யூன் 23
இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள். (1.தெச.4:14)
நமக்கு அன்பானவர்களில் ஒருவர் கர்த்தருக்குள் மரணம் அடையும்போது நாம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர் உணர்ச்சி வயப்பட்டு தொய்ந்துபோகின்றனர். மற்றவர்கள் , வருத்தமடைந்த போதிலும், அச்சூழ்நிலையைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். நாம் எவ்வளவாக தேவனுக்குள் வேர்கொண்டிருக்கிறோம் என்பதையும், எவ்வளவாக விசுவாசத்தின் உண்மைகளை நிறைவாக நமக்குரியதாக்கிக்கொள்கிறோம் என்பதையும் அது சார்ந்திருக்கிறது.
முதலாவதாக, இரட்சகருடைய நிலையில் நின்று, மரணத்தை நாம் காணவேண்டும். அவருடைய ஜெபத்திற்கு விடையாக இது இருக்கிறது. “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோ.17:24). தமக்கு இன்பமானவர்கள் அவரோடுகூட இருக்கும்படியாகச் செல்கிறபோது, தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாகிறார் (ஏசா.53:11). “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15).
இறந்துபோனவருக்கு, அது எத்தகைய மேன்மையுடையது என்பதை எண்ணி மகிழவேண்டும். மன்னரின் அழகினைக் கண்டு மகிழ அவர் வழி நடத்திச் செல்லப்படுகிறார். பாவம், நோய், வேதனை, வருத்தம் ஆகியவற்றினின்று அவர் என்றென்றைக்குமாய் விடுதலை பெறுகிறார். தீங்குவராததற்கு முன்னே அவர் எடுத்துக் கொள்ளப்படுகிறார் (ஏசா.57:1). பரிசுத்தவான் தனது வீட்டிற்குச் செல்வதற்கு ஒப்பானது வேறில்லை. ஒரு களிமண் கட்டி என்னும் நிலையிலிருந்தும், உலகப் பொருட்களின் கட்டுகளிலிருந்தும் நீங்கி, எண்ணிலடங்கா தேவதூதர்களால் வரவேற்கப்படுவது எத்தனை மேன்மை. இதனை மேலும் விளக்குகிறார் பிஷப் ரைல், “விசுவாசிகள் இறக்கும் அதே தருணத்தில், அவர்கள் விண்ணுலுகைச் சென்றடைகின்றனர். போர் முடிவடைந்துவிட்டது. இருள் நிறைந்த பள்ளத்தாக்கையும், ஆற்றையும் கடந்துவிட்டனர். நாமும் அதன் வழியாக ஒருநாள் கடந்து செல்லவேண்டும். மனிதர்களுக்கென்று பாவம் கலந்து கொடுத்த கசப்புமிக்க பானத்தைப் பருகிவிட்டனர். அவர்கள் சேர்ந்த இடத்தில் துக்கமில்லை, பெருமூச்சும் இனியில்லை. அவர்கள் அங்கிருந்து மீண்டும் வரவேண்டும் என்று நாம் நிச்சயமாய் விரும்பமாட்டோம்! அவர்களுக்காக அல்ல, நமக்காகவே நாம் அழ வேண்டியவர்களாயிருக்கிறோம்.
நமக்கு இன்பமானவர்களது மரணம் துக்கத்தையே கொண்டுவருகிறது. ஆயின் நம்பிக்கையற்றவர்களைப்போன்று நாம் துக்கப்படுகிறதில்லை (1.தெச.4:13). மேலான இடத்தில் அதாவது, கிறிஸ்துவுடன் அவர் இப்பொழுது இருக்கிறார் என்பதை அறிவோம். இந்தப் பிரிவு குறுகிய காலத்திற்குரியது என்பதையும் அறிவோம். இம்மானுவேலின் நாட்டில் மலைப்பகுதியாகிய மேலான சூழ்நிலையில் மீண்டும் அவர்களோடு இணைக்கப்படுவோம் என்று அறிவோம். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருக்கவும், உயிரோடிருக்கும் மற்றவர்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மேகங்களின் வழியாக அவர்களோடு கர்த்தரை எதிர்கொண்டு போகவும், பின்னர் எப்பொழுதும் கர்த்தருடன் இருக்கப்போகிறதுமான கர்த்தருடைய வருகையை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (1.தெச.4:16-17). இந்த நம்பிக்கை பெருத்த மாற்றத்தை உண்டாக்குகிறது.
தேவனுடைய ஆறுதல் நமக்குக் கொஞ்சமானவை அல்ல (யோபு 15:11). நமது துக்கம் இன்பத்தோடு கலந்திருக்கிறது. நாம் அடையும் இழப்பு நித்திய நற்பேற்றினால் மிகுதியாக ஈடுசெய்யப்படுகிறது.