முன்னறிவிப்பு: ஏசாயா 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
நிறைவேறுதல்: லூக்.1:26-17,30-31, 34-35
காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான். அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே. நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
லூக்.2:1,4,7
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,…. பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அவ்விடத்திலே….. அவளுக்குப் பிரவசகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
அக்கால யூதரின் வழக்கப்படி பெற்றோர் பெண், மாம்பிள்ளையைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து சில காலம் சென்றபின்தான் திருமணம் நடக்கும். ஒப்பந்தம் செய்துகொள்ளும்பொது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குத் தங்கள் திறமைக்கேற்ப வெகுமதிகளைக் கொடுப்பார்கள். அதன்பின் சம்பிரதாய முறைப்படி கல்யாணம் நடக்கும் வரை கணவன், மனைவியரைப்போல ஒற்றுமையாயிருந்தாலும் உடலுறவு கொள்ளக்கூடாது. இவ்விதமாக யூதரின் வழக்கப்படி மரியாள் யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருந்தாள்.
தேவதூதன் மரியாளுக்கு அறிவித்தபடி பரிசுத்தாவியானவரின் சித்தப்படி கன்னியாயிருந்த மரியாள் கர்ப்பவதியாகி ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்து அதற்கு இயேசு என்று பெயரிட்டு ஏசாயாவின்மூலமாய் உரைக்கப்பட்ட முன்னறிவிப்பை நிறைவேற்றினாள்.