ஓசியா – அதிகாரம் 8
1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.
2 எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
3 ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான்.
4 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்?
6 அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும்.
7 அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.
8 இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
9 அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப்போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள்.
10 அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.
11 எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.
12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
13 எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
14 இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
ஓசியா – அதிகாரம் 9
1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.
2 தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.
3 அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
4 அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
5 ஆசரிப்புநாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்னசெய்வீர்கள்?
6 இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும்.
7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதிசரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்திலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள்.
8 எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவி பிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
9 கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
10 வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
11 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை.
12 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!
13 நான் எப்பிராயீமைத் தீருவின்திரைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலைசெய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய் விடுவார்கள்.
14 கர்த்தாவே, நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்றமுலைகளையும் கொடும்.
15 அவளுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் முகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.
16 எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் அவைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன்.
17 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் உன் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார் ; அவர்கள் அந்நியஜாதிக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
ஓசியா – அதிகாரம் 10
1 இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான படங்களைச் சிலைகளைச் செய்கிறார்கள்.
2 அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார்.
3 நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
4 பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
5 சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.
6 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான்.
7 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேலிருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
8 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள்முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
10 நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன். அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள்.
11 எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன், எப்பிராயீமை ஏர்பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.
12 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
13 அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள்.
14 ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.
15 உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்தை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.