றக்கூடிய வல்லமை நிச்சயமாகவே தேவனுடைய வார்த்தைக்கு உண்டு.
கிழிக்கப்பட்ட வேதாகமம்
ஆயிரக்கணக்கானோர் ஏன், கோடிக்கணக்கானோர் வேதாகமத்தின் மூலமாக ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கின்றனர். சில நேரங்களில் வேதாகமத்தின் ஒரு பக்கமோ, அல்லது ஒரு வரியோகூட நூறுமடங்கு அசீர்வாதத்தை அருளக்கூடிய வித்தாக இருந்திருக்கிறது.
ஜெர்மனியிலுள்ள ஒரு சிறு பட்டணத்தில் வீட்டு உபயோகத்திற்கான பொருட்கள் ஏலத்தில் விற்கப்பட்டன. அவைகளுக்கிடையே ஒரு வேதாகமமும் இருந்தது. அதை யாருமே வாங்க விரும்பவில்லை. இறுதியில் ஒரு சில்லரை வியாபாரி அதை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டுபோனான்.
அவன் அதை பலசரக்கு சாமான்களை பொட்டலமாக கட்டிக்கொடுக்க உபயோகித்தான். கிழிக்கப்பட்டாலும் அழுக்கடைந்தாலும் அப்பக்கங்கள் விலை மதிக்க முடியாதவைதான் என்பதை அவன் அறியவில்லை. கர்த்தர் சொன்னார் என் வசனம் வெறுமையாய்த் திரும்பாது என்று.
அப்பட்டணத்தில் குற்ற உணர்வால் நாள்தோறும் வாதிக்கப்படும் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு கொலைகாரனாக இருந்தபடியால் அவனுடைய மனச்சாட்சி இரவும் பகலும் அவளை உறுத்திக்கொண்டிருந்தது. அடிக்கடி கொலை என்கிற சத்தத்தைக் கேட்பான். கொலை என்கிற வார்த்தை சிவந்த எழுத்துக்களால் தன் முன் எழுதப்பட்டிருப்பதை சிலமுறை காண்பான்.
ஒருநாள் தன் மகனிடம் ஏதோ ஒரு பொருளை வாங்கி வரச் சொன்னபோது, அவன் வாங்கிக்கொண்டு வந்த பொருள் வேதாகமத்திலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட காகிதத்தால் கட்டப்பட்டிருந்தது. அவனுடைய கண்கள் முன் ஒரு வசனம் மாத்திரம் பளீச்சிட்டது. இரத்தஞ்சித்துதலில்லாம் பாவமன்னிப்பு இல்லை (எபி.9:21).
முதலில் அதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாவ மன்னிப்பைத்தான் இவ்வளவ நாட்களாக அவன் தேடிக்கொண்டிருக்கிறான். அதைக்குறித்து மேலும் அறிந்த கொள்ளவிரும்பியதால் அவன் அவ்வியாபாரியிடமிருந்து மீந்திருக்கும் காகிதங்களை வாங்கி வரும்படி தன் மகனை அனுப்பினான்.
இறுதியாக வியாபாரியின் கையிலிருந்தது யோவான் எழுதிய முதலாம் நிருபம் மாத்திரமே. அதை அவன் அம்மனிதனக்கு கொடுத்தனுப்பினான். கொலைகாரனின் கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிட்டது. அக்காகிதத்தில் அச்சிடப்பட்ட வசனங்களை வாசித்தபோது!
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் போக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:7-10). எனும் வசனங்கள் இருளிலிருந்த அவனை பேரொளிக்குள் கொண்டு சென்றன.
தன்னுடைய பாவங்களையும் தான் அறிக்கையிடும்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தன்னையும் மன்னிப்பாரென அறிந்து கொண்டான். இவ்வண்ணமாகப் பூரண சமாதானத்தை அவன் பெற்றுக்கொண்டான். சந்தோஷத்திற்கான வழியை கிழிக்கப்பட்ட வேதாகமத்தின் ஒரு பக்கம் கூட காட்டமுடியும்.
