முன்னுரைப்பு: மீகா 5:2
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.
நிறைவேறுதல்: லூக்.2:4-6
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
யோசேப்பும் மரியாளும் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் என்னும் ஊரில் வசித்து வந்தார்கள். ஆனால் மீகா தீர்க்கதரிசிமூலமாய்க் கர்த்தர் உரைத்தபடி இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறக்கவேண்டும். நாசரேத்துக்கும் பெத்லகேமுக்கும் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குமேல் இருக்கும். இத்தூரத்தை ஒரு நிறை கற்பிணி சாதாரணமாக மேற்கொள்ளமாட்டாள். ஆனால் ஆண்டவர் தம் சித்தத்தை நிறைவேற்ற ஒரு புறஜாதியானாகிய ரோமசக்கரவர்த்தி, அகுஸ்துராயனை உபயோகித்தார். ஏசாயா 46:11ல் உராஞ்சுகிற ஒரு பட்சியை கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன். அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன். அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன் என்று கூறப்பட்டிருக்கிறபடி ஆயிரம் மைல் தூரத்திற்கப்பால் வசித்த அகுஸ்துராயன் தன் நாட்டிலுள்ள யாவரையும் ஜனக்கணக்கு எடுப்பதற்காகத் தத்தம் சொந்த ஊர்களுக்குப் போக வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தான். அதன்படி மரியாள் இந்த நீண்ட பிரயாணத்தைச் செய்து பெத்லகேமுக்கு வந்து சேருகிறாள். அங்கு அவளுக்குப் பிரவசம் நேரிடுகிறது (லூக்.2:1-6). இவ்விதமாக இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்ற முன்னுரைப்பு 700 வருடங்களுக்குப் பின் நிறைவேறியது.