மார்ச் 8
ஆவியின் கனியோ…. விசுவாசம். (கலா.5:22)
இந்த ஆவியின் கனி உண்மையுள்ள தன்மையைக் குறிக்கிறது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்குத் தேவையான விசுவாசத்தையோ, ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையின் தேவைகளுக்காக தேவனிடத்தில் கொண்டிருக்கிற நம்பிக்கையையோ இது குறிப்பதில்லை (ஆயினும் உண்மையுள்ள தன்மையில், இந்த நம்பிக்கை உட்பட்டதாயிருக்கிறது). இவைகளுக்கு மாறாக, கர்த்தருடன் அல்லது மற்றவர்களுடன் நாம் ஈடுபடுகிறபோது, நாம் காட்டுகிற உண்மையுள்ள தன்மையையும், நம்பகத்தன்மையையும் இது குறிக்கிறது. “தனக்கும், தன்னுடைய நடத்தைக்கும், தான் அளித்த உறுதிமொழிக்கும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நம்பிக்கையான பொறுப்பிற்கும் உண்மையாக விளங்குதல்” என்று ஒருவர் இதனை வரையறுத்துக் கூறியுள்ளார்.
ஒருவனுடைய பேச்சே அவன் எழுதிக்கொடுத்த பத்திரம் என்று நாம் சொல்லும்போது அவனோடு வாணிகம் செய்வதற்கு, எழுத்தின்மூலம் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தேவையில்லை என்றே பொருள் கொள்கிறோம். ஒரு செயலைச் செய்ய அவன் ஒப்புக் கொள்வானேயாயின், அவன் அதைச் செய்து முடிப்பான் என்று நம்பலாம்.
உண்மையுள்ள மனிதன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருவான், செலுத்தவேண்டிய பணத்தை ஒழுங்காகச் செலுத்துவான், சபைக் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்வான். கொடுத்த வேலையைச் செய்வதற்கு அவனை நினைவுபடுத்த வேண்டியதில்லை. திருமணத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளுக்கு எவ்வித மாற்றமுமில்லாமல் உண்மையோடு நடந்துகொள்வான். குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றுவான். கர்த்தருடைய பணிக்காகப் பணத்தைக் கொடுப்பதில் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பான். தன்னுடைய கண்காணிப்பு வேலையில் காலத்தையும் திறமையையும் குறித்துக் கவனமுள்ளவனாக இருப்பான்.
பேரிழப்பு ஏற்படினும், சொன்ன சொல்லுக்கு உண்மையாக நடந்து கொள்வதே உண்மையுள்ள தன்மையாகும். உண்மையுள்ளவள், “ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்” (சங்.15:4). மேலானவர்கள் அழைக்கிறார்கள் என்றோ, நல்ல உணவு கிடைக்கும் என்றோ ஒப்புக்கொண்ட அழைப்பை நிராகரிக்கமாட்டான். ஒப்புவிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிக்காமல் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளமாட்டான். வேறோருவர் மிகுதியான விலைகொடுப்பதாகக் கூறினாலும், ஒப்புக்கொண்ட விலைக்கே முதலில் ஒப்பந்தம் செய்தவருக்குத் தன் வீட்டையோ பிறபொருட்களையோ விற்பான்.
கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவனாகத் திகழ்வதை விட்டுவிடுவதைக் காட்டிலும் மரிப்பதற்கு ஆயத்தமாயிருப்பதே உண்மையுள்ள தன்மையின் எல்லையாகும். உண்மையான ஒருவனிடம் அவனுடைய விசுவாசத்தை விட்டுவிலகும்படி ஒரு அரசன் கட்டளையிட்டபோது, அந்த மனிதன், “என் இருதயம் நினைத்தது. எனது வாய் அறிக்கை செய்தது. என் கை அதில் பங்குகொண்டது. தேவையானால் எனது இரத்தம் அதற்கு முத்திரையிடட்டும்” என்று பதில் கூறினான். கர்த்தரை மறுத்தால் அதற்குப் பதிலாக அவருக்கு வாழ்வு தரப்படும் என்று பாலிகார்ப்பிடம் சொன்னபோது சூளை எரிக்கப்படுவதையே அவர் தெரிந்துகொண்டார். “எனது 86 ஆண்டு வாழ்க்கையில் அவருக்காகப் பணிபுரிந்தேன். இதுவரை ஒருமுறைகூட என்னை அவர் துன்புறுத்தவில்லை. எனது கர்த்தரும் எஜமானுமாகிய அவரை இப்பொழுது நான் மறுக்கமாட்டேன்” என்று கூறினார்.
கர்த்தருக்காக உயிர்துறந்தோர் மரணம்வரை உண்மையோடு இருந்தனர். இதுவே விசுவாசம் என்னும் கனி. அவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவார்கள்.