கரையில் ஒதுங்கிய வேதாகமம்
ஸ்பெயின் நாட்டின் கடற்கரை அருகே ஒரு ஜெர்மனி நாட்டுக் கப்பல் கடும் புயலால் தாக்கப்பட்டு முழ்கிப் போயிற்று. சில நாட்களுக்குப் பிறகு உடைந்த கப்பலின் பாகங்களும் மாலுமிகளின் உடைகளும் கரையில் ஒதுங்கிக் கிடந்தன. ஒரு மாலுமியின் சட்டைப் பைக்குள் ஒரு புதிய எற்பாடு இருந்தது. இதில் இப்படியாக எழுதப்பட்டிருந்தது.
மாற்கஸ் ரோத்மன், கோல்க் வீஸி 12, கம்பர்க்.
எனது அக்கா லோட்டீ கெஞ்சியபடியால் முதல் முறையாக வாசித்தேன்.
தேவனது நியாயத்தீர்ப்புக்கு பயந்து இரண்டாம் முறை வாசித்தேன்.
மூன்றாம் முறையும் அதற்குப் பிறகும் அநேகமுறைகளும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நேசித்தபடியால் வாசித்தேன்.
வீசி எறியப்பட் வேதாகமம்
அதை ஐன்னல் வழியாக வீசி எறியடா ! போர்வீரர்கள் புகை வண்டியில் பயணம் செய்யும்போது, சிரித்து மகிழ்வதற்காகவும், பயணக்களைப்பு தெரியாமலிருப்பதற்காகவும் மற்றவர்களைக் கேலி செய்து அவர்களது துன்பத்தில் இன்பம் காணுவது மிகச் சாதாரமணமான ஒரு காட்சியே.
புதிதாகப் பட்டாளத்தில் சேர்ந்த ஒரு இராணுவ வீரன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.
நாம் சிரித்து மகிழ அந்தப் பக்தியுள்ள இளைஞனின் கையிலுள்ள வேதாகமத்தை ஐன்னல் வழியாக வீசி எறிவோம் வாருங்கள்.
சொல்லி முடிக்கும் முன் வேதாகமம் அவனது கையிலிருந்து பிடுங்கப்பட்டு, ஐன்னல் வழியாக வீசி எறியப்பட்டு விட்டது.
அவ்விளைஞனுக்கு கோபம் உண்டாகவில்லை. ஏனெனில் அவனது எஜமானனே சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ளவர் (மத்.11:29). அவனுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் மௌனமாக வேதனையைச் சகித்தான்.
சில நாட்களுக்குப் பிறகு இவ்விளைஞனுக்கு தபால் மூலம் அவ் வேதாகமம் அனுப்பப்பட்டது. அதோடு ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு இரயில்வே தொழிலாளியின் கையில் அவ்வேதாகமம் கிடைக்கவே அவர் அதை வாசிக்கையில் தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். தனது பாவங்களுக்கான தண்டனையைக் குறித்து அவருக்குப் பயமேற்பட்டது. தொடர்ந்து வாசித்த போதே இரட்சகராக கிறிஸ்துவைக் கண்டார். அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
இளைஞன் புரிந்து கொண்டான். சில நாட்கள் தன் வேதாகமத்திடமிருந்து பிரிந்திருக்கவேண்டிய தேவை தனக்கு ஏற்பட்டது ஏன் என்று!
உருக்குலைந்த வேதாகமம்
இல்லந்தோறும்போய் சுவிசேஷம் அறிவிக்கும் நற்செய்தியாளர் ஒருவர் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வேதாகமத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அக் குடும்பத் தலைவர் வேதாகமத்தைக் கையில் வாங்கி சில பக்கங்களை கிழித்து தீயில் காட்டி அதனால் தன் சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பிரான்சில் நடந்த சம்பவம் இது. சுவிசேஷகரின் மனநிலையை வருணிக்க வார்த்தைகளில்லை.
