பெப்ரவரி 7
கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன் (கலா. 2:20)
எனக்குப் பதிலாளாக மட்டுமின்றி என்னுடைய பிரதிநிதியாகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணத்தைத் தழுவினார். அஃதாவது எனக்காக அவர் அடைந்த மரணத்தில், நானும் மரித்தேன். அவர் அடைந்த மரணத்தில், நான் அடைந்த மரணத்தின் உண்மை அடங்கியிருக்கிறது. இதுகாறும் ஆதாமின் பிள்ளையாக இருந்தேன். எனது முந்தின வாழ்வின் பொல்லாப்பும், சுயமும் சிலுவையில் அறையுண்டன. தேவனின் கணக்கின்படி எனது மாம்சத்திற்குரிய சரித்திரம் முற்றுப்பெற்றது.
இது மட்டுமா! இரட்சகர் அடக்கம்பண்ணப்பட்டபோது அடியேனும் அடக்கம் பண்ணப்பட்டேன். கிறிஸ்துவின் அடக்கத்தில் நான் இணைக்கப்பட்டுவிட்டேன். „நான்“ என்னும் முந்தின மனிதன், என்றென்றிற்குமாக தேவனுடைய பார்வையினின்று அகற்றப்பட்டுவிட்டான் என்னும் சித்திரமாக இது காட்சியளிக்கிறது. மேலும், இயேசு கிறிஸ்து மரித்தோரினின்று உயிரோடு எழுப்பப்பட்டபோது நானும் அவரோடு எழுப்பப்பட்டேன். இப்பொழுது சித்திரம் மாற்றம் அடைகிறது. அடக்கம் செய்யப்பட்ட முந்தின மனிதன் உயிர்த்தெழவில்லை. அதாவது பழைய சுயம் எழவில்லை. புதிய மனிதனே உயிர்த்தெழுந்துள்ளான். அதாவது கிறிஸ்து எனக்குள் வாழ்கிற புதிய மனிதனாக எழுந்துள்ளேன். புதிய வாழ்வினை நடத்திட கிறிஸ்துவுடன் எழுந்துள்ளேன்.
இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் இவையாவும் என் வாழ்வில் நடந்தவையாக தேவன் காண்பிக்கிறார். ஆயின் இவை நடைமுறையில் உண்மையாக விளங்கவேண்டும். மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்னும் சுழற்சிக்குள் நான் சென்றுவந்ததாக என்னைக்குறித்து நானே கணக்கிட்டுக்கொள்ளவேண்டுமென தேவன் விரும்புகிறார். இதனை எங்ஙனம் நான் செயலாற்றுவேன்?
சோதனை வருங்கால், பிணம் எங்ஙனம் செயலற்றுக் காணப்படுமோ அங்ஙனமே நாமும் செயலற்றுக் காணவேண்டும். மொத்தத்தில், „ பாவத்திற்கு நான் இறந்துவிட்டேன். பாவமே! இனிமேல் நீ எனது எஜமான் அல்ல. உன்னைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்“ என்று சொல்லக்கடவோம்.
இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் பொல்லாங்கு நிறைந்த என்னுடைய சுயம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது என்று ஒவ்வொரு நாளும் நான் எண்ணிக்கொள்ளவேண்டும். அதாவது என்னுடைய சுயத்தைக் குறித்த சிந்தனையில் நான் மூழ்கியிருக்கக் கூடாது. ஏதொவொரு நன்மையாகிலும் அதில் காணவேண்டும் என்று விரும்பி, பின்னர் அதில் ஒரு நன்மையும் காணாமல் மனமடிவு கொள்ளவேண்டாம்.
கடைசியாக, புதிய வாழ்வைப் பெற்ற மனிதனாக, புதிய நோக்குடன், புதிய விருப்பத்துடன், புதிய குறிக்கோளுடன், புதிய விடுதலையுடன், புதிய வலிமையுடன் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு வேளையும் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தவனாக நான் வாழ்ந்திடுவேன் என்று ஒவ்வொருவரும் உறுதிகொள்வோம்.
முதன்முதலில் கிறிஸ்துவுடன் இணைந்த உண்மையை ஐhர்ஜ் முல்லர் வர்ணிக்கிறார்: என் வாழ்வில் ஒரு நாள் ஐhர்ஜ் முல்லர் என்னும் நான் இறந்துவிட்டேன். அவருடைய கருத்துக்கள், விருப்பங்கள், ஈடுபாடுகள், சித்தங்கள் யாவும் இறந்துவிட்டன. இந்த உலகத்திற்கு நான் மரித்தேன். நண்பர்களாலும், உறவினர்களாலும் சரி என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் தவறு என்று புறக்கணிக்கப்படுவதற்கும் மரித்துவிட்டேன். „தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்“ என்று காண நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.