ஜனவரி 10
நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி.12:1)
மிகுதியான நிறைவுடைய வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையென்று பலர் கருதுகின்றனர். தடையின்றி மலையுச்சியின் அனுபவங்கள் தொடர்ந்தும் நிகழும் என்று கருதுகின்றனர். கிறிஸ்தவ நூல்களையும், பத்திரிகைகளையும் படிப்பார்கள், தனிப்பட்டோரின் சான்றுகளைக் கேட்பார்கள், எல்லாம் பற்பல திருப்பங்களைக் கொண்ட விநோதமான கதைகளாகத் தோன்றும். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் முடிவுக்கு வந்து விடுகின்றனர். அவர்களுடைய கற்பனை உலகில் பிரச்சனை இல்லை. அங்கு கடின உழைப்பு இல்லை, நாள்தோறும் செய்யவேண்டிய வேலையில்லை, சலிப்பும் இல்லை. பரிப+ரண மகிழ்ச்சியே காணப்படும். தங்களுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதாக இல்லையென்று அறியும்போது அவர்கள் ஊக்கம் குறைந்து, ஒருவகை மயக்கத்துக்குள்ளாகி இழந்துபோனவர்களாகக் காணப்படுகின்றனர்.
சிறிய செயல்களாகத் தோன்றுகிறவைகளைக் கடும் முயற்சியுடனும், விடாமுயற்சியுடனும் செய்வதே „மேலான கிறிஸ்தவ வாழ்க்கை என்று பு. கேம்ப்பெல் மொர்கன் என்பார் கூறியுள்ளார். இதுவே வழி என்று நானும் கண்டிருக்கிறேன். மிகச் சாதாரணமாக வேலைகளில் பங்குபெறுதலும், நீண்டநேர ஒழுங்கான படிப்பும், பலன் ஒன்றும் தெரியாத ஊழியங்களுமாகவே காலம் கடந்துசெல்லும். எதையாவது நான் நிறைவேற்றியிருக்கிறேனா? என்ற கேள்வி அவ்வப்போது எழும். சிலவேளைகளில் ஊக்கமளிக்கும் சில நிகழ்ச்சிகளையும், அற்புதமான முறையில் சில மன்றாட்டுகள் கேட்கப்படுதலையும், வழிநடத்தக்கூடிய சில தெளிவான வசனங்களையும் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம். அதன் விளைவாக இன்னும் சற்று முன்னேறிச் செல்வதற்குப் பெலனடைவோம். இதுவே மாபெரும் உண்மையாக இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை 50 மீட்டர் ஓட்டப்பந்தயமன்று. அது தொலைதூர ஓட்டமாகும். நாம் பொறுமையோடே ஒடவேண்டும். நன்றாகத் தொடங்குவது இன்றியமையாததாகும். என்றாலும் பொறுமையோடு ஓட்டத்தில் நிலைநின்று, எரிந்து பிரகாசித்து ஓட்டத்தை முடிப்பதே தகுதியானதாகும்.
பொறுமையின் வரலாற்றில் ஏனோக்கு புகழ்மிக்க இடத்தை எப்பொழுதும் உடையவனாயிருக்கிறான். 300 ஆண்டுகள் அவன் தேவனோடு நடந்ததைச் சிந்தித்துப்பாருங்கள் (ஆதி.5:22). அந்த ஆண்டுகள் யாவையும் கவர்ச்சி மிக்கவை என்றோ, மனக்கிளர்ச்சியைத் தொடர்ந்து உண்டாக்கியவை என்றோ நாம் நினைக்கத் தேவையில்லை. இவ்வுலகில் சோதனைகளும், குழப்பங்களும், பாடுகளும் இல்லாமல் அவனால் வாழ்ந்திருக்க முடியாது. ஆனால் நன்மைசெய்வதில் அவன் தளர்ந்து போகவில்லை. கடைசிவரை பொறுமையாகக் காத்துக்கொண்டான்.
கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது இயலாது என்று எண்ணி அதை விடுத்து விலகிவிடலாம் என்னும் சோதனை வரும்போது, „ நீங்கள் தேவனுடைய வசனத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது என்னும் வசனத்தை நினைவு கூருங்கள் (எபி.10:36). பண்பில் சிறந்த வாழ்க்கை, எரிந்து பிரகாசித்து சடுதியில் மகிமையை வென்று வருவதன்று. தொடர்ந்து பெருகும் பல நாட்களில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி வாழ்வதேயாகும்.