சில நாட்கள் சென்ற பின்பு சுவிசேஷகர் அதே வீட்டாரைக் காணச் சென்றார். அவ் வீட்டிலுள்ள இளைஞன் ஒருவன் போர்முனையில் வீரமரணம் அடைந்தபடியால் அவனது பொருட்கள் அரசாங்கத்தினரால் அவ் வீட்டாருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அப்பொருட்களினிடையே உருக்குலைந்துபோன ஒரு வேதாகமமும் இருந்தது. அது தான் அவர்களுக்குக் கொடுத்த அதே வேதாகமம்தான் எனச் சுவிசேஷகர் அறிந்துகொண்டார்.
வேதாகமத்தின் பின்புறத்தில் மரணத்தைத் தழுவிய அப்போர்வீரன் இப்படியாக எழுதியிருந்தான்.
வெறுத்தேன். ஏளனம் செய்தேன். இறுதியில் விசுவாசித்தேன். இதன் மூலமாகவே நான் இரட்சிக்கப்பட்டேன்.
இரண்டாகக் கிழிக்கப்பட்டாலும்….
சில வருடங்களக்கு முன் பிரான்சு நாட்டில் ஒரு காட்டுப் பகுதியிலுள்ள குடிசைக்கு ஒரு சுவிசேஷகர் கடந்து சென்றார். அக் குடும்பத் தலைவியிடம் அம்மா உங்களுக்கு வேதாகமம் வேண்டுமா? என்னிடத்தில் சில பைபிள்கள் விற்பனைக்கு உண்டு என்றார்.
குடும்பத் தலைவியாகிய ஜீன்னே தயங்கினாள். தனது பாதிரியார் இதைக் கேட்டால் கோபப்படுவாரோ? அனுமதிப்பாரோ? ஏக்கத்தோடு அச்சிறிய புதிய ஏற்பாட்டைக் கண்ணோக்கிய அவள் 50 பைசாவை கையில் வைத்துக்கொண்டு ஐயா! நீங்கள் தருகிறதை என்னால் மறுக்கமுடியவில்லை. ஒருவேளை நான் இதை வாங்குவது ஒரு பாவமானால் தேவன் என்னை மன்னிப்பாராக என்றாள்.
சற்று நேரம் கழித்து அவளது கணவன் ஜேக்ஸ் வீட்டிற்கு வந்தான். அவன் மரங்களை வெட்டிக் கரியாக்கி விற்பனை செய்பவன். அவள் பயத்தோடு தான் வாங்கிய புதிய ஏற்பாட்டை அவனிடம் நீட்டினாள். அவள் பயந்ததுபோலவே அவன் அவளைத் திட்டத்தொடங்கினான். களைப்பின் மிகுதியால் அவன் அவளை வீண் செலவு செய்பவள் என்று அழைத்துவிட்டு வசைமாரி பொழிந்தான்.
அவளுக்கு கோபம் வந்தது. ஜேக்ஸ் உங்கள் கையிலுள்ள பணம் அனைத்தும் நீங்கள் சம்பாதித்ததல்ல. என்னை நீங்கள் திருமணம் செய்துகொண்டபோது வரதட்சணை கிடைத்ததல்லவா? நீங்கள் கொண்டு வரும் ஒவ்வொரு ரூபாயிலும் அரை ரூபாய் என்னுடையது. மறந்துவிடவேண்டாம் எனக் கூறினாள்.
ஜேக்ஸ் ஆத்திரமடைந்தான். சரி. என் கையிலுள்ள பணத்தில் பாதி என்னுடையது, பாதி உன்னுடையதானால், நீ வாங்கின புத்தகத்தின் காரியத்திலும் அப்படித்தான் என்று சொல்லிக்கொண்டே அப்புத்தகத்தை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியைத் தன் மனைவிக்குக் கொடுத்துவிட்டு ஒரு பகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டான்.
