1. ஏறக்குறைய 1600 வருட காலத்தில் பல்வேறு தேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த 40 ற்கும் மேற்பட்ட பரிசுத்தவான்கள் மூலம் எழுதப்பட்ட சிறிதும் பெரிதுமான 66 புத்தகங்கள் ஒரே புத்தகமாக (Bible-வேதாகமம்) காட்சியளிப்பது அதிசயங்களில் ஒன்றாகும்.
2. “வேதாகமம்” என்ற இந்த ஒரே புத்தகம் மட்டுமே 1800 ற்க்கும் மேற்பட்ட பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
3. உலகம் முழுவதும் தினமும் அதிக அளவில் விற்பனையாகும் (விநியோகமாகும்) ஒரே புத்தகம் வேதாகமம் மட்டுமே. இது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
4. வானமும் பூமியுங்கூட ஒழிந்துபோம். ஆனால் தேவனுடைய வசனமோ (பரிசுத்த வேதாகமம்) என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இதுவும் உலக அதிசயங்களில் ஒன்றே. இப்போதும் இதன் செய்தி வானொலி, சினிமா, டெலிவிஷன், ஒலிபெருக்கிகள், கோடிகோடியாக துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் மூலம் உலகமெங்கும் மிக வேகமாக இலட்சக்கணக்கான தேவதாசர்மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
5. அகில உலக வரலாற்றில் புருஷனை அறியாத ஒரு கன்னிகை பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். தேவன் மாம்சத்தில் மானிடவதாரமாய் அதிசயமாய் வெளிப்பட்டார். அவர் நாமம் இயேசு. இதுவும் உலக அதிசயங்களில் ஒன்றேயாகும்.
6. இயேசு என்ற பெயரில் பாவ மாம்ச சரீரத்தில் வெளிப்பட்ட சர்வ வல்லமையுள்ள, சர்வத்துக்கும் மேலான தேவன், மனுக்குலத்தின் பாவ பரிகாரத்துக்காகத் தம்மை முற்றிலும் பாவிகளின் கையில், சிலு வையில் ஆணியடித்து, தமது மாசற்ற இரத்தம் முழுவதும் சிந்தி மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தது உலக அதிசயங்களில் ஒன்றேயாகும்.
7. சிலுவையில் மரித்து, பின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டிருந்த இயேசு, போர்ச்சேவகர்கள் இரவு பகலாக காவல் காத்துக் கொண்டிருந்தும், அவர் முன்னதாக தீர்க்கத்தரிசனம் உரைத்திருந்தபடியே மூன்றாம் நாள் மரணத்தை ஜெயித்து, உயிருடன் உயிர்த்தெழுந்ததும் அவர் அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினால் தம்மை உயிரோடிருக்கிறவராக அநேகருக்குக் காண்பித்து விளங்கப்பண்ணினதும் அதிசயங்களில் ஒன்றேயாகும்.