சங்.85:1-13
இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள் மகிழ்ச்சியை நிலைநாட்ட இந்த உயிர் மீட்சிக் கூட்டங்கள் உதவி புரிகின்றன. கர்த்தர் தமது ஜனத்தைத் திருப்பிக் கொண்டு வரும் காட்சியினை இன்றைய சங்கீதத்திலே விளக்கமாகக் காணலாம். உயிர் மீட்சியின் அடிப்படையே திரும்பி வருகின்ற வாழ்வாகும். தன் வாழ்க்கையிலே சுய நினைவடைந்து தன் தந்தையிடத்திற்குத் திரும்பி வந்த குமாரனைக் குறித்துப் பரிசுத்த லூக்கா 15ம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். கர்த்தரை நோக்கித் திரும்புகின்ற ஆத்துமாக்கள் அடையும் ஆசீர்வாதங்களையும் கூட இன்றைய சங்கீதத்திலே வாசிக்கிறோம். தேவனுடைய இரட்சிப்பு ஆசீர்வாதங்களுக்கு எல்லாம் அடிப்படையாய் அமைகிறது. இந்த ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து தேவனுடைய கிருபையும் சத்தியமும், நீதியும் சமாதானமும் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. நாம் தேவனுடைய அடிச்சுவடுகளிலே நிலைத்திருக்கும்படி, அவருடைய இரட்சிப்பைத் தேடுவோமாக.