அநேக நாட்களுக்குப் பின் காட்டில் தனிமையாக இருக்கும் பொழுது தான் இரண்டாகக் கிழித்த புத்தகத்தை நினைவுகூர்ந்தான். அவன் அதை வாசித்துப் பார்க்வேண்டும் என்று விரும்பினான்.
அவனுடைய கையிலிருந்த புதிய ஏற்பாட்டின் பின்பகுதியாகும். அவனது பலத்த விரல்கள் வேதாகமத்தை இருபகுதிகளாகப் பிரித்தபொழுது லூக்கா எழுதின சவிசேஷத்தின் மையப்பகுதியும், அதைத் தொடர்ந்து வரும் பகுதிகளும் இவனுடைய உடைமையாகி இருந்தன.
முதன் முதலாகக் காணப்பட்ட வசனத்தை அவன் வாசித்தான். தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் என்பேன். ஆர்வத்தோடு ஜேக்ஸ் தொடர்ந்து வாசித்தான். வாசித்த பிறகு அவனுடைய உள்ளத்தில் அநேகம் கேள்விகள் எழும்பின. இக் கதையில் கூறப்பட்டிருக்கும் இவ்விளைஞன் என்ன செய்திருக்கக்கூடும்? அந்தக் கெட்டகுமாரன் ஏன் நாடு கடத்தப்பட்டான்? அவன் யார்? எங்கே இருந்தான்? தன் தகப்பனிடம் திரும்பிச் செல்ல அவனைத் தூண்டியது எது? இக் கேள்விகள் அவனை உறங்க வொட்டாமல் செய்தன. ஆனால் அவனது பெருமையும் அகங்காரமும் தன் மனைவியிடமிருந்து முதற்பகுதியை வாங்கி வாசித்துப் பார்க்கத் தடைபோட்டன.
இந் நிலையில் ஜீன்னே சுவையற்ற ஒரு வாழ்க்கை நடத்தி வந்தாள். எப்பொழுதாவது ஜேக்ஸ்சினால் கிழிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டின் முதல் பகுதியை எடுத்து எழுத்துக்கூட்டி வாசிப்பாள். நாட்கள் செல்லச் செல்ல வேதத்தை வாசிப்பதில் அவளுக்கு ஆர்வமுண்டாயிற்று. லூக்கா எழுதின சுவிசேஷத்தின் 15 ம் அதிகாரத்தில் கெட்டகுமாரனின் கதையை ரசித்துப் படித்தாள். ஆனால் என்ன இது? நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப் போய்……
ஐயோ! கதை இதோடு நின்றுவிட்டதே. இதன் மறுபகுதி ஜேக்ஸின் கையிலல்லவா? எப்படிக் கேட்பது? கெட்ட குமாரனின் நிலைமையைக் குறித்து நினைத்த போதெல்லாம் வாய்விட்டு அழுதாள். ஆனால் ஜேக்ஸிடம் அதன் இரண்டாம் பகுதியைக் கேட்பதற்கான தைரியம் அவளுக்கு வரவில்லை.
ஒரு நாள் கனத்த மழை பெய்துகொண்டிருக்கும்போது, ஜேக்ஸ் களைப்படைந்து வீட்டிற்குத் திரும்பிவந்தான். தனக்கு முன் வைக்கப்பட்ட ரொட்டியைத் தின்றுவிட்டு, சூப்பைக் குடித்துக்கொண்டே, ஜீன்னே, நான் இரண்டாகக் கிழித்த புத்தகத்தைக் குறித்து உனக்கு நினைவிருக்கிறதா? என் கையிலுள்ள பகுதியில் நல்ல ஒரு கதை உண்டு. ஆனால் அதன் இறுதிப் பகுதியை மாத்திரமே நான் வாசித்தேன். அதனுடைய முதல் பகுதியையும் நான் வாசித்துப் பார்க்கவேண்டும் கொண்டு வா என்றான்.
