August

ஓகஸ்ட் 3

ஓகஸ்ட் 3

சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23).

உடலில் குறைபாடுள்ள ஒரு சிலர்தான், சதா அதையே நினைத்து கவலைப்பட்டு, வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் மனச்சோர்வும், பயமும் வளர்ந்து அவர்களுடைய வாழ்வைக் கசப்பு நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. வாழ்வில் விரக்தியும், சோர்வும் கண்ட இவர்களுக்கு உன்னதமான தேவன் ஊக்கமாகக் கூறுகிறார். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்….. அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்… வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும் (ஏசா.35:3-6).

பிறவியிலேயே முடவனாகப் பிறந்த பைரன் பிரபு கூறுகிறார்: மனக்கசப்பை தூர எறிந்துவிடு…. இல்லையெனில் நீ அதற்கு இரையாகிவிடுவாய். அதை விட்டுவிட்டால் உலகத்திற்குப் பயனுள்ளவனாக மாறமுடியும். இதையே ஏசாயாவும் சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் போலும். பைரன் மட்டுமல்ல, அவரைப்போன்று ஆயிரக்கணக்கானோர் உடற்குறைபாட்டுடன் இருக்கின்றனர். பவுலின் சாட்சியைச் சற்றுக் கேட்போம். அவர் மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் பவுல் மகிழ்ச்சியாக இருந்தார். அவர் அதிலிருந்து விடுதலையடைந்திருந்தால்கூட அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கமாட்டார் என்றே கூறலாம். இதன்மூலம்தான் பவுல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும் எனக் கூறிய வாக்குத்தத்தத்தைப் பெற்றார்.