ஜனவரி 4
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (சகரி.4:6)
மனிதனுடைய பலத்தினாலோ அல்லது பராக்கிரமத்தினாலோ பலிபீடத்தில் நெருப்பு பற்றிக்கொள்ள ஏதுவுண்டாகாதபடி, எலியா பன்னிரண்டு குடம் நீரை அதன்மீது ஊற்றினான். அப்பலிபீடத்தின்மீது அக்கினி வந்து இறங்கியபோது, அது தெய்வீக வல்லமையால் ஏற்பட்டது என்பதில் ஐயம் எழ வாய்ப்பில்லாது போயிற்று.
இரவு முழுவதும் தங்களுடைய திறமையினால் வலைவீசியும் சீடர்களால் மீன் எதையும் பிடிக்கமுடியவில்லை. தாங்கள் கர்த்தருக்காக ஆற்றும் ஊழியத்தில் மெய்யான பயன் உண்டாகவேண்டுமானால், அவர்கள் கர்த்தரையே நோக்கிப் பார்க்கவேண்டும் என்னும் உண்மையைக் கர்த்தர் அவர்களுக்குக் காட்ட, இந்நிகழ்ச்சி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
பணமே, கிறிஸ்துவ ஊழியத்தில் மிகவும் இன்றியமையாத தேவை என்று நாம் எளிதில் ஒரு முடிவக்கு வந்துவிடுகிறோம். உண்மையாகவே பணம் ஒருபோதும் இன்றயமையாத தேவையாக இருந்தததில்லை. அது இருக்கப்போவதுமில்லை. கொஞ்சப் பணம்கூட இல்லையே என்று அச்சமடையத் தேவையில்லை. பரிசுத்தமாக்கப்படாத நிறைய பணம் இருக்கிறதென்றுதான் நாம் பயப்படவேண்டும் என்ற ஹட்சன் டெய்லர் என்பார் உரைத்திருப்பது மிகச் சரியானதே.
செயல்த்திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கு நாம் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். மறைமுகமாகச் சில விவேகச் செயல்களைச் செய்யலாம். மனோதத்துவ முறையில் மக்களுடைய மனதை மாற்றலாம், திறமைமிக்க சொற்பொழிவாற்றலாம். பெரும் பெரும் திட்டங்களைத் தீட்டி, கட்டும் பணியில் ஈடுபடலாம், சங்கங்களை ஏற்படுத்தி ஆளுகை செய்யலாம், இவை யாவும் வெற்றியைத் தரக்கூடிய வழிவகைகள் என்று தகுதியற்ற நினைவுகள் நமது உள்ளங்களை ஆட்கொள்கின்றன.
பலத்தினாலோ, பராக்கிரமத்தினாலோ அல்லது மேலே சொல்லப்பட்டிருக்கும் எந்தவொரு முறையினாலோ தேவனுடைய ஊழியத்தைச் செய்து வெற்றிபெறமுடியாது. கர்த்தருடைய ஆவியானவர் மூலமாகவே தேவனுடைய ஊழியம் வெற்றிபெறும்.
இன்றைய நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடு இன்றி, பல விதங்களில் கிறிஸ்தவ ஊழியம் பெயரளவில் நடைபெறுகின்றன. ஆனால் உண்மையான கிறிஸ்தவ ஊழியம் ஆவியானவர் இன்றி நடைபெறுகிறதில்லை. ஆவிக்குரிய போர்புரிதலோ கிறிஸ்தவ ஊழியமாகும். அதில் உலகீயப் படைக்கலன்களுக்கு வேலையில்லை. ஜெபமும், விசுவாசமும், தேவனுடைய வார்த்தையுமே கிறிஸ்தவ ஊழியத்தின் போர்க்கருவிகளாகும் என்பதை அறிந்து செயல்படுவோம்.