ஓ, ஜேக்ஸ் அந்தக் கதைதான் என் மனதைவிட்டு நீங்க மறுக்கிறது. அக் கதையின் முடிவை நன்றாக நானறிந்து கொள்ள விரும்புகிறேன். கெட்ட குமாரனனின் தகப்பன் அவனை எற்றுக்கொண்டாரா? ஜீன்னேயின் குரலில் ஆர்வம் பொங்கிவழிந்தது.
ஏற்றுக்கொண்டார் ஜீன்னே. அது போகட்டும் அவன் என்ன தவறு செய்தான்.
அவள் தனது பகுதியைக் கொண்டு வந்துவிட்டு அவனது நாற்காலின் அருகில் முழங்காற்படியிட்டாள். இருவருமாக அக் கதை முழுவதையும் வாசித்தனர். அவ்வுவமையை வாசித்தத் தீர்த்த பொழுது பரிசுத்த ஆவியானவர் அதன் பொருளை அவர்களுக்கு விளங்கச் செய்தார்.
இன்று இருவரது உள்ளக் கதவுகளும் திறந்தன. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவற்றினுள் பிரவேசித்தார். ஜீவ புஸ்தகத்தில் அவ்விருவரது பெயர்களும் எழுதப்பட்டன.
(இச் சம்பவத்தில் கூறப்பட்டுள்ள உவமை லூக்கா எழுதின சுவிசேஷம் 15ம் அதிகாரத்தில் 11 முதல் 32 வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.)
தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.
நாம் வேதாகமத்தை ஆதரித்து காப்பாற்றவேண்டியதில்லை. ஒரு சிங்கம் தன்னைத் தற்காத்துக்கொள்ளும். உண்மைதான், வேதம் மனிதனுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்துகிறது. அவள் எவ்வளவு மோசமானவன் என்று பகிரங்கமாகக் கூறுகிறது.
ஆகையால் அநேகர் அதைக் கண்டு நடுங்குகின்றனர். தேவனுடைய வார்த்தை மனிதனுடைய மனச்சாட்சியைக் குத்தி உணர்த்துவதால் அநேகர் வசனத்தின் பிடியில் அகப்படாமல் ஓடி ஓளிய விரும்புகின்றனர்.
வேதாகமத்திற்கு விரோதமாக எழுதப்பட்ட புத்தகங்களை எல்லாம் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைத்தால் வனாளாவும் கோபுரங்களுள்ள வின்செஸ்டர் தேவாலயத்தின் உயரத்தை அவை எட்டும். அதனருகே ஒரு வேதபுத்தகத்தையும் வையுங்கள். அவைகளால் அது பாதிக்கப்படுவதில்லை. தனது எல்லா எதிரிகளையும் வெற்றி கொள்ளும் வீரனாகவே அது என்றும் திகழும்.
ஒரு சவால்
நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள், இல்லையா? உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் அப்படித்தானே?
என்னுடைய கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. நான் சிலவற்றைத் தவறு என்று நிரூபிக்க முடியும். இது உங்கள் பதிலானால்….
உங்களது தர்க்கங்களாலும், தேவபக்தியற்ற கருத்துக்களாலும் வாழ்க்கையில் மாற்றம் எற்பட்டு மகிழ்வுடன் வாழும் ஐந்து நபர்களின் விலாசத்தை இப் புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு எழுதி அனுப்புங்கள். உதவியின்றிக் கீழ்த்தரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் உங்கள் நாத்தீக கொள்ளையினால் நல்லவர்களாக மாறினதுண்டா?
அப்படி யாராவது ஒருவரது விலாசத்தைத் தருவீர்களானால் அதற்குப் பதிலாக வேதாகமத்தினால் நல்லவர்களாக மாற்றப்பட்ட ஐம்பது பேர்களின் விலாசத்தை உங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். ஒரு காலத்தில் அவர்கள் மதுவிற்கு அடிமைப்பட்டிருந்தவர்கள். அனால் இன்றோ….. பரலோகத்தின் செல்வங்களையெல்லாம் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கடலிலே நீந்துபவர்கள். சொல்லி முடியாத சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள்.
