பெப்ரவரி 5
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2)
தேவன் செய்ய நினைத்தது எதையும் ஒருவராலும் தடைசெய்ய இயலாது. மனிதன் பொல்லாப்பை உடையவனாக இருந்தபோதிலும், தேவன் தமது வழியைக் காத்துக்கொள்கிறார். சொல்லுவதற்கு மனிதன் பல வார்த்தைகளை உடையவனாயிருந்தாலும் இறுதியான வார்த்தை இறைவனுடையதேயாம். இதனை, “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை” என்று சாலோமோன் நமக்கு நினைவூட்டுகிறார். தீர்க்கன் எரேமியாவும் இதற்குத் தனது சான்றினை வழங்குகிறார், “கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்” (எரேமி.51:29).
யோசேப்பை ஒழித்துக்கட்ட முடிவுசெய்த அவனுடைய உடன்பிறந்தோர் அவனை மீதியானியரிடம் விற்றுப்போட்டனர். தேவனுடைய சித்தம் நிறைவேறியதே அவர்களுடைய செய்கையின் பலனாயிற்று. எவ்விதச் செலவுமின்றி மீதியானியர் அவனை எகிப்திற்குக் கொண்டுசென்றனர். அங்கு அவன் தலைமை அமைச்சனாகவும், மக்களின் பாதுகாவலனாகவும் உயர்த்தப்பட்டான். பிறவிக்குருடன் பார்வை பெற்று இரட்சகரை விசுவாசித்தான். யூதர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றினர். அவர்களுக்கு அது வெற்றியாயிற்றோ? இல்லை, நல்ல மேய்ப்பர், “தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறார்” (யோ.10:3) என்னும் வசனத்தின்படி, இயேசு கிறிஸ்து செய்யவேண்டிய வேலையை ய+தர்கள் செய்து, அவருக்குச் சற்று இளைப்பாறுதலைக் கொடுத்தனர்.
இயேசுகிறிஸ்துவை மனிதன் சிலுவையில் அறைந்தான். அது மனிதனுடைய பொல்லாப்புகளில் இமயமலைச்சிகரம் போன்றது. ஆயின், பேதுரு இதனை தேவனுடைய ஆலோசனையென்றும், முன்னறிவு என்றும் நினைவுகூர்ந்தார் (அப்.2.23). ஆனால், தேவன் கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி அவரைக் கர்த்தராகவும் இரட்சகராகவும் உயர்த்துவதற்கு, மனிதனின் இராட்சதக் குற்றத்தை ஒதுக்கித்தள்ளினார்.
பெரும் நிலக்கிழார் ஒருவரைக் குறித்து டொனால்ட்டு கிரே பார்ன்கவுஸ் என்பார் கூறிய கதை: நிலக்கிழாரின் பண்ணையில் அழகிய மரங்கள் பல இருந்தன. அவருடைய பரம எதிரி அம்மரங்களில் ஒன்றை வெட்டி நிலக்கிழாரின் உள்ளத்தைப் புண்படுத்த நினைத்தான். காரிருள் சூழ்ந்த ஓர் இரவில் எவரும் அறியாவண்ணம் பண்ணையில் புகுந்து மிகவும் அழகிய மரத்தை வெட்டத்தொடங்கினான். பொழுது புலரும்போது குதிரையில் நிலக்கிழாரும் வேறு ஒருவரும் தன்னை நோக்கி வருவதைக் கண்ட எதிரி, வெட்டிய மரத்தை வேகமாய்ச் சாய்த்தான். ஐயோ, அந்த மரம் அவன்மேலேயே விழுந்தது. தாங்கவெண்ணா வேதனையில் சாவை நெருங்கிய மனிதன் நிலக்கிழாரிடம், “நல்லது, உனது மரங்களில் மிகவும் அழகானதை வெட்டிப்போட்டேன்” என்று தனது வஞ்சக வார்த்தைகளைக் கொட்டினான். ஆனால், நிலக்கிழார் அவனை நோக்கி: “நண்பனே, அவர் கட்டிடக்கலைஞர். இங்கு தோட்டவீடு கட்டமுடிவுசெய்தோம். அதற்காக இம்மரத்தைத்தான் வெட்டவேண்டும் என்று முடிவுசெய்தோம். நீர் இரவு முழுவதும் கடினமாக உழைத்து எனக்கு நன்மை செய்தாயே” என்று பரிதாபத்துடன் கூறினார்.