ஜுன் 11
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது (1.யோ.4:10)
வரையற்ற நேசத்தை மற்றவர்களிடம் செலுத்தும்படி தேவனைத் தூண்டிவிடுவது அவருடைய குணங்களில் ஒன்றாகிய அன்பேயாகும். பிரியமானவர்கட்கு நல்லது, நிறைவானதுமான ஈவுகளை வழங்குவதால் அவருடைய அன்பு வெளிப்படுகிறது.
அவருடைய அன்பைக் குறித்துப் பேசும் எண்ணற்ற வசனங்களில் சிலவற்றைமட்டுமே நம்மால் எடுத்துரைக்க முடியும் ! “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். ஆதலால் காருணயத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்” (எரேமி.31:3). “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோ.5:8). “தேவனாலே இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் தம்முடைய மிகுந்த அன்பினாலே நம்மில் அன்புகூர்ந்தார்” (எபேசி.2:4). நாம் அனைவரும் அறிந்த வசனம், ” தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோ.3:16).
“தேவன் அன்பாவே இருக்கிறார்” என்று யோவான் கூறும் வேளையில், தேவன் என்பதற்கு என்ன பொருள் என்று இங்கே வரையறுத்துக் கூறவில்லை (1.யோ.4:8). தெய்வீக குணத்தில் முக்கியமான கூறு அன்பு என்பதை அங்கே வலியுறுத்துகிறார். நாம் அன்பை ஆராதிப்பதில்லை. அன்பு நிறைந்த தேவனையே ஆராதிக்கிறோம்.
அவருடைய அன்பிற்கும் தொடக்கமில்லை, முடிவும் இருக்கமுடியாது. அதனுடைய நீளம், அகலம், உயரம், ஆழம் அளவிடமுடியாதவை. முற்றிலும் தூய்மையுடையதாக அது இருக்கிறது. சுயநலம் என்னும் கறைiயை அதில் காணமுடியாது. கணக்கிடாமல் செலுத்தப்படுகிற, தியாக மனப்பான்மை உடையதாக அது இருக்கிறது. பிறர் நலத்தை நோக்கமாகக் கொண்டிருக்கும் அன்பு பிரதிபலனை எதிர்பார்க்கிறதில்லை. இனிமையானவர்களிடத்திலும், கவர்ச்சியற்றவர்களிடத்திலும் அது செல்லும். எதிரிகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் அது காட்டப்படும். யாரிடம் செலுத்தப்படுகிறதோ அவருடைய தகுதியின் அடிப்படையில் அல்லாமல், கொடுக்கிறவரின் நல்ல இயல்பையே அடிப்படையாக அது கொண்டிருக்கிறது.
இத்தெய்வீக உண்மையில் நடைமுறை விளைவுகள் தெளிவாய் உள்ளன. “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகிய, கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” என்று பவுல் கூறியுள்ளார் (எபேசி.5:1-2). கர்த்தரிடமாய் நமது அன்பு உயரச் செல்ல வேண்டும், நமது சகோதரர்களிடத்திலும் அது பாய்ந்து செல்ல வேண்டும், இரட்சிக்கப்படாத உலகிற்கு அது பரவவேண்டும்.
அவருடைய அன்பைக் குறித்து ஆழ்ந்த சிந்தனை அவரை ஆராதிக்கும்படி நமக்கு உள்ளுணர்வூட்டும். அவருடைய காலடியில் அமர்ந்தவராக, “இறைவனாகிய நீர் எங்ஙனம் என்னிடத்தில் அன்புகூர்ந்தீர். என்னுடைய அறிவினால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அனால், அது என் இருதயத்திற்கு ஒளியாய்த் திகழ்கிறது” என மீண்டும் மீண்டும் கூறுவோம்!