ஆதாமும் ஏவாளும் பிசாசாகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து விலகித் தங்களை ஒளித்துக் கொண்டபோது:
முன்னுரைப்பு: ஆதியாகமம் 3:14-15
ஆதி 3:14
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
ஆதி 3:15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
நிறைவேறுதல்:
முதன் முதலாக பிசாசை ஜெயிக்க ஒருவர் பிறப்பார் என்ற முன்னுரைப்பு கர்த்தரால் இங்கே உரைக்கப்பட்டது. அதே சமயத்தில் அப்படிப் பிறப்பவர் மனித சிருஷ்டிப்பின் முறைப்படி ஓர் ஆணின் சேர்க்கையினால் (ஆணின் வித்தினால்) உண்டாகாமல் பெண்ணின் வித்தினால் மட்டும் பிறப்பார் என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்து மட்டும்தான் பரிசுத்த வேதாகமத்திலே ஸ்தீரியின் வித்து என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தேவ ஆவியினால் உருவாக்கப்பட்டவர்.
பரிசுத்த வேதாகமத்தில் முழுவதும் ஆண்களுடைய வம்சவரலாறுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்.. ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்……. என்று. ஆனால் இயேசு கிறிஸ்து மட்டும் இதற்கு விதிவிலக்காக ” அவள் (மரியாள்) பரிசுத்தாவியினாலே கர்ப்பவதியானாள்” (மத்.1:18) என்று கூறப்பட்டிருக்கிறது.
ஸ்திரீயின் வித்து – இயேசு கிறிஸ்து
சர்ப்பத்தின் வித்து (சாத்தானின் வித்து) – அந்திக் கிறிஸ்து
தேவதூதன் மரியாளுக்குத் தரிசனமாகி அவளுக்குப் பிரதியுத்தரமாக, பரிசுத்தாவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும் என்றான் (லூக்.1:35).
இவ்விதமாக மனிதன் பாவம் செய்த உடனே அவனைப் பாவத்திலிருந்து மீட்க ஆண்டவர் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார்.
ஸ்திரியின் வித்து என்பதின் மூலம் ஆரம்பத்திலேயே மீட்பரின் கன்னிப் பிறப்பை ஆண்டவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவருடைய ஒவ்வொரு நடத்தையும் அவர் பிறப்பதற்கு ஆயிரக்கணக்கான (4000) வருடங்களுக்கு முன்பே கர்த்தராலும் அதன்பின் பல தீர்க்கதரிசிகளாலும் வெவ்வேறு காலங்களிலே முன்னறிவிக்கப்பட்டு வந்து கடைசியில் இயேசு கிறிஸ்துவில் அவைகள் முழுவதும் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறித் தீர்ந்தன..
இதேவிதமாக சர்ப்பத்துக்கு கொடுக்கப்பட்ட சாபமும் கர்த்தரின் வாக்கின்படியே நிறைவேறியது.