பெப்ரவரி 3
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்@ சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. (வெளி 8:3)
இப்பகுதியில் தேவதூதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவேயல்லாமல் வேறு எவருமல்லை. இங்கு அண்ணல், ஆற்றும் ஊழியம் நமக்கு முற்றிலும் ஆறுதலும், தேறுதலுமாயிருக்கிறது. இங்கே அவர் செய்வது யாது? பரிசுத்தவான்களின் மன்றாட்டைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொண்டவராக, தமது மேன்மையான நறுமணப்பொருட்களைச் சேர்த்து, தமது தந்தையாகிய தேவனிடம் அர்ப்பணிக்கிறார்.
நமது மன்றாட்டிலும் புகழ்ச்சியிலும் எண்ணற்ற குறைகள் உள்ளன என்பதை அறிந்திருக்கும் நாம், எவ்வாறு நமது விண்ணப்பங்களை ஏறெடுக்கவேண்டும் என்பதை அறியாதிருக்கிறோம். நமது செயல்கள் யாவும் தவறான நோக்கங்கள் கொண்டவை, தன்னலமிக்கவை, பாவத்தினால் கறைப்பட்டவை.
முழங்காலில் நின்றிட்டு மன்றாடும் வேளைகள்
மனம் தாழ்த்தும் மாந்தர்கள் தூய நல் நேரங்கள்,
விண்ணகரின் பேர்புகழைப் போற்றிடும் காலங்கள்
மன்னவனைக் களிப்பூட்டும் என நினைத்து மயங்கிட்டோம்.
உள்ளத்தைத் துருவியே ஆய்ந்திடும் அண்ணல்நீர்
அள்ளியே மன்னிப்பை பொழிந்திடுவீர் எம்மீது!
தந்தையாகிய தேவனிடம் நாம் ஏறெடுக்கும் புகழ்ச்சியும், பரிந்து பேசுதலும், முதலாவதாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சென்றடையும். அங்கு, அவற்றில் காணும் மாசுகள் யாவும் அகற்றப்பட்டு, முற்றிலும் குற்றமற்றதாகப் பிதாவினிடத்தில் சென்றுசேரும். இதனோடு வியத்தகு முறையில் வேறொன்றும் நடைபெறுகிறது. பரிசுத்தவான்களின் ஜெபத்தோடு, கர்த்தர் தமது நறுமணத் தூபத்தைச் சேர்க்கிறார். அந்தத் தூபவர்க்கம் இயேசு கிறிஸ்துவின் நறுமணம் கமழும் ஆள்தத்துவத்தையும், அவரது செயலாக்கங்களையும் குறிக்கிறது. இதுவே நமது மன்றாட்டுகளுக்கு ஆறுதல் தருகிறது.
இவ்வுண்மை நமக்கு உற்சாகத்தை மேலிடச்செய்கிறது. நாம் அரைகுறையான ஜெபத்தையே ஏறெடுக்கிறோம் என்பதை அறிவோம். மொழியின் இலக்கணத்தைக் கொலை செய்கிறோம். அதில் சொல்வளம் காணப்படுவதில்லை. வேதாக உபதேசங்களை மாற்றித் தவறு செய்கிறோம். இவையாவும் நமது ஜெபத்தின் உற்சாகத்தைக் குன்றிவிடச் செய்யக்கூடாது. மகா பிரதான ஆசாரியரை நாம் உடையவராக இருக்கிறோம். இயேசு கிறிஸ்துவாகிய அவர் அதனைச் சீராக்கி, தூய்மையாக்கி நாம் கூறுகிறது அனைத்தையும், தமது தந்தையிடம் சமர்ப்பிக்கிறார்.