மார்ச் 9
ஆவியின் கனியோ….. சாந்தம். (கலா.5:23)
சாந்தம் என்னும் ஆவியின் கனி, ஒருவரது வலிமையற்ற தன்மையைக் குறிக்கும் குணமன்று. மாறாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையால் ஒருவர் அடைகின்ற குணமேயாகும்.
முதலாவதாக, ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் உண்டாகிற தேவனுடைய நடத்துதல் யாவற்றிற்கும் அவன் மனமுவந்து தன்னை ஒப்புவிக்கிற செயலைச் சாந்தம் என்னும் ஆவியின் கனி குறிக்கிறது. எவ்வித எதிர்ப்புமின்றி, கேள்வியும் கேட்காமல், குறையும் கூறாமல், தேவனுடைய சித்தத்திற்குச் சாந்தமுள்ள மனிதன் தலை வணங்குகிறான். “தவறு இழைக்கக்கூடாத ஞானமுடையவராகவும், கனிவற்றவராயிருக்க இயலாதபடி அன்பு நிறைந்தவராகவும் தேவன் இருக்கிறார்” என்பதை அவன் கருத்திற்கொண்டவனாயிருக்கிறான். தற்செயலாகவோ, எதிர் பாராதவிதமாகவோ தன்வாழ்வில் எதுவும் நடப்பதில்லை என்று அனைத்தையும் நன்மைக்கேதுவாகவே தேவன் நடத்துகிறார் என்றும் நம்புகிறான்.
மற்றவர்களுடன் கொண்டிருக்கும் உறவிலும், விசுவாசி சாந்தத்தை வெளிப்படுத்துகிறான். சாந்தமுள்ளவன் தன்னை முதன்மைப்படுத்தாமல் மறைத்துக் கொள்வான். தன் கருத்தை அவன் வலியுறுத்தமாட்டான். அவன் தாழ்மையுள்ளவன். இறுமாப்பு அவனிடம் காணப்படுவதில்லை. உள்ளம் நொறுங்கிய தன்மையை அவன் வெளிப்படுத்திக் காட்டுகிறவனாயிருப்பான். ஏதாவது தவறாகப் பேசினாலும், தவறு இழைத்துவிட்டாலும், அவன் தன் தற்பெருமையின்மேல் வெற்றி கொண்டவனாக, “நான் என் தவறுக்காக வருந்துகிறேன், தலை கூர்ந்து என்னை மன்னியுங்கள்” என்று கூறுவான். அவமானத்தைச் சகித்துக் கொள்வதையே முதன்மையாகக் கருதுவான். அதற்காகத் தன்மானத்தை இழக்கவும் ஆயத்தமாயிருப்பான். நேர்மையைச் செய்வதால் விளையும் இடர்ப்பாடுகளைப் பொறுமையோடு சகித்துக்கொள்வான். அதனை எதிர்த்துப்போராடுவதற்கு எண்ணம் கொள்வதில்லை. பொய்யாகக் குற்றம் சாட்டப்படுகையில் அவன் தன்னைக் காத்திட எவ்வித முயற்சியும் செய்யாது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான். டிரெஞ்ச் என்பார் கூறியுள்ளவதாவது: “மற்றவர்களால் இகழப்படுவதையும், ஏற்படும் இழப்பையும் ஒரு சாந்தமுள்ள மனிதன், தேவனால் அனுமதிக்கப்பட்டவையாகவும், தண்டித்துத் திருத்தும் செயல்களாகவும், தூய்மைப்படுத்தும் செயல்களாகவும் எண்ணி ஏற்றுக்கொள்கிறான்.
“எவ்வித மனக்கசப்புமின்றி தேவனால் அனுமதிக்கப்பட்ட சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மற்றவர்களுடன் இனிமையாகப் பழகி, மென்மையாக நடந்து கொள்கிறவனே சாந்தமுள்ளவன்” என்று ஒருவர் சாந்தகுணமள்ளவனைக் குறித்து வரையறுத்துக் கூறியுள்ளார்.
தன்னுடைய உடன் ஊழியர் உண்மையான கிறிஸ்தவர் இல்லை என்ற குற்றச்சாட்டை அலெக்ஸாண்டர் வொய்ட் என்பார் கேட்டவுடன் வெகுண்டெழுந்தார். இச்செய்தியைக் கொண்டு வந்த சபை உறுப்பினர், “அதுமட்டுமன்று, நீங்களும் உண்மையான கிறிஸ்தவர் அல்லர் என்று அவர் கூறினார்” என்றார். இதனைக் கேட்ட முனைவர் வொய்ட், “நீங்கள் என் அறையை விட்டுப் போய்விடுங்கள். நான் என் உள்ளத்தைக் கர்த்தருக்கு முன் சோதித்துப் பார்க்க என்னைத் தனிமையில் விட்டுவிடுங்கள்” என்றார். இதுவே சாந்தம்.
கர்த்தருடைய நுகத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் சாந்தமும் மனத்தாழ்மையும் உடையவர். அதுபோல நாமும் விளங்கும்போது நம்முடைய ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. முடிவில் இப்புவியைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்.