எண்ணாகமம் 14:26-45
கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது. விசுவாசிக்கு உன்னத பரிசு: காலேபும், யோசுவாவும் தவிர வேறுயாரும் வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் பிரவேசிப்பதில்லை என்றும், மற்றவர்கள் வனாந்தரத்திலே மரிப்பார்கள் என்றும் திட்டவட்டமாகக் கர்த்தர் மோசே, ஆரோன் ஆகியோரிடம் தெரிவித்தார். காலேபும், யோசுவாவும் கர்த்தரை விசுவாசித்தபடியால் கர்த்தர் அவர்களுக்குச் சிறப்பான வாய்ப்பை அளித்தார். அவிசுவாசிக்குத் தண்டனை: கர்த்தரை விசுவாசியாமல் மக்களைக் கண்டு பயந்து, நடுங்கி துர்ச்செய்தியை இஸ்ரவேல் மக்களிடம் பரப்பின மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். மோசேயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமல் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்வோமென்று துணிகரமாய் மலையின் மேல் ஏறிப் போய் அமலேக்கியராலும், கானானியராலும் முறியடிக்கப் பட்டார்கள். கீழ்ப்படியாமைக்குப் பரிசு தோல்வி. படிப்பினை: நாம் கர்த்தரை விசுவாசியாமல், அவருக்கு மகிமையாய் வாழ இயலாது. விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்போம். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.