மார்ச் 2
ஆவியின் கனியோ, அன்பு…. (கலா.5:22)
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்கள் யாவையும் தூய ஆவியானவரால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியவை என்பதை “ஆவியின் கனி” என்னும் சொற்றொடர் முதலாவதாக நமக்குக் கற்பிக்கிறது. இந்தக் கிருபைநிறை நற்குணங்களில் ஏதொன்றையும் மனந்திரும்பாத மனிதனால் வெளிப்படுத்திக் காட்ட இயலாது. தன்னுடைய சொந்த பலத்தினால் ஒரு உண்மையான விசுவாசியும்கூட இக்குணநலன்களைத் திரும்பவும் உருவாக்க முடியாது. ஆகவே, இக்கிருபைகளைக் குறித்துச் சிந்தித்து நோக்குங்கால், இவை இயற்கைக்கு அப்பாற்பட்டவையென்றும், வேற்றுலகிற்குரியன என்றும் நினைவுகூரக்கடவோம்.
இங்கே சொல்லப்பட்டிருக்கிற அன்பு, சரீர வேட்கையினால் எழுகிற காதலோ, நண்பர்களுக்கிடையியே காணும் நட்போ, உறவகளினால் உண்டாகும் நேசமோ அன்று. இது “அகாபே என்னும் தெய்வீக அன்பு. இக் கிரேக்கச் சொல்லுக்கு “இறை அன்பு” என்பது பொருள். இவ்வன்பை தேவன் நம்மிடத்தில் காட்டியிருக்கிறார். நாம் ஒருவரிலொருவர் இவ்வன்பைச் செலுத்தவேண்டும் என்றும் விரும்புகிறார்.
இதனை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக விளக்குகிறேன். ஈகுவேடார் நாட்டில் ஒளகா இந்தியர் என்னும் பழங்குடிமக்களால் ஐந்து இறை ஊழியர்கள் கொலைசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் எட் மாக்குலி என்னும் இளைஞர். அவரது தந்தையாரின் பெயர் முனைவர் வு.நு. மாக்குலி என்பதாகும். ஓர் இரவில் முனைவர் மாக்குலியும் நானும் ஓக்பார்க் என்னும் இடத்தில் முழங்காலில் நின்று தேவனிடம் மன்றாடினோம். அப்பொழுது மாக்குலி கொலையுண்ட தனது மகனையும், ஈகுவேடார் நாட்டையும், அவருடைய மகன் உடல் புதையுண்ட குராரே ஆற்றையும் நினைவுகூர்ந்தவராக ஜெபித்தார். அவர் ஏறெடுத்த ஜெபம்,”எங்களுடைய பிள்ளைகளைக் கொன்றவர்கள் மனந்திரும்ப வேண்டும். அவர்களை நான் காணவேண்டும். அவர்களுடைய தோளில் என் கரத்தை இட்டவனாக, எனது இயேசுகிறிஸ்துவிடம் அவர்கள் அன்புகூருகின்ற காரணத்தினால் நான் அவர்களிடம் அன்புகூரவேண்டும். இது நிறைவேறும் வரை நான் வாழவேண்டும்” என்பதாகும். முழங்காலில் இருந்து நாங்கள் எழுந்தபோது அவருடைய கன்னங்களில் சிற்றோடைபோலக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.
அந்த ஜெபத்திற்குத் தேவன் விடைகொடுத்தார். ஓளகா இந்தியர்களில் சிலர் கிறிஸ்துவிடம் பற்றுறுதிகொண்டவராக அறிக்கை செய்தனர். முனைவர் மாக்குலி ஈகுவேடார் சென்றார். தனது மகனைக் கொன்றவர்களைக் கண்டார். தனது கரங்களால் அவர்களைத் தழுவி, அவர்கள் கிறிஸ்துவின் பால் அன்புகூருவதால், தான் அவர்களிடம் அன்புகூருவதாகக் கூறினார்.
இதுவே அகாபே அன்பு. இது பாகுபாடற்றது. எல்லாரும் மாபெரும் நன்மையைப் பெற்றிடவேண்டும் என்று கருதும் அன்பு. எளிமையானவராயினும், அழகுள்ளவராயினும், எதிரிகளாயினும், நண்பர்களாயினும் இவ்வன்பு பாராட்டப்படுகிறது. இது நிபந்தனையற்றது. தொடர்ந்து கொடுத்தாலும் இது பிரதிபலனை எதிர்பார்க்கிறதில்லை. இது தியாக மனப்பான்மையுள்ளது. விலையை எண்ணிப்பார்க்கிறதில்லை. தன்னலமற்றது. தன்னலனைத் துறந்து பிறர்நலம் பேணுகிறதாயிருக்கிறது. இது தூய்மையானது. பொறுமையற்ற தன்மை, பொறாமை, பெருமை, பழிவாங்குதல், வெறுப்பு ஆகியவை இதில் காணப்படுவதில்லை.
கிறிஸ்தவ வாழ்வில் அன்பு மிகவும் மேன்மையான குணநலனாகும். அன்பில்லாமல் நாம் செய்கிற எந்த மேலான முயற்சியும் வீணே.