May

மே 22

மே 22

சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்.5:9).

சமாதானம்பண்ணுகிறவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்கிறவர்களைப்பற்றி கவலைப்படார். தீமைகளைக் கடந்து செல்வர். அதிகமாக அடிக்கப்பட்டாலும் அமைதியுடனிருப்பர். ஏனெனில், தாம் சமாதானம்பண்ண விரும்புவதை அறிகிறவர் ஒருவர் உண்டென அறிந்து அயலாரோடு சமாதானத்துடன் இருப்பர்.

சமாதானம் பண்ணுகிறவர்கள், ஆண்டவரின் ஆலோசனையின்படி செய்கிறவர்கள். ஏனெனில் அவர், உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய் (மத்.18:15) எனக் கூறியுள்ளாரே? சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபேசி.4:31-32). இதுதான் சமாதானம் பண்ணுகிறவர்களுக்கென தேவஆலோசனை.

சமாதானம்பண்ணுகிறவர்கள் தங்கள் உள்ளத்தில் சமாதானத்தை நிறைவாக வைத்திருப்பதினால், பிறரை ஆசீர்வதிக்கும்போதும் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொடுப்பர். பவுல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, அவர், சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக (2.தெச.3:16) என ஆசீர்வதித்துள்ளார்.