வேதாகமத்தின் மூலமாக இலட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வேதாகமம் இவை போன்றது
அப்பம்
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.
(புதிய ஏற்பாட்டில் பக்கம் 134, யோவான் 6:52).
தீ
என் வார்த்தை அக்கினியைப்போல….. இருக்கிறதல்லவோ? (பழைய ஏற்பாட்டில் பக்கம் 904, எரேமி.32:29).
விளக்கு
உம்முடைய வசனம் என் கால்களக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கிறது
(பழைய எற்பாட்டில் பக்கம் 748, சங்கீதம் 119:105).
பால்
நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.(1.பேது.2:2)
தேன்
கர்த்தருடைய வேதம்… தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளி தேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
(சங்கீதம் 19:10)
பொன் கர்த்தருடைய வேதம்… பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கது.
(சங்கீதம் 19:10).
கண்ணாடி
ஒருவன் திருவசனத்தைக் கேட்டு அதன்படி செய்யாதவனானால் கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான். சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து…..
(யாக்.1:23-25).
சம்மட்டி
என் வார்த்தை கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போல இருக்கிறதல்லவோ?
(எரேமி.23:29).
வாள்
வேதவசனமாகிய ஆவியின் பட்டயம்
(எபேசி.6:17, எபிரெயர் 4.12).
விதை
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே (1.பேது.1: ).
வேதாகமம் கூறுகிறது
என்னை நீ ஏழு முறை வாசிக்கலாம் இல்லையேல்
ஏழு எழுபது முறை வாசிக்கலாம் ஆனாலும்
நான் அருளும் பரலோகத்தின் பரிபூரணத்தை உணர
உன்னால் இயலாது
அதிகமாய் என்னில் தேட
அதிகம் கண்டடைவாய் நீ
அதிகம் அதிகமாய் வாசிக்க
அதிகம் அறிவாய்
தேவ சித்தத்தை நீ !
எனக்கு வந்த கடிதம்
வேதாகமம் ஒரு கடிதமாகும்.
எனக்காக எழுதப்பட்டமே அது.
எச்சரிப்புக்களெல்லாம் எனக்காகவே
கிறிஸ்து எனக்காக மரித்தார்
இரட்சிப்பை எனக்கு அவர் நல்குகிறார்
நான் பரலோகம் செல்ல
அவரை என் சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவருடைய வார்த்தையை அப்படியே நம்புங்கள் !
கிழக்கத்திய நாடுகள் ஒன்றில், ஒரு மனிதனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவன் சிரச்சேதம் பண்ணப்படுவதைக் காண அந்ந நாட்டுமன்னன் வந்திருந்தான்.
உன் இறுதி ஆசை என்ன? எனக் கேட்டபோது குற்றவாளி கூறினான்: நான் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க விரும்புகிறேன்.
தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதைக் குடிக்க முடியாதபடி குற்றவாளியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அப்பொழுது மன்னன் கூறினான். பயப்படாதே. அந்தக் கோப்பையிலுள்ள கடைசித் துளி தண்ணீரைக் குடிக்கும் வரை நீ கொல்லப்படமாட்டாய்.
மன்னன் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நம்பின குற்றவாளி அந்தத் தண்ணீரைத் தரையில் ஊற்றிவிட்டான். தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரை மறுபடியும் கோப்பைக்குள் கொண்டுவருவது எப்படி? குற்றவாளி உயிர் தப்பினான்.
இவ்வண்ணமாகவே தேவனுடைய வார்த்தையை நாம் அப்படியே நம்பலாம். அம் மன்னனின் வார்த்தைகளைவிட அதிக விலை உயர்ந்தவை நமதாண்டவரின் வார்த்தைகள்.
புரிந்து கொள்ள முடியாததா ?
