யோபு – அதிகாரம் 11
1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக:
2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ?
3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?
4 என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர்.
5 ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து,
6 உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால் அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும்.
7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
8 அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன?
9 அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.
10 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும் அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்?
11 மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ?
12 புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.
13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
14 உம்முடைய கையிலே அக்கிரமமிருந்தால் அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.
15 அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்.
16 அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர்.
17 அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர்.
18 நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர்.
19 பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர், அநேகர் முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள்.
20 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலமானவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல ஒழிந்துபோகும் என்றான்.
யோபு – அதிகாரம் 12
1 யோபு பிரதியுத்தரமாக:
2 ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
5 ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
6 கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப்போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.
8 அல்லது பூமியை விசாரித்துக்கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
9 கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றிலும் அறியாதவன் யார்?
10 சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
11 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
12 முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால் பூமியைக் கீழதுமேலதாக்கும்.
16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
18 அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
22 அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
23 அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
24 அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
25 அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.
யோபு – அதிகாரம் 13
1 இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
3 சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
4 நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது எங்களுக்கு ஞானமாயிருக்கும்.
6 நீங்கள் என் நியாயத்தைக்கேட்டு என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
8 அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
10 நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
11 அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
12 உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,
13 நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.
14 நான் என் பற்களில் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
16 அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
17 என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
18 இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
19 என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
20 இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
22 நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
24 நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.
25 காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
26 மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
27 என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
28 இப்படிப்பட்டவன் அழுகிப்போகி, வஸ்துபோலவும் பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.