பெப்ரவரி 2
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2.கொரி.4:6)
ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக…. தேவன் பிரகாசித்தார். தேவனிடத்திலிருந்து நாம் பெற்றக்கொண்ட நற்பேறுகளை நமக்கென்று வைத்துக்கொள்ள நாம் உரிமையுடையவர்களல்லர். அவற்றைப் பிறருக்கு கொண்டுபோகும் வாய்க்கால்களாகவே நாம் இருக்கிறோம்என்பதை இச்சொற்றொடர் நமக்குக் கற்பிக்கிறது. “தேவன் எங்கள் இருதயங்களில் பிரகாசித்தார்” என்னும் வாசகம் நமது மனந்திரும்புதலைக் குறிக்கிறது. ஆதிப்படைப்பில் ஒளியை அருமையாகத் தோன்றச் செய்த தேவன், புதிய படைப்பில் தம்மைத்தாமே நமது இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்.
தன்னலத்தின் மிகுதியால், நற்பேறாகிய ஒளியை ஒருவரும் தன்னகத்தே முடக்கிவைக்கக் கூடாது என்பதே தேவனுடைய எண்ணம். மாறாக, இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளி, நம் வாயிலாகப் பிறருக்கும் பாய்ந்து சென்றடையவேண்டும் என்பதே அவர் நாட்டம்.
இதுபோலோரு எண்ணத்துடன் பவல், “தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தினார்” என்ற தேவனுடைய விருப்பத்தைக் குறித்து எழுதியுள்ளார். தம்முடைய குமாரனை நாம் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே அவரை நமக்கு தேவன் வெளிப்படுத்தியுள்ளார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணம் என் உள்ளத்தை ஆட்கொண்டது. அப்பொழுது எனது திருமறையின் முகப்பில் கீழ்க்கண்டவாறு எழுதிவைத்தேன்.
கிறிஸ்துவையே மக்கள் காண விழைகின்றனர்!
உன்னைக் காணும் மக்கள் உன்னில்
அவரை எங்ஙனம் காண்கின்றனர்?
மெக்டொனால்ட்டு! உன்னில் யாரைப் பார்க்கின்றனர்?
“அருட்செய்தியை வழங்குவது புனிதமானது, தெய்வீகமானது, மிகுந்த பயபக்திக்குரியது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஒரு மனிதன், ஒருவரை, வேறு பலருக்குள்ளாக ஊடுருவிப் பாய்ந்து செல்லும்படியாகச் செலுத்துவதாகும். அவ்வாறு செலுத்தப்படுகிறவர் என்றென்றும் வாழும் இயேசு கிறிஸ்துவே” என்று திருவாளர் இயான் மேக்பெர்சன் கூறியதில் வியப்பேதுமில்லை.
இதனை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக அவர் விளக்கிக் கூறியுள்ளார். ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் வானொலியில் உரையாற்றிய செய்தி மின்கம்பியின் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒலிபரப்பப்பட்டது. நியூயார்க் வானொலிக் கூட்டத்தில் எதிர்பாராவண்ணம் ஒரு மின்இணைப்பு அறுந்து ஒலிபரப்பில் தடை உண்டாயிற்று. அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க, கெரால்ட் விவியன் என்னம பொறியியலாளர், ஒரு சில வினாடிகளில் அறுந்துபோன மின்கம்பியின் இரண்டு முனைகளையும் தன் கரத்தினால் வீரத்துடன் சேர்த்துப் பிடித்தார். மாமன்னனின் சொற்பொழிவு அமெரிக்க நாட்டிற்கு தொடர்ந்து சென்றது. ஐயகோ! 250 வோல்ட் மின்சாரம் விவியனின் உடலை உலுக்கியது. எனினும் அவர் பிடித்த இறுக்கம் இளகவில்லை. உறுதியுடன் அவர் பிடித்தபிடி அரசனின் சொற்களை அமெரிக்க மக்களுக்கு ஏந்திச்சென்றது.