ஜனவரி 11
இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்.18:16)
இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கின் அடிப்படையிலே வழங்கப்படுவதே முறையான தீர்ப்பு என்று வேதம் கற்பிக்கிறது. இந்த விதியை நாம் கடப்பிடிப்போமானால், கடல்போல் எழுந்துவரும் தொல்லைகள் யாவற்றையும் தவிர்க்கலாம்.
ஒருவருடைய வாதத்தைக் கேட்டு, உடனடியாக அவருக்குச் சாதகமான முடிவிற்கு வருவது நம்முடைய இயல்பாகும். அவருடைய பேச்சு நம்பும்படியாக இருக்கும். அதன் காரணமாக அவரிடத்தில் நாம் பரிவு காட்டுவோம். அவர் கூறிய அனைத்தும் கதையின் ஒரு பக்கம் என்பதை நாம் பின்னரே அறிவோம். மறுபக்கத்தை நாம் கேள்விப்படும்வேளையில் முதலில் கூறியவரால் உண்மைகள் திரித்துக்கூறப்பட்டுள்ளன என்பதை உணருவோம். குறைந்தது அவர் தமக்குச் சாதகமாகச் சாயம்பூசியிருப்பார். தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான். அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் என்பது எத்தனை உண்மையாக இருக்கிறது (நீதி 18:17). அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளுவதற்கு முயச்சி செய்யுமுன்னர் தீர்ப்பு வழங்குவோமாயின், உலகத்தில் நீதியை வழங்குவதாகச் செயல்படும் அமைப்புக்களைக் காட்டிலும், குறைவுடைய நீதியுடையவர்களாகவே நாம் காணப்படுவோம். மேலும், நீதி 18:13ம் வசனத்தில் சொல்லியிருக்கிற குற்றத்திற்கும் ஆளாகிவிடுவோம். காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும், வெட்கமுமாயிருக்கும்.
மேவிபோசேத் அரியணையைக் கவர்ந்துகொள்ள எண்ணினான் என்று தாவீதினிடத்தில், சீவா அறிவித்தபோது அப்பொல்லாங்கான கூற்றை எவ்வித விசாரணையுமின்றி தாவீதி நம்பினான். மேலும், மேவிபோசேத்தின் சொத்துக்கள் அனைதத்தையும் சீபாவிற்கு உரியதாக்கினான் (2சாமு 16:1-4). சிலகாலம் கழித்து எல்லா உண்மைகளையும் அரசனிடம் சொல்வதற்கு மேவிபோசேத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தகுந்த ஆதாரமின்றி தான் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டதை தாவீது அப்பொழுதுதான் உணர்ந்தான்.
இவ்விதியை ஏற்றுக்கொண்டவராகவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் காண்கிறோம். தம்மைக் குறித்துத் தாம் கூறுகின்ற சான்று போதுமானதன்று என்றே கூறினார். (யோவான் 5:31). ஆகவே நான்கு சான்றுகளைச் சமர்ப்பித்தார். யோவான் ஸ்நானகன் (வச 32-35). அவருடைய கிரியை (வச36), பிதாவாகிய தேவன் (வச37-38), திருமறை (வச 39-40). இவையே அந்த நான்கு சாட்சிகள்.
ஆதாரபூர்வமான சான்றுகளை இரண்டு அல்லது மூன்று சாட்சிகளிடமிருந்து நாம் பெறத் தவறுவோமென்றால் உள்ளங்கள் உடைவதற்கும், புகழ்ச்சி குன்றிப்போவதற்கும், சபைகள் பிரிவதற்கும், நட்புகள் முறுpவதற்கும் காரணமாகிவிடுவோம். தேவனுடைய வார்த்தையை நாம் பின்பற்றுகிறவர்களாக இருப்போமெனில் பற்பல அநீதிகளைத் தவிர்ப்போம். பலருடைய உள்ளங்களில் காயம் ஏற்படுவதையும் தவிர்ப்போம்.