பெப்ரவரி 1
கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி (2.கொரி.4:4)
அருட்செய்தி கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. மரத்தினில் ஆணிகளால் அடிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட ஒருவரைப்பற்றிய செய்தியாகவே அது இருக்கிறது என்பது உண்மைதான். எனினும் அவர் இப்பொழுது மரத்தில் தொங்கவில்லை, கல்லறையிலும் தூங்கவில்லை. உயிர்த்தெழுந்த நாயகர் பரலோகிற்க ஏறிச்சென்று, தேவனுடைய வலது புறத்தில் மகிமைநிறை மனிதராக வீற்றிருக்கிறார்.
நாசரேத்து ஊரைச் சேர்ந்த ஏழ்மைமிகு தச்சராகவோ, பாடுகளைத் தாங்கிநிற்கும் அடிமையாகவோ, கலிலேயா நாட்டின் அந்நியராகவோ அவரை நாம் அருட்செய்தியில் அறிமுகப்படுத்துவதில்லை. தற்காலச் சமயக்கலை அவரை நன்மை செய்யும் மிருதுவான தன்மையுடையவராகக் காட்டுகிறது. நாமோ அவரை அவ்வாறு அறிமுகப்படுத்தவதில்லை.
நமது அருட்செய்தியின் நாயகர் உயிருள்ளவர், மகிமை நிறைந்தவர். தேவன் அவருக்கு எல்லாப் பெயர்களுக்கும் மேலான திருப்பெயரைத் தந்தருளி, எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தியிருக்கிறார். மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்ட அவர், பிரபுவாகவும் இரட்சகராகவும் இருக்கிறார்.
என்றாலும் அவ்வப்போது நமது பிரசங்கங்களினாலே நமது அண்ணலுக்கு அவப்பெயரைக் கொண்டுவருகிறோம். இப்பேர்ப்பட்ட ஊழியர்களைப் பெற்றது கர்த்தருடைய பாக்கியம் என்று கருதத்தக்கதாக அருட்செய்திப் பணியாளர்களின் திறமை உயர்த்திப் பேசப்படுகிறது. கிறிஸ்துவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலே, அவருக்கு ஏதோ நன்மை செய்துவிட்டதாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆயின், முதல் நூற்றாண்டு திருத்தூதுவர்கள் பறைசாற்றிய நற்செய்தி அதுவன்று. அவர்கள் அறிவித்த நற்செய்தி யாதெனில், “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கொலைசெய்த குற்றவாளிகள் நீங்களே! கொடுமை நிறைந்த கரங்களால் மரத்தினில் அவரை அறைந்தீர்கள். ஆனால், தேவன் அவரை இறந்தோரினின்று உயிருடன் எழுப்பி, வானுலகில் தமது வலப்புறத்தில் அமரச்செய்து, மகிமைப்படுத்தினார். தசையும், எலும்பும் கொண்ட மகிமையுடைய சரீரத்துடன் இன்றைக்கு அவர் அங்கே வீற்றிருக்கிறார். ஆணிகளால் அறையுண்ட அவர் கரத்தில், அகில உலகின் ஆளுகையின் செங்கோல் உள்ளது. நீதியுடன் நியாயம் தீர்க்க அவரே இப்புவிக்கு மீண்டும் வரவிருக்கிறார். நீங்கள் மனந்திரும்பி விசுவாசத்துடன் அவரிடம் திரும்புவது நன்று. இரட்சிப்பு அடைவதற்கு வேறு வழியேதுமில்லை. நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவில்லை என்பதேயாகும்.
மகிமை நிறைந்த மனிதனாகப் புதியதொரு காட்சியில் கிறிஸ்துவை நாம் எடுத்துக் காட்டுவோம். எண்ணிக்கையில் அடங்கா புகழ்ச்சிகளை, அவருடைய நெற்றியில் கிரீடங்களாகச் சூட்டுவோம். அவ்வாறு சொல்லப்படும் அருட்செய்தி, “சகோதரரே நாங்கள் என்ன செய்யவேண்டும்” என்று கேட்கும்படி மக்களைக் கதறச் செய்யும். பெந்தெகொஸ்தே நாளில் நடந்துபோன்று பாவிகள் மனந்திரும்புவார்கள்.