மார்ச் 7
ஆவியின் கனியோ… நற்குணம் (கலா.5:22)
பண்புகளில் மிகச் சிறந்தது நற்குணமாகும். “எல்லாக் காலங்களிலும் பண்புமிக்க மனிதனாக விளங்க ஒருவரை ஆயத்தப்படுத்துவது இந்த நற்குணமேயாகும்” என்று ஒருவர் இதனை வரையறுத்துக் கூறியுள்ளார். அதாஃது, நற்குணத்தை உடையவராக, ஒழுக்கமுடையவராக, நீதியுடையவராக இருப்பார் என்பதே இதன் பொருளாகும்.
நற்குணம் துர்க்குணத்திற்கு எதிரானதாகும். துர்க்குணம் உடையன் ஏமாற்றுகிறவனாக, ஒழுக்கமற்றவனாக, நம்பத்தாகாதவனாக, நீதியற்றவனாக, கொடுமைப்படுத்துபவனாக, தன்னலமுடையவனாக, வெறுக்கிறவனாக, இச்சையுடையவனாக, சுயக் கட்டுப்பாடு அற்றவனாக இருக்கிறான். நல்ல மனிதனோ, நிறைவானவனாக இல்லாத போதும், உண்மையையும் நீதியையும், தூய்மையையும் இதற்கொப்பான விரும்பத்தக்க குணங்களையும் வெளிப்படுத்துவதில் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.
நீதிமானுக்கும் நல்லவனுக்கும் உள்ள வேறுபாட்டை அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 5:7 ல் பிரித்துக் காட்டுகிறார். நீதிமான் தன் நடக்கைகள் யாவற்றிலும் உண்மையோடும், நேர்மையோடும் விளங்கினாலும் மற்றவர்களிடம் ஐக்கியம் கொள்ளாமல் பிரிந்து வாழ்கிறான். மாறாக, நல்ல மனிதனோ மற்றவர்களை நேசிக்கிறவனாகவும், மற்றவர்களால் அன்புகூரப்படுகிறவனாகவும் இருக்கிறான். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது. நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
இருந்தபோதிலும், நற்குணம் உறுதிபடைத்ததாக விளங்கும் என்பதை எப்பொழுதும் நாம் நினைவுகூர்ந்தவர்களாக இருக்கவேண்டும். பாவத்தைப் பொறுத்துக்கொள்வதோ, காணாததுபோல் நடந்துகொள்வதோ நற்குணத்தின் அடையாளமில்லை. ஆனால், நற்குணம் கண்டித்து உணர்த்தும், தவறைத் திருத்தும், ஒழுங்குபடுத்தும், நற்குண அவதாரமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்ச்சி இதனை நமக்கு வெளிப்படுத்துகிறது.
“நீ தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்லு” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியிருப்பதாலேயே தீமையை நற்குணம் வெல்லக்கூடிய தனித்தன்மையுடையது என்பது தெளிவாகும் (ரோ.12:21). வேறொருவர் நம்மீது கொண்ட வெறுப்பின் காரணமாக, நமது சாட்சியைக் கெடுத்துக்கொள்வோமாயின் தீமையினால் நாம் வெல்லப்பட்டுவிடுவோம். நாம் அதற்கு மேலாக உயர எழுந்தவர்களாக, கிருபையையும் இரக்கத்தையும், அன்பையும் காட்டுவோமாயின் தீமையை நன்மையால் வெல்கிறவர்களாயிருப்போம்.
முர்டோக் கேம்பெல் என்பார் தேவபக்தியுள்ள ஓர் ஊழியரைக் குறித்துச் சொன்ன கதை: அந்த ஊழியருடைய மனைவி அவருடைய வாழ்க்கையைப் பரிதாபத்திற்குரியதாக ஆக்கினாள். ஒருநாள் திருமறையை அவர் படித்துக்கொண்டிருக்கும்போது, அவருடைய கரத்திலிருந்து பிடுங்கி அதை நெருப்பில் எறிந்துவிட்டாள். அவளுடைய முகத்தை ஏறிட்டு நோக்கிய ஊழியர், “இதைக் காட்டிலும் நல்ல சுகமான இடத்தில் இதுவரை உட்கார்ந்ததில்லை” என்று அமைதியோடு கூறினார். அவருடைய நற்குணம் மனைவியின் துர்க்குணத்தை வென்றது. பின்னர் அப்பெண்மணி அன்புமிக்க, கிருபைபொருந்தின மனைவியாக மாறினாள். இம்மாற்றத்தைக் குறித்து கேம்பெல் கூறியதாவது: “அவருடைய யேசபேல், லீதியாளாக மாறினாள். அவருடைய முள் லீலிபுஷ்பமாக மாறியது. நற்குணம் வெற்றி வாகை சூடியது.
ஆவியின் கனி நற்குணம்.