வேதாகமத்தால் எனக்கு ஒரு பயனுமில்லை. என்னால் புரிந்து கொள்ளமுடியாத அநேக காரியங்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. பீட்டர் தன் நண்பனிடம் அலட்சியமாகக் கூறினான்.
ஜான் சற்று நேரம் அவனோடு வாதிட்டுப் பார்த்தான். பீட்டர் வேதத்தை வாசிக்காமலிருக்க ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கவே அப்படிப் பேசுகிறானென்று ஜான் அறிந்துகொண்டான். முந்தின நாள் பீட்டர் ஒரு தோட்டத்தில் சில அப்பிள்களைத் திருடியிருந்தான். ஆதலால் ஜான் கூறினான். பைபிளில் உன்னால் பரிந்து கொள்ளக்கூடிய விஷயம் எழுதப்பட்டுள்ளது தெரியுமா?
என்ன அது? பீட்டர் அப்பாவி போலக் கேட்டான். களவு செய்யாதிருப்பாயாக. பீட்டரின் நெஞ்சுக்குள் அம்பு ஊடுருவிப் பாய்வதைப் போல அவ்வார்த்தைகள் பாய்ந்த சென்றன. பீட்டர் தான் திருடின அப்பிள்களை நினைத்துக் கொண்டவனாய் அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
இவ்வுலகிலே மிகச் சிறிய வேதாகமம்
இங்கிலாந்து தேசத்தில் அச்சடிக்கப்பட்ட மிகச் சிறிய வேதாகமம் 878 பக்கங்கள் அடங்கியது. இதன் நீளம் ஒன்றைமுக்கால் அங்குலம் (ஒரு தீக்குச்சியின் நீளம்) அகலம் ஒன்றேகால் அங்குலம். இவ் வேதாகமத்திற்குள் அநேகம் அழகிய சிறிய படங்களும் உண்டு.
உருப்பெருக்கி கண்ணாடியினி; உதவியால் இதை எளிதாக வாசிக்க முடியும். அதன் எடை 20 கிராம் மாத்திரமே. உங்கள் கையிலுள்ள உங்களுக்கு ஒரு கடிதத்தின் எடையில் பாதி கூட வராது. ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் சிறுப்பதில்லை.
ஜெபிக்காதவர்கள்
ஒரு விவசாயி விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். மிக முக்கியமான விருந்தினர்களுக்கிடையில் அவர் அமர்ந்திருந்தார். விருந்துண்ணத் தொடங்கும் முன் யாருமே ஜெபிக்கவில்லை.
இந்த விவசாயி மட்டும் கைகளைக் கூப்பி ஆண்டவருக்கு நன்றி செலுத்திவிட்டு உண்ணத் தொடங்கினார். பெருமை நிறைந்த பட்டணவாசி ஒருவன் அவரை எள்ளி நகையாடினான். என்ன நண்பரே இப்பொழுது உங்கள் கிராமத்திலுள்ளவர்கள் உணவை உண்ணும் முன் ஜெபிப்பதுண்டா?
இல்லை. எல்லோரும் ஜெபிப்பதில்லை என்றார் விவசாயி.
அப்படியானால் நாகரீகமில்லாத வயோதிகர் மட்டும் ஜெபிப்பதுண்டோ?
விவசாயி அமைதியாகக் கூறினார். இல்லை ஐயா! ஏழு குட்டிகளுள்ள ஒரு பன்றி எங்கள் வீட்டிற்கருகில் உண்டு. அவை ஜெபிப்பதில்லை. விலங்குகள் தவிர அனைவரும் ஆண்டவருக்கு நன்றி செலுத்திவிட்டே உணவு உண்பார்கள். பட்டணவாசி வாயடைத்துப் போனான்.
