ஜனவரி 8
கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். (எரேமி.48:10)
கர்த்தருடைய பணி இன்றியமையாததும், உடனடியாகச் செய்யத்தக்க சிறப்புவாய்ந்ததும், தெய்வீகமானதும், பயபக்திக்குரியதும் ஆகும். அதனை அசதியாய்ச் செய்கிறவன்மீது சாபம் தங்கும். எல்லாவற்றிலும் சிறந்ததை விரும்புபவரும், அதற்குத் தகுதியானவருமாகிய தேவனால், சோம்பலையும், தாமதத்தையும், அரைமனதோடு பணிபுரிவதையும், குறுக்குவழியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அதில் உள்ள மிகவும் இன்றியமையாத தன்மைகளை நாம் சிந்தித்துப் பார்ப்போமென்றால், அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.
1968ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த நிகழ்ச்சி. அந்த நாட்டில் பராகுவே பகுதியில் ஒரு இளம் கிறிஸ்தவன், வேறோரு செக் இளைஞனிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டான். ஜான் பாலக் என்ற அவ்விளைஞன் நற்செய்தியில் உண்மையாகவே நாட்டமுடையவனாகக் காணப்பட்டான். அதை உணர்ந்த கிறிஸ்தவனும் அவனுக்குப் புதிய ஏற்பாடு ஒன்றினைத் தருவதாக வாக்களித்தான். அவனுடைய இருதயத்தில் நல்நோக்கம் நிறைந்திருந்தபோதிலும், ஒரு புதிய ஏற்பாட்டை வாங்குவதற்குப் பலவாரங்கள் காலதாமதம் செய்தான். அதை வாங்கிய பிறகும் உடனடியாகக் கொண்டுபோய்க் கொடுக்கவில்லை. 1969ம் ஆண்டு ஜனவரி 16ம் நாள், ஜான் பாலக், செயின்ட் வென்சிலாஸ் சந்திப்பில் நின்று தன் உடலில் எரிபொருளை ஊற்றித் தன்னையே நெருப்பில் மாய்த்துக்கொண்டான். அவனுக்கு வாக்களிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டு நூலைக் காணாமலேயே மாண்டுபோனான்.
நல்ல நோக்கங்கள் மட்டும் போதா. நரகத்திற்குச் செல்லும் வழி நல்ல நோக்கங்களால் மூடப்பட்டிருகிறது. என்றாலும் அந்த நோக்கங்கள் செய்யவேண்டிய வேலையைச் செய்வதில்லை. அந் நோக்கங்கள் செயல்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கென சில அறிவுரைகளை இங்கே காணலாம்.
முதலாவதாக, அவருக்கென்று சில ஊழியங்களைச் செய்யும்படி, கர்த்தர் உங்களை அழைக்கும்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்காதீர்கள். அவர் தமது எஜமான் என்பதால், எவ்விதக் கேள்வியுமின்றி அவருக்கு நாம் கீழ்ப்படியவேண்டும். இரண்டாவதாக, காலதாமதம் செய்யாதீர்கள். காலதாமதம் மரணத்தை வருவிக்கக்கூடியதும். மற்றவர்களுடைய தேவைகளையும் அவர்கள் பெறக்கூடிய நற்பேறுகளையும் அது கொள்ளையிடுகிறது. நமக்கு அது குற்றஉணர்வையும் கவலையையும் தருகிறது. மூன்றாவதாக, இறைப்பணியை மிகவும் கவனத்துடன் செய்யவேண்டும். செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் (பிர.9:10). இச்செயல் செய்வதற்குத் தகுதிபடைத்ததாயின், அதனை நன்றாய்ச் செய்தலே தகும். கடைசியாக, தேவமகிமைக்கென்று அதனைச் செய்யுங்கள். நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1.கொரி.10:31).
ஏமி கார்மைக்கேல் அம்மையார் இது குறித்துக் கொண்டிருந்த ஆவியை நாமும் உடையவராயிருப்போம். தேவனுடைய சூளுரை என்மீது விழுந்த கடமையாகும். மரத்தின் நிழலில் தங்கி விளையாடுவதை நான் விரும்பமாட்டேன். தோட்டத்தில் பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பது என் பணியல்ல. எனக்களிக்கப்பட்ட பணியினை நிறைவேற்றிக் கணக்கினை ஒப்புவிக்கும்வரை ஓய்ந்திருக்கப்போவதில்லை.