ரோ.15:14-22
பவுலுடைய மனதைப் பளிங்கெனக் காட்டும் சில பகுதிகளில் இது ஒன்று. பவுல் எவரையும் புண்படுத்தாதபடி எழுதுகிறார். ரோமக் கிறிஸ்தவர்களுக்கு தேவ ஊழியம், சபைத் தொண்டு செய்யத் திறனுண்டு என்கிறார். இதுவரை நாம் எப்படி இருந்தோமோ, இல்லையோ இனி நாம் செய்யக்கூடியதில் ஆண்டவர் நம்பிக்கை வைக்கிறார். அவர் மறுவாய்ப்பு அளிக்கும் தேவன். இந்த தெய்வீகத் தன்மை பவுல் மூலம் வெளியாகிறது. நீ அப்படிப் பிறருடைய நல்ல தன்மைகளைக் கண்டுபிடித்து, ஊக்குவிக்கிறாயா? பவுலுடைய கௌரவமெல்லாம் கிறிஸ்துவுக்குப் பணியாளன் என்பதே. கிறிஸ்துவின் அடிமை என்று தன்னை அழைத்துக் கொள்வதே அவருக்குப் பெருமை. நாம் நம்முடைய திறமை, ஊழியம், படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றில் பெருமை கொள்கிறோமா? அல்லது ஆண்டவரிடத்தில் ஒப்புவித்து வெறுமையாக்குகிறோமா? இவை எல்லாவற்றிலும் பவுல் தன்னைக் கிறிஸ்துவின் இசைக்கருவியாக மட்டும் எண்ணினார். ‘ ஆண்டவருடைய ஊழியம்” என்றால் உண்மையாகவே அது அவர் செயல் மனந்திருப்புவதோ, பரிசுத்தப்படுத்துவதோ, எல்லாம் அவர் செய்வது, நம் சாதனையல்ல. தன்னலமும் பெருமையும் கொள்ளாது அவர் மகிமை ஒன்றே நாடி செயல்படுதல் அவசியம்.