சில ஆலோசனைகள்
எப்பொழுதும் உங்களுடன் ஒரு வேதாகமத்தை கொண்டு செல்வது நல்லது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அதை வாசிக்க வாய்ப்புண்டாகுமே. அப்போஸ்தலர் 8:28 , எபேசியர் 5:16. ஆனால் வேதத்தை எப்படி வாசிப்பது? வேதத்தை வாசித்துப் பயனடைய விரும்புவோருக்கு சில அறிவுரைகள்.
முதலாவதாக: வேதத்தை வாசிக்கத் தீர்மானியுங்கள்.
பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் கடைப்பிடியுங்கள்.
1. உங்களுக்கென்று சொந்தமாக ஒரு வேதாகமத்தை, தெளிவான எழுத்துக்களோடு கூடிய ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்.
2. தினசரி கால் மணி நேரமாவது தேவனோடு அமைதியாகத் தனித்திருங்கள். ஒரு நாளுக்கு 96 கால் மணி நேரங்கள் உண்டல்லவா? தேவனுக்கென்று ஒரு கால் மணி நேரத்தை ஒதுக்குங்கள். (சில நாட்கள் சென்ற பிறகு கால்மணி நேரமல்ல, அதிக நேரம் உங்களுக்குத் தேவைப்படும்.). அப்.17:11
3. நீங்கள் வேதத்தை வாசிக்க எந்த நேரத்தைத் தெரிந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அதிகாலை நேரத்திலும், மாலையிலும் வேதத்தை வாசிப்பது நல்லது. அதிகாலையில் உங்கள் மனம் புத்துணர்வோடு காணப்படும். சங்.3:5 , 4:8
4. வேதாகமத்தை அவசரமாக வாசிக்காதீர்கள். கவனமாக வாசியுங்கள். வேகம் வேகமாக வாசியாமல் வாசித்ததை தியானித்துப் பாருங்கள்.
5. வாசிக்கு முன் தேவன் உங்கள் மனக்கண்களைத் திறக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். வேதத்தை எழுதிய தேவனைத் தவிர வேறு யாரும் அதை விளக்கித் தர முடியாது.
6. வேதத்தை வாசிக்கும்போது, தேவன் உங்கள் உள்ளத்தோடு பேசுகிறார். உங்களுக்காகவே வேதம் எழுதப்பட்டிருக்கிறது எனும் சிந்தையோடு வாசியுங்கள். எச்சரிக்கைகள் காணப்படுமானால் சிந்தியுங்கள். அந்த எச்சரிக்கை உங்களுக்கே! வாக்குத்தத்தங்கள் காணப்படுமானால் யோசித்துப் பாருங்கள். உங்கள் நன்மைக்காகவே அவை தரப்பட்டுள்ளன. கலாத்தியர் 2:20
7. ஒரு பேனாவையோ, பென்சிலையோ உபயோகித்து நீங்கள் விரும்பும் வசனங்களை அடிக்கோடிடுவது நல்லது. அடுத்த முறை அவற்றைச் சீக்கிரமாகக் கண்டுபிடிக்க இது உதவும். அடிக்கடி வரும் வார்த்தைகளையும் (உதாரணமாக பாவம், பாவமன்னிப்பு, சிலுவை, மனந்திரும்புதல், தேவனுடைய அன்பு) அடிக்கோடிடுங்கள்.
8. வாசித்து முடித்த பிறகு தேவனோடு பேசுங்கள். இதுவே ஜெபம்.
9. வேதாகமத்தை ஒழுங்காகத் தொடர்ந்து வாசியுங்கள். வேதத்தை முழுவதுமாக வாசித்து தீர்த்த பின் மறுபடியும் முதலிலிருந்து வாசியுங்கள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதிய அர்த்தங்களையும் அழகையும் காண்பீர்கள்.
10. வேத வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் வருங்காலத்தில் எண்ணிறைந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இயலும். சங்கீதம் 119:11.
இவ்வுலகின் மிகப் பெரிய பொக்கிஷம்:
பரிசுத்த வேதாகமமாகிய பைபிளே!
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
(யோ.20:31)
தேவன் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறார்.