முன்னுரைப்பு: சக.2:10-11
சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள். நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
நிறைவேறுதல்
மேற்கூறிய இரண்டு வசனங்களின் சாராம்சம்:
1. கடவுள் ஜனங்கள் மத்தியில் வந்து வசிப்பார்..
2. யூதர்கள் மட்டுமல்ல இன்னும் அநேக ஜாதியாரும் அவருடைய ஜனமாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
1. பூமியையும், வானத்தையும், அண்டசராசரங்களையும் படைத்த ஆண்டவர், வானாதி வானங்களில் வீற்றிருந்து சகல பூச்சக்கரத்தையும் ஆண்டு கொண்டிருப்பவர், தாம் தெரிந்துகொண்ட ஜனத்தின் மத்தியில் வந்து மனுஷனாக வாசம்பண்ணுவேன் என்று சொன்னதாக முன்னுரைத்த சகரியா தீர்க்கதரிசியை ஜனங்கள் பைத்தியக்காரன் என்று சொல்லி இகழ்ந்திருப்பார்கள். ஆனால் அண்டவர் தம் வார்த்தையின்படியே இச்செய்தி சொல்லப்பட்ட 500 வருடங்களுக்குப் பின், பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்துவாக மனித அவதாரம் எடுத்து 33 வருடங்கள் தமது ஜனத்தின் மத்தியில் ஜீவித்து அம்முன்னறிவிப்பை நிறைவேற்றினார் (யோ.1:1-5,14).
2. ஆண்டவர் எபிரெய ஜனத்தை ஆபிரகாமின்மூலமாய் தமது ஜனமாகத் தெரிந்து கொண்டார். உலக மக்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும் மீட்பர் உதிக்கும் ஒரு ஜனமாக இவர்களைப் பயன்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குப்பின் புறஜாதியார் என்று கருதப்பட்டவர்களும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
முதலாவது பரிசுத்த பேதுரு அப்போஸ்தலன் செசரியா பட்டணத்திலிருந்து கொர்நேலியு என்னப்பட்ட ரோம நூற்றுக்கதிபதியின் குடும்பத்தை விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்தார். அவர்கள் பரிசுத்தாவியைப் பெற்றபின் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். (அப்.10).
பின்னர் யூதர், திருவசனத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நின்றபடியால் பவுலும் பர்னபாவும் புறஜாதியாருக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கப் போனார்கள் (அப்.13:46-48). இவர்கள்தான் புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவித்த முதல் மிஷனறிகள். அது முதல் உலகமுழுவதிலுமுள்ள யூதரல்லாத மக்களுக்கு இயேசு கிறிஸ்துவினால் கிடைக்கும் இரட்சிப்பைப்பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டு அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள். நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன் என்ற தெய்வ வாக்கு நிறைவேறிக்கொண்டிருக்கிறது.. புறஜாதியாராயிருந்த நாமும் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் (1.பேது.2:9) ஏற்றுக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் கர்த்தர் இயேசு கிறிஸ்துவை நம்மிடத்தில் அனுப்பினார் என்ற சகரியா தீர்க்கதரிசியின் வாக்கை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம்.