யூன் 13
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபேசி.2:4)
குற்றம் புரிந்தோர், தோல்வியுற்றோர், துன்புற்றோர் மற்றும் தேவையுள்ளோர் அனைவரிடத்திலும் தேவன் காட்டுகிற பரிவு, மிகுந்த கிருபை, ஆகியவையே தேவனுடைய இரக்கமாகும்.
தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்று வேதம் வலியுறுத்திக் கூறுகிறது. (எபேசி.2:4). மிகுந்த கிருபையுள்ளவர் (சங்.86:5). அவர் மிகுந்த இரக்கமுடையவர் (1.பேது.1:4). அது வானபரியந்தம் உயர்ந்தது (சங்.57:10). “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபை அவ்வளவு பெரிதாயிருக்கிறது (சங்.103:11). “இரக்கங்களின் பிதா” என்று தேவன் அழைக்கப்படுகிறார் (2.கொரி.1:3). அவர் இரக்கம் பாராட்டுவதில் பாரபட்சம் காட்டுவதில்லை, “அவர் தீயோர் மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்” (மத்.5:45). நாம் செய்த நீதியின் நிமித்தம் அவர் நம்மை இரடஇசியாமல் (தீத்து 3:5) அவருடைய ஒப்பற்ற இரக்கத்தினாலே நம்மை இரட்சித்தார் (யாத்.33:19, ரோ.9:15). அவருக்குப் பயப்படுபவர்கள் மேல் அவரது இரக்கம் என்றுமிருக்கும் (சங்.136:1, லூக்.1:50). ஆனால் மனந்திரும்பாதவரிடம் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமே அவரது இரக்கம் காண்பிக்கப்படும்.
கிருபைக்கும் இரக்கத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நான் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியற்ற நற்பேறுகளை என்னிடத்தில் பொழிவது தேவகிருபையாகும். நான் அடையவேண்டிய தண்டனையை அவர் எனக்குத் தராதிருப்பது அவரது இரக்கமாகும்.
தேவனுடைய உபதேசம் ஒவ்வொன்றினுடனும் ஒவ்வொரு கடமை இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கம் கோருகின்றது (ரோ.12:1). இதுவே நாம் செய்யத்தக்க பகுத்தறிவுள்ள, பக்தியுள்ள, நேர்மையான, மதிநுட்பமுள்ள செயலாகும்.
மேலும், ஒருவரிலொருவர் இரக்கம் பாராட்ட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இரக்கம் பாராட்டுகிறவர்களுக்கொரு சிறப்பான வாக்குறுதி தரப்பட்டுள்ளது. “அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்.5:7). பலியையல்ல, இரக்கத்தையே கர்த்தர் விரும்புகிறார் (மத்.9:13). தேவபக்தியற்றவராய் இருப்போர் செலுத்துகிற பிரதானமான பலிகளை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை.
தனது அயலானுக்கு இரக்கம் பாராட்டினவர்களில் ஒருவன் நல்ல சமாரியன் ஆவான். பசியுற்றோருக்கு உணவளித்தல், ஏழைகட்கு ஆடை வழங்குதல், பிணியுற்றோருக்கு உதவிபுரிதல், திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்தல், அழுகிறவர்களுடன் சேர்ந்து அழுதல் யாவும் இரக்கம் காண்பித்தலாகும்.
நமக்கு எதிராகச் செயல்புரிந்தோருக்கு விரோதமாகப் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அவ்வாறு செய்யாதிருத்தலே, நமது இரக்கமுள்ள தன்மையாகும். உண்மையற்றவரிடம் தயவுபாராட்டுதலும் இரக்கமே.
நாம் யாராக இருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, நாம் இரக்கம் பெறும்படியும் (எபி.4:16), பிறர் இரக்கம் அடையவும் (கலா.6:16, 1.தீமோ.1:2) நாம் ஜெபிப்போம். கடைசியாக, அவர் புகழ்பாட தேவகிருiபாயனது நமது இதய நாளங்களை மீட்டிவிடட்டும்.