பெப்ரவரி 6
நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22).
சபைக்கூட்டங்களிலும், சிறப்புக்கூட்டங்களிலும், இறைவசனக் கலந்துரையாடல்களிலும் பங்குகொள்ளும் பழக்கத்தில் ஒருவகையான ஏமாற்றும் வஞ்சகம் கலந்திருக்கிறது. இவ்விடங்களில் தேவனுடைய வார்த்தைகளைச் செய்திகளாகக் கேட்கிறோம். நாம் ஆற்றவேண்டிய பணிகளைக் குறித்து உரையாடுகிறோம். இவையே, அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறோம் என்னும் ஒரு தவறான நம்பிக்கைக்குள் நம்மை ஆழ்த்திவிடுகிறது. மாறாக, இவை நம்முடைய பொறுப்புகளை அதிகப்படுத்துகின்றன. உண்மையிலேயே நாம் மாம்சத்திற்கு உரியவர்களாக இருந்தபோதிலும், நாம் ஆவிக்குரியவர்கள் என்று நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். வளர்ச்சியற்று தேக்கநிலையில் இருந்தபோதிலும், நாம் வளர்ச்சியடைகிறோம் என்று வீணாக நம்பி ஏமாறுகிறோம். பரிதவிக்கும் மதியீனராக இருந்தபோதிலும், ஞானமுள்ளவாகள் என்று நம்மைப் பற்றிக் கற்பனை செய்துகொள்கிறோம்.
தமக்குச் செவிகொடுத்து அதன்படி செய்கிறவனே ஞானமுள்ளவன் என்பது இயேசு கிறிஸ்துவின் கூற்று. மாறாக மதியீனன் அவருடைய வார்த்தைகளைக் கேட்டும் அதைக் குறித்து ஒன்றும் செய்கிறதில்லை.
அருட்செய்தியைக் கேட்டு, “எவ்வளவு அற்புதமான செய்தி“ எனக் கூறிச் செல்வதில் பயனேதுமில்லை. நான் கேட்டதைக் குறித்து எதையாகிலும் செய்வேன்“ என்று கூறுவதே தகும். மனதின் சிந்தனையை வளர்ப்பதோ, இதயத்தைக் களிகூரச் செய்வதோ, தோலின் நிறம் மாறுவது போன்று மேற்போங்கான மாற்றத்தைக் கொண்டு வருவதோ நல்ல செய்தி ஆகாது. நாம் எடுத்துக்கொண்ட சித்தத்தை ஆக்க பூர்வமாக நிறைவேற்றச் செய்வதே நல்ல செய்தியாகும்.
அருட்செய்தியை வழங்கிக்கொண்டிருந்த ஒரு சொற்பொழிவாளர் தனது செய்தியை நிறுத்தி, நாம் பாடிய முதல் பாடலின் தலைப்பு என்ன என்று கேட்டார். ஒருவருக்கும் விடை தெரியவில்லை. வாசித்த வேத பகுதி என்ன என்று கேட்டார். விடைபகர்வார் ஒருவருமில்லை. கொடுத்த அறிவிப்புகள் எவை என்று வினவினார். மௌனம் தொடர்ந்தது. கூடிவந்த கூட்டத்தினர், சபைக்கூட்டத்தை விளையாட்டுத் திடல் என்று நினைத்தனர் போலும்.
ஓவ்வொரு கூட்டத்தின் தொடக்கத்திலும் கீழ்க்காணும் வினாக்களை நாம் நமதுள்ளத்தில் எழுப்பவேண்டும். இங்கு நான் எதற்காக வந்திருக்கிறேன் ? தனிப்பட்ட முறையில் இன்றைக்கு தேவன் என்னோடு பேசுவதற்கு நான் விருப்பம் உடையவனாக இருக்கிறேனா? அவ்வாறு அவர் பேசுவராயின், அதற்கு நான் கீழ்ப்படிவேனா?
சாவுக்கடலுக்குள் நீரானது தொடர்ந்து உட்புகுந்த வண்ணமாயிருக்கும். ஆயின் அங்கிருந்து நீர் வெளியேறுவதில்லை. அதன் காரணத்தினால் அக்கடல் சாவுக்கடல் என்னும் பெயர் பெற்றது. அதுபோலவே நமது வாழ்விலும் தொடர்ந்து செய்திகளைக் கேட்டும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருப்போமென்றால், நாம் தேக்கநிலையில் இருக்கிறோம் என்பதே அதன் பொருளாகும். „ நான் சொல்லுகிறதைச் செய்யாமல், கர்த்தாவே! கர்த்தாவே! என்று ஏன் என்னை அழைக்கிறீர்கள்? என்று வலியுறுத்திக் கர்த்தர் கேட்கும் கேள்வி நமது இதயத்தில் ஊடுருவிப் பாயட்டும் !