January

ஐனவரி 12

“உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு……” (1.பேது.4:19)

வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய தேவனை நம்புவதற்கு அதிக விசுவாசம் தேவை. ஏனெனில், இவ்விசுவாசத்தின் நிச்சயத்தின்மூலம், ஒருவரை ஆண்டவர் இயேசுவண்டை வழிநடத்தி அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ள உதவமுடியும். அறிவியலார் கணக்கிட்டபடி மிக நுட்பமாக உருவாக்கப்பட்டது இப்பரந்த உலகம். இது தானாக தற்செயலாக அமைந்தது எனக்கூறுவது தவறு. இது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. வெறுமையிலிருந்து உலகத்தையும், உயிரற்றவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், பயனற்றவைகளிலிருந்து பயனுள்ளவற்றையும் உருவாக்கிய தேவன் ஒருவன் உண்டென்பதை மறவாதே! அவரது படைப்புகளின் உருவ அமைப்புpனையும், நிறங்களின் தன்மையினையும் கூர்ந்து நோக்கும்போது, இவை சர்வ வல்லமையுள்ள கர்த்தரால் உருவாக்கப்பட்டதென தெளிவாக அறியலாம். உருவாக்கினவரிடத்தில் வல்லமையும் ஆழ்ந்த திட்டமிடும் பண்பும் உண்டு. அதோடு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

இப்பரந்த உலகையும் இதிலுள்ள யாவற்றையும் படைத்த சர்வ வல்லமையுள்ள அதே தேவன் தன் படைப்புகளின் பாடுகளைப்பற்றி அறிந்து உதவி செய்ய அக்கறை கொண்டுள்ளார். அவரது பிள்ளைகள் எதிர்நோக்கியுள்ள அக்கினி போன்ற சோதனைகளையும் அவர் நன்கு அறிவார் (வச.12). நாம் கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளானதால் (வச.13) அவர் சோதிக்கப்படுகிறவர்களின் உள்ளத்தில் நிறைவான சந்தோஷத்தைக் கொடுக்கிறார். தேவனுடைய சித்தத்தின்படி பாடுபடுகிறவர்களுக்கு அவர் உதவிசெய்கிறார். பாடுகளை இனிய பாடலாகவும், இன்னல்களை இன்பமாகவும் மாற்றுகிறார். ஏனெனில், அவர்தாமே மாற்றினார். யோசேப்பின் கல்லறையின் துக்கம் பரலோகத்தில் பல மாளிகைகளைத் திறக்கும்படி செய்துள்ளது. இயேசு கிறிஸ்துவைச் சாவிலிருந்து உயிரோடு எழுப்பிய தேவன் அதே வல்லமையில் நாம் பங்கடையும்படி செய்துள்ளார். அவர் உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தா என்பதில் ஐயமில்லை!