மார்ச் 5
ஆவியின் கனியோ… நீடிய பொறுமை (கலா.5:22)
தொடர்ந்து தொல்லைதரும் வாழ்க்கையில், எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, அத்தொல்லைகளை வெற்றியாக மாற்றும் தன்மையை நீடிய பொறுமை என்னும் நற்குணம் கொண்டிருக்கிறது. எதிரான சூழ்நிலைகளில் நாம் காட்டும் பொறுமையை இச்சொல் குறிப்பிட்டாலும், பிறர் நம்மைக் கோபப்படுத்தும் வேளைகளில் இரக்கமுடைய முறையில் அவற்றைத் தாங்கிக்கொள்வதையே இது பெரும்பாலும் குறிப்பிடுகிறது.
மனிதனிடத்தில் தேவன் நீடியபொறுமையுடையவராக விளங்குகிறார். மனிதனுடைய ஒழுக்கக்கேடான வாழ்க்கையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். விபச்சாரம் சட்ட பூர்வமாக்கப்படுகிறது. ஓரினச் சேர்க்கை ஆதரிக்கப்படுகிறது. கருச்சிதைவுக்கு ஆதாரமான சட்டங்கள், முறிவடையும் திருமணங்கள், ஒட்டுமொத்தமாக ஒழுக்கக் கோட்பாடுகள் நிராகரிக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனின் தலையாய பாவம் யாதெனில், இறைமகன் இயேசு கிறிஸ்து இரட்சகராக ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறார் என்பதாகும். இவ்வாறாக வீழ்ச்சியுற்றிருக்கும் மனுக்குலத்தை தேவன் ஒரே அடியில் அழித்துவிட்டாலும் அவரிடத்தில் ஒருவரும் குற்றம் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் இறைவன் இங்ஙனம் செய்யாமல், மனிதன் மனந்திரும்பவேண்டும் என்று அவனை வழிநடத்தும்படியாக அவருடைய நீடியபொறுமை என்னும் நற்பண்பு திட்டமிட்டுள்ளது. ஒருவரும் கெட்டுப்போவது அவருடைய விருப்பமன்று.
தம்முடைய மக்கள் தங்களைத் தூய ஆவியானவரிடத்தில் ஒப்புவித்து, இந்த நற்குணமாகிய நீடியபொறுமையை வெளிப்படுத்திக்காட்ட வேண்டுமென்று தேவன் விருப்பங்கொண்டிருக்கிறார். நாம் முன்கோபம் கொள்ளலாகாது என்பதே இதன் பொருளாகும். கைப்பிடியைவிட்டு கழன்று பறக்கும் மூடியைப் போல நாம் செயல்ப்படக்கூடாது. நமக்கு எதிராகப் பிறர் இழைக்கும் குற்றங்களால், நமது பொறுமையை நாம் இழந்துவிடக்கூடாது. “வெற்றிபெரும் தன்மையுடைய பொறுமையை” நாம் வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.
கூரி, பெட்சி ஆகிய டென்பூம் சகோதரிகள் இதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினர். “நாசி கொடுங்கோல் ஆட்சியில் சித்திரவதைக் கூடத்தில் சொல்லுவதற்கரிய பாடுகளை இவர்கள் பொறுமையுடன் சகித்தனர். அதுகாலை, விடுதலை பெற்றபின் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று பெட்சி தன் தமக்கையிடம் அவ்வப்போது கூறுவார். அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டுமென்று அவர் கூறுவார். அச்சமயங்களில், சித்திரவதைக்கு உட்பட்டோர் நல்வாழ்விற்காக திட்டங்கள் இயற்றவேண்டுமென்று தனது தங்கையிடம் கூறுவதாகவே கூரி முதலில் நினைத்தார். அதுவல்ல உண்மை. தங்களைக் கொடுமைக்கு ஆளாக்கினவர்களது நல்வாழ்வையே தனது தங்கை கருத்தில் கொண்டிருந்ததை கூரி டென்பூம் அறிந்துகொள்ள அதிகநாட்கள் செல்லவில்லை. “அன்பு பாராட்டுதல் என்றால் என்னவென்று இந்தக் கொடுங்கோலர்கள் கற்றுக்கொள்ளவேண்டும், அவர்கள் நல்வாழ்வை அடையவேண்டும், அதற்கென சில திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய சகோதரி எப்படிப்பட்ட நற்குணம் படைத்தவள்! ஒருமுறையல்ல, எத்தனை முறை எண்ணிப்பார்த்தாலும் அது மிகுந்த வியப்பைத் தருகிறது. கற்பாறை போன்ற கடினமான பாதையில் அவள் அடியொற்றி, பாரமான கால்களோடு மெதுவாகப் பின்தொடர்கிறேன்” என்று கூரி தனது சகோதரியைக் குறித்து கூறினார்.
பெட்சி சென்ற பாதை நீடிய பொறுமையின் பாதையாகும். தன் சகோதரியைப்போல தான் செல்லவில்லையென்று கூரி, தன் தாழ்மையின் நிமித்தமாக கூறினாலும் அவரும் அதே பாதையில்தான் நடந்து சென்றார்.