பெப்ரவரி 4
இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
(சங்.73:15)
இப்பாடலாசிரியரின் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தான் சென்ற தருணத்தில் இச்சங்கீதத்தை எழுதினான் எனக் கருத இடமுண்டு. தன் வாழ்வின் வருத்தத்தையும், பாடுகளையும், வேதனையையும் அனுபவித்த ஆசிரியன் பொல்லாங்கு நிறைந்த மனிதர்களின் செழிப்பை உலகமெங்கும் கண்ணுற்றான். இதன் விளைவாக, தேவனுடைய நீதியைக் குறித்தும், அன்பைக் குறித்தும், ஞானத்தைக் குறித்தும் அவன் உள்ளத்தில் ஐயம் மேலிடத்தொடங்கியது. தேவன் அநீதிக்கு நற்பேற்றை நல்கி, நீதியை ஒறுப்பது போன்று தோன்றுகிறதே !
இங்ஙனம் எண்ணம் கொண்டபோதிலும், ஆசாப் பண்புமிக்க முடிவொன்றை எடுத்தான். உள்ளத்தில் எழுந்த ஐயங்களைப் பறைசாற்றி, தேவனுடைய பிள்ளைகளில் எவரேனும் தடக்கி விழுவதற்கு இடங்கொடுக்கலாகாது என்பதே அச்சீரிய முடிவு.
பல வேளைகளில் நாம் ஐயம் கொள்கிறோம். கேள்விகளைத் தொடுக்கிறோம். தாங்கவொண்ணா வேதனை, எல்லாம் தலைகீழாக நம்மீது விழும் என்னும் நிலை, இவைபோன்றவை ஏற்படும் வேளைகளில் தேவனுடைய நற்பேறுகளைக் குறித்து நாம் கேள்விகளை எழுப்புகிறோம். நாம் செய்யவேண்டியது என்ன?
ஆவிக்குரியோராகவும், ஆலோசனை தருவோராகவும் விளங்கும் ஒரு சிலரிடம் நமது ஐயங்களைப் பகிர்ந்து கொள்வது நன்று. இருள் கவ்விய சுரங்கத்தின் மறுபுற வெளிச்சத்தைக் காண இயலாதவாறு, சில வேளைகளில் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். மற்றவர்கள் அப்பாதையை நன்று அறிந்திருப்பார்கள். அவ்வொளியைக் காணும் அவர்கள் நம்மை நல்வழி காட்டி, நடத்திச் செல்வர்.
„வெளிச்சத்தில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டதைக் குறித்து, இருளில் இருந்துகொண்டு ஐயம்கொள்வது மடமை என்பதே பொதுவான சட்டமாகும். வாழ்வில் உற்சாகம் அற்றுப்போகக் கூடிய சூழ்நிலையில், அதற்கேற்றாற்போல தேவனுடைய திருவார்த்தைகளுக்குப் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, நமது சூழ்நிலைகளை வேதத்தினால் விளக்கவேண்டும். தேவனுடைய நோக்கத்தை எதுவும் தடைசெய்யாது. அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போகாதென்பதை நாம் உணரவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தேவையற்ற முறையில் நமது ஐயங்களைப் பறைசாற்றிச் சுற்றித்திரியக்கூடாது. அவ்வாறு செய்வோமாயின் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டுள்ள எளியோரை இடறுதலில் உட்படுத்தும் ஆபத்தில் அகப்பட்டுக்கொள்வோம் (மத்.18:6).
நாம் பெற்றுள்ள உறுதிகள் எண்ணிலடங்கா. ஐயங்கள் ஒருசில நம் மனதில் ஏற்படலாம். நாம் பெற்ற வாக்குறுதிகளைப் பகிர்ந்துகொள்வோம். கோய்தி என்பார், உங்கள் திடநம்பிக்கையின் பலனை எனக்குக் கொடுங்கள். ஏதேனும் ஐயங்கள் இருப்பின் அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் ஐயங்கள் எனக்குப்போதும் எனக் கூறியுள்ளது மிகப்பொருந்தும்.