April

ஏப்ரல் 24

ஏப்ரல் 24

… என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் (சங்.89:33).

இக்கட்டும் துன்பமும் சூழும் வேளையில், என்னால் ஏதும் முடியாது எனக் கருதும் வேளையில், எனக்கு மற்றெல்லா வசனங்களையும் விட அடிக்கடி இவ்வசனம்தான் அதிகமாகக் கண்முன் தோன்றும். நாம் தேவனுடைய உண்மையுள்ள தன்மையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் எந்தச் சூழ்நிலையிலும் தம்மை உண்மையாக நம்புகிறவர்களைக் கைவிடாமல் காக்கிறார் என்பதனை உணர முடியும். நமக்கு இருளாகத் தோன்றுவன யாவும் அவருக்கு முன்பு ஒளியாக இருக்கிறது.

ஒளி நீங்கி இருள் சூழும் வேளையில் தேவ அன்பு மாறாமல் இருக்கும். ஏற்ற வேளையில் அவரது ஒளி மீண்டும் உதிக்கும். மனிதனுடைய இழிவான குணங்களும், கோபமும் என் ஆவியை மேற்கொள்ள முயலுகையில் உன்னதமான அவர், என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன் (சங்.89:28) என உறுதியளிக்கிறார். விரோதிகள் என்னைச் சூழ்ந்து, தங்கள் தந்திரங்களால் என்னை மேற்கொள்ள வரும்போது தேவன், என் உடன்படிக்கையை மீறாமலும்… இருப்பேன் (சங்.89:34) எனக் கூறுகிறார். என் இருதயத்தின் வேதனையாலும், பிறருடைய பயமுறுத்தலாலும் நான் இதில் தோற்றுவிடுவேனோ என்று பயம் தோன்றும். ஆனால் வல்லமையுள்ள அவர் கைவிடுவதில்லை, விட்டுவிலகுவதுமில்லை, தூரமாகிவிடுவதுமில்லை என்பது உறுதி. அவர் தெளிவாக, குறிப்பாக, நம்மைப்பற்றி என் கிருபையை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் என்று வாக்களித்துள்ளார்.