ஜனவரி 3
தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.
(யோ.7:24)
தோற்றத்தின்படி தீர்ப்பு வழங்குவதில் கொண்டுள்ள உறுதியான மனப்பாங்கு, வீழந்துபோன மனுக்குலத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ள பலவீனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒருவருடைய தோற்றத்தின்படியே நாம் தீர்ப்பு வழங்குகிறவர்களாக இருக்கிறோம். பயன்படுத்திய வாகனத்தின் விலை அதனுடைய தோற்றத்தைப் பொறுத்தே மதிப்பிடப்படுகிறது. ஒரு நூலின் தரத்தை, அதனுடைய மேலட்டையைப் பார்த்துக் கணக்கிடுகிறோம். எத்தனைமுறை நாம் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையற்றுப்போனாலும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்ளாமல், அதனை எதிர்த்து நிற்கிறோம்.
நம்முடைய பண்பாட்டின்படி சரீர அழகு ஒருவருடைய மிக உயர்ந்த குணநலமாகக் கருதப்படுகின்றது என்று முனைவர் ஜேம்ஸ் டாப்சன் என்பார், „மறைந்துகொள் அல்லது தேடு“ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சரீர அழகை “மனிதர்கள் மதிக்கும் பொன் நாணயம்“ என்று அவர் அழைக்கிறார். அத்தகு கூற்று உண்மையெனக் கருதத்தக்கபடி, கவர்ச்சியற்ற குழந்தையைக் காட்டிலும், அழகுமிக்க குழந்தை பெரியவர்களின் அன்பைப் பெறுகிறது. கவர்ச்சியான பிள்ளைகளுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் மதிப்பெண்கள் தரத் தூண்டப்படுகின்றனர். பொதுவாக, அழகுள்ள பிள்ளைகள் மற்றப் பிள்ளைகளைப் போலக் கண்டிக்கப்படுகிறதில்லை. ஆடம்பரமற்ற பிள்ளைகள் சிறு தவறுகளுக்கும் அதிகமாகக் குற்றப்படுத்தப்படுகிறார்கள்.
நல்ல உயரமுடையவனும், அழகு நிறைந்தவனுமாகிய எலியாப் என்பவனையே, சாமுவேல் அரசனாகத் தெரிந்தெடுத்திருப்பான் (1.சாமு.16:7). ஆனால் கர்த்தரோ, „ நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரத்தையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் பறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று சொல்லி சாமுவேலைத் திருத்த வேண்டியதாயிற்று.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய கோளத்திற்கு இறங்கி வந்தபோதுதான் உலக வரலாற்றில் மிகப்பெரிய தவறான முடிவு எடுக்கப்பட்டது. சரீரத் தோற்றத்தைப் பொருத்தமட்டில் அவர் கவர்ச்சிமிக்க தோற்றமளிக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை. மனிதர்கள் அவரைப் பார்க்கும்போது, விரும்பத்தக்க ரூபம் அவருக்கில்லாதிருந்தது (ஏசா.53:2). உலகினில் வாழ்ந்த அனைவருக்குள்ளும் உண்மையாகவே அழகு நிறைந்த ஒரே ஒருவராகிய இயேசு நாதரிடம், மனிதர்களால் அழகினைக் காணமுடியவில்லை!
ஆயினும் தோற்றத்தைக் கண்டு முடிவெடுக்கும் தவறான கண்ணியில், அவர் எத்தருணத்திலும் சிக்கிக்கொள்ளவில்லை. அவருடைய வருகைக்குமுன்னரே, அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீhப்புச் செய்யாமலும் இருப்பார் என்று அவரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டது. (எசா.11:3). முகத்தையல்ல, குணத்தையே. வெளியே அல்ல, உள்ளே இருப்பதையே. சரீரத் தோற்றத்தையல், ஆவிக்குரியதையே கர்த்தர் கணக்கில் கொள்கிறார்.