மார்ச் 10
ஆவியின் கனியோ… இச்சையடக்கம் (கலா.5:23)
ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது போதையூட்டும் பொருள்களைப் பயன்படுத்துவதில் மட்டுமின்றி, வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் உண்டாகிற இச்சையை அடக்கிக் கொள்ளுதலைக் குறிப்பதாகும்.
தூய ஆவியானவரின் வல்லமையால், சிந்தனை வாழ்க்கையை ஒரு விசுவாசி கட்டுப்படுத்தக்கூடியவனாக இருக்கிறான். உணவின்மீது கொண்டிருக்கும் வேட்கை, சிற்றின்பத்தில் நாட்டம், பேச்சு மற்றும் மனப்பாங்கு, மேலும் தேவன் கொடுத்துள்ள பிறவலிமைகள் யாவற்றிலும் இச்சையடக்கமுடையவன் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறான். உணர்ச்சி மிகுந்த பேரார்வத்திற்கோ, விருப்பதற்திற்கோ அவன் எவ்விதத்திலும் அடிமைப்படுகிறதில்லை.
உடற்பயிற்சி விளையாட்டுகளில் வீரனாகத் திகழ்பவன் எல்லாவற்றிலும் இச்சையடக்கத்தைக் கைக்கொள்கிறவனாக இருக்கிறான் எனக் கூறி அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து நகர விசுவாசிகளுக்கு நினைவூட்டுகிறார் (1.கொரி.9:25). “எதற்கும் நான் அடிமைப்படமாட்டேன்” என்று அவர் வேறொரு இடத்தில் கூறியுள்ளார் (1.கொரி.6:12). “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணகிற நான் தானே ஆகாதவனாய்ப்போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளதையும் காண்க (1.கொரி.9:27).
தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிற கிறிஸ்தவன் அளவுக்குமீறி உண்பதில்லை. காபி, தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றிற்கு அடிமைப்பட்டிருந்தால், அப்பழக்கத்தை அவன் உதறித்தள்ளுகிறான். புகையிலை எந்த உருவில் வந்தாலும் அதற்கு அவன் இடங்கொடுப்பதில்லை. உள்ளத்திற்கு அமைதியை உண்டாக்குகிற மருந்துகளையும், தூக்க மருந்துகளையும், வேறெந்த மருந்துகளையும் மருத்துவர் அனுமதித்தாலொழிய அவன் உட்கொள்ளாதிருக்க கவனமுடையவனாயிருக்கிறான். சிற்றின்ப நாட்டம் அவனைத் தாக்குமென்றால் தூய்மையற்ற எண்ணங்களை விட்டொழித்து, தூய்மையான சிந்தனை வாழ்க்கையில் கருத்தூன்றியவனாகச் செயல்புரிகிறான். கர்த்தருடைய பணியில் ஆக்க பூர்வமாகச் செயல்புரிகிறான். அடிமைப்படுத்துகிறதும் நெருக்கி நிற்கிறதுமான கோலியாத் போன்ற பாவத்தை அவன் வெற்றிகொள்ள நாட்டமுடையவனாயிருக்கிறான்.
ஒரு குறிப்பிட்ட பழக்கத்தைத் தவிர்ககமுடியவில்லையென்றும் சிலர் வருந்துவதை நாம் அவ்வப்போது கேட்கிறோம். அவ்விதத் தோல்வி மனப்பான்மை மாபெரும்தோல்விக்கே வழிவகுக்கும் என்பது திண்ணம். இதன் பொருள் யாதெனில், தூய ஆவியானவர் தேவையான வெற்றியைத் தர இயலாதவர் என்பதேயாகும். அது உண்மையல்லவே. புகை பிடிப்பது, குடிப்பது, சூதாடுவது, ஆணையிடுவது போன்ற பழக்கங்களை மனந்திரும்பாத மக்களும் உதறித்தள்ளுவதாக அறிக்கையிடுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இவர்களிடத்தில் தூய ஆவியானவர் குடியிருப்பதில்லை. அவ்வாறாயின், தூய ஆவியானவரைத் தங்களுடைய உள்ளத்தில் குடியிருக்கும்படியாகப் பெற்றிருக்கும் கிறிஸ்தவர்கள் எவ்வளவு எளிதாக அப்பழக்கங்களை விட்டொழிக்க இயலும்.
இச்சையடக்கம், மற்ற எட்டு ஆவியின் கனிகளைப் போலவே, இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும். ஒழுக்கநெறி உடையவர்களாக விசுவாசிகள் செயல்படுவதற்கு இச்சையடக்கம் வழிவகை செய்கிறது. மற்றவர்களால் அச்சீரிய நிலைக்கு ஒப்பான நிலையை அடைய இயலாது.