ஜனவரி 7
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (2.கொரி.5:6)
ஜெபக்கூட்டத்தைக் காட்டிலும், கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு ஆவலைத் தருகிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? அது உண்மைதான்.
குடியரசுத் தலைவர் பதவி, ஒரு சபையின் கண்காணியைக் காட்டிலும் சிறப்பாகக் கருதப்படுவதன் காரணம் என்ன? பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம், நீ கவனத்தோடு படி. ஒரு நாளில் நீ கண்காணியாவாய் என்று கூறுவதில்லை. மாறாக, நீ நன்றாகப்படி, ஒரு நாள் நீ குடியரசு தலைவராவாய் என்றே கூறுகின்றனர்.
தொழிலில் வெற்றிபெற்ற வாழ்க்கை இறைப்பணியைக் காட்டிலும் மேன்மையாகக் கருத்தப்படுவது ஏன்? தங்களுடைய பிள்ளைகள் ஊழியத்திற்குச் செல்லவேண்டுமென்று பெற்றோர்கள் ஊக்கமளிப்பதில்லை. உலகில் உயர்பதவியை அடைந்தால்போதும் என்று கருதுகின்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பலருக்குத் திருமறையைப் படிப்பதைக் காட்டிலும் மனநிறைவு அளிப்பது ஏன்? தொலைக்காட்சிப்பொட்டிக்கு முன் நெடுநேரத்தை செலவழித்துவிட்டு, திறந்த வேதத்திற்குமுன் சிலமணித் துளிகளைச் செலவிடுவதைக் குறித்து நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
இயேசு கிறிஸ்துவின்மேல் உள்ள அன்பினால் பணியினைச் செய்யத் தயங்கும் பலர், பணத்திற்காக அதனைச் செய்கின்றனர். தாங்கள் அலுவல் புரியும் நிறுவனங்களுக்காக அயராது உழைக்கும் மக்கள், இரட்சகரின் அழைப்பிற்குப் பதில் கூறாமல் முடங்கிப்படுத்துக்கொள்வது ஏன்?
கடைசியாக, சபையைக் காட்டிலும், நமது நாடு மேலானதாகக் கருதப்படுவது ஏன்? அரசியல் கவர்ச்சிமிக்கதாகவும், சபையோ ஆற்றல் அற்ற பொருளாகவும் கருதப்படுகின்றன. இவையனைத்திற்கும் காரணம், நாம் விசுவாசித்து நடக்காமல், தரிசித்து நடக்கிறவர்களாக இருக்கிறோம் என்பதே. நம்முடைய பார்வை மங்கிப்போயிருக்கிறது. பொருட்களின் உண்மையான நிலையை நாம் காண்கிறதில்லை. நிலையற்றவைகளை நிலைபேறானது என்று கருதுகிறறோம். ஆவிக்குரியவைகளைக் காட்டிலும் சரீரத்திற்குரியவைகளுக்கு அதிக மதிப்பழிக்கிறோம். தேவனுடைய தீர்மானத்தைக் காட்டிலும் மனிதனுடைய தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் அழிக்கிறோம்.
ஆனால் நாம் விசுவாசித்து நடப்போமானால் எல்லாவற்றிலும் மாற்றம் உண்டாகும். ஆவிக்குரிய நிறைவான பார்வையைக் கொண்டிருப்போம். தேவன் காண்பதுபோல நாமும் காண்போம். நமது ஜெபவேளையில் நாம் சர்வலோக அதிபதியாகிய தேவனுடைய முன்னிலையில் இருக்கிறோம் என்ற என்னம் அதனுடைய சொல்லிமுடியாத சிலாக்கியத்தை உணரச் செய்யும். நாட்டின் தலைவரைக் காட்டிலும் சபையின் மூப்பர் மேலானவர் என்பதைக் காணுவோம். மன்னன் ஆவது அறிவற்ற செயல், இறைப்பணியே மேல் என்று பர்யன் கண்டதுபோல நாமும் காணுவோம். தொலைக்காட்சி உண்மைக்கு வெகு தொலைவு என்றும் வேதமோ வாழ்வின் நோக்கத்தின் நிறைவாய் இருக்கிறது என்றும் அறிவோம். தொழில் நிறுவனங்களுக்காக நம்மையே அர்ப்பணிப்பதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவுக்காக நாம் செலவிடவும், செலவிடப்படவும் விருப்பம்கொள்வோம். உலகின் மாமன்னனை காட்டிலும், உள்ளுர் சபையும் சபை மக்களும் தேவனுக்கு முக்கியமானவர்கள் என்பதை அறிவோம்.
விசுவாசித்து நடப்பது இத்தகைய வேறுபாட்டை உண்டாக்குகிறது.