வேதத்தில் தேவ மனுஷர்களின் வாழ்க்கைச் சரித்திரம் நமக்கு ஊக்கமளிக்கிறதாக இருக்கிறது. எப்படியெனில் அவை இக்காலத்து வாழ்க்கை சரித்திரங்கள் போலில்லாமல் அந்த தேவ மனிதர்களின் பலவீனப்பகுதிகளையும்கூட நமக்கு காண்பிக்கிறது. அநேக தவறுகள் செய்கிற நமக்கு ஒரு தவறும் செய்யாதவன் ஊக்கமளிக்க முடியாது! தேவ மனுஷர்களின் தவறுகள் நமக்கு எச்சரிப்பாக இருப்பதற்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
மற்ற விசுவாசிகளைக் காட்டிலும், தம்முடைய ஊழியக்காரர்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தரம் மிக மிக உயர்ந்தது. அதிகம் யாரிடம் கொடுக்கப்படுகிறதோ அவர்களிடம் கேட்கப்படுவது அதிகமே! இதனால்தான் தேவன் அவிசுவாசமுள்ள இஸ்ரவேலருக்கு கானான் தேசத்தினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பதற்குமுன், பத்து வாய்ப்புகள் அளித்தார். மோசேக்கோ அவர் அளித்தது ஒரே ஒரு வாய்ப்பே.
மோசே விசுவாசமில்லாதவாய் கீழ்ப்படியாமல் நடந்தபோது அதுவும் மிகச் சொற்ப முறையில் நடந்தபோது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நுழைய, சற்றும் தாமதியாமல் தேவன் அவனுக்கு அனுமதி மறுத்தார் (எண் 20:8-12).
மோசேயிடம், ஏற்கனவே 40 வருடங்களுக்கு முன் ஒரு முறை அடிக்கச் சொன்ன கன்மலையிடம், தேவன் இப்பொழுது தண்ணீர்வரும்படி பேசச் சொன்னார் (யாத் 17:6). ஆனால் மோசே உணர்ச்சிவசப்பட்டவனாய் நிதானமிழந்து கன்மலையை அடித்தான் (எண் 20:10). தேவ மனுஷன் கீழ்ப்படியாமல் போனபோதும், தண்ணீர் புறப்பட்டு வந்தது. அது தேவன், தாகமாயுள்ள ஜனங்களை நேசித்தார் என்பதைத்தான் நிரூபித்தது. தேவ மனுஷனுடைய கீழ்ப்படியாமையை அது அனுமதித்ததாக எண்ண முடியாது. தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போகும் தேவனுடைய மனிதர்களின் ஊழியங்களில்கூட ஏன் ஆசீர்வாதம் தங்குகிறது என்பதை இது விளக்குகிறது.
ஆனால், தண்ணீர் பொங்கி வந்ததினால், மோசே தப்பித்துக்கொள்ள முடியாது! அவன் கடுமையாக தண்டிக்கப்பட்டான். கானான் தேசத்திற்குள் பிரவேசிக்கும் நாளுக்காக அவன் 40 வருடங்கள் நோக்கமாயிருந்தும், கானான் தேச எல்லையில் தானே பிரவேசிக்கிற தகுதியை இழந்தான். மற்றவர்களுக்குப் பிரசங்கித்தும், ஒருவன் தன் தகுதியை வாழ்வின் முடிவில் கூட இழந்து போவது சாத்தியமே! (1கொரி 9:27)