March

மார்ச் 5

மார்ச் 5

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர் (1.தெச.5:24)

இன்றும் தேவன் நம்மோடு பேசுகிறவராயிருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோமா? ஆபிரகாம் போன்ற மனிதர்களிடமும், தாவீது போன்ற இராஜாக்களிடமும், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளிடமும், பேதுரு, பவுல் போன்ற அப்போஸ்தலரிடமும் தேவன் பேசினார். ஆனால் இன்று அவர் தம்முiடைய பிள்ளைகளை அழைத்துப் பேசுகிறாரா? ஆம், அவர் அகஸ்டின், மார்ட்டின் லுத்தர், வில்லியம் கேரி, கட்சன் டெய்லர் போன்றவர்களை அழைத்தார். அன்று அவர் பேசியது போன்று இன்றும் இவரால் மீட்கப்பட்ட தன் பிள்ளைகளாகிய நம்மிடம் உள்ளத்தின் ஆழத்தில் பேசுவதை நம்முடைய அனுபவத்தினால் நாம் உணருகிறோம்.

யாரை நான் அனுப்புவேன் ? (ஏசா.6:8) என்றும், என் பின்னே வாருங்கள். உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் (மத்.4:19) என்றும் அழைத்த தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோ.11:29). அழைக்கும் தேவன் மாறாதவராயிருக்கிறார். நாம்தான் நிலையற்றவர்களாக இருக்கிறோம். அவர் நம்மை அழைக்கும்போது நாம் அதைப் புரிந்துகொண்டவர்களாக உடனே அதற்குச் செவிகொடுத்து கீழ்ப்படிகிறோமா? தமக்கென அவர் நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்குகிறவர். நம்மை அவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது ஆவி, ஆத்துமா, சரீரம் இவை யாவும் குற்றமற்றதாக இருக்கும்படி காக்கிறவர் (1.தெச.5:23).

அவர் உங்களை அழைத்தவுடனேயே, நீங்கள் அவருக்கென கீழ்ப்படிந்தவுடனேயே, அவர் உங்கள் தேவைகளையெல்லாம் நிறைவாக்குகிறவராயிருக்கிறார் (பிலி.4:19). உங்களுக்கென வழியை ஆயத்தமாக்குகிறார் (ஏசா.58:11). உங்களை உயர்த்துகிறார் (சங்.75:7). எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் (சங்.121:7). வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல (யூதா 24) தேவன் உனக்காக இவை யாவும் செய்து முடிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார்.