மார்ச் 26
(அதைக் குறித்து) உனக்கென்ன ? நீ என்னைப் பின்பற்றி வா (யோ.21:22)
முதிர்வயதுவரை வாழ்ந்து பின்னர் தியாகிக்குரிய மரணத்தை அடைவான் என்ற பேதுருவைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறிய சற்று நேரத்திற்குள்ளாக, யோவானைத் திரும்பிப் பார்த்த பேதுரு, தன்னைக் காட்டிலும் சிறப்பாக அவன் நடத்தப்படுவானோ என்ற எண்ணம் கொண்டான். தனது எண்ணத்தைக் கேள்வியாகவும் எழுப்பினான். அதற்கு மறுமொழியாகக் கர்த்தர், “அதைக் குறித்து உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா” என்றுரைத்தார்.
பேதுருவின் மனப்பான்மை, டாக் காம்மர்ஸ் ஜோல்ட் என்பவர் இதைக் குறித்து எழுதிய சொற்களை நமது நினைவிற்குக் கொண்டுவருகிறது. “இவையெல்லாம் நடந்த பின்னரும் உங்களுடைய வாழ்வில் அடையாத ஒன்றை மற்றவர்கள் பெற்று மகிழ்வடைகிறதைக் காணும் வேளையில் நீங்கள் வெறுப்பென்னும் கசப்புணர்வோடு சீறி எழ ஆயத்தப்படுகிறீர்கள். ஒருவேளை அந்தச் சீற்றம் மகிழ்ச்சியான ஒரிரு நாட்களுக்குச் செயலற்றுக் கிடக்கும். பேதுருவின் வார்த்தைகள் மிகவும் அற்பமான நிலையில் இருந்தாலும், மரணத்தின் கசப்பினாலே எழுந்த வார்த்தைகளாகவே இருக்கின்றன. மற்றவர்களோ தொடர்ந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே அதன் பொருளாயிருக்கிறது.
கர்த்தருடைய சொற்களை நாம் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்வோமாயின் கிறிஸ்தவ மக்களிடையே காணும் பற்பல பிரச்சனைகள் நீங்கிப்போகும்.
நம்மைக்காட்டிலும் குறைவான தேவபக்தியுடையவர்கள் நல்ல உடல் நலத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இரண்டு மூன்று விதமான நீங்கா நோய்களுடன் நாம் போராடுகிறோம். கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகள் மற்ற இல்லங்களில் காண்கிறோம். நம்முடைய பிள்ளைகள் சாதாரணமானவர்களாகவும் எவ்விதச் சிறப்பும் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
நாம் செய்வதற்கு விடுதலை பெற்றிராத செயல்களை, மற்ற விசுவாசிகள் செய்கிறதை நாம் காண்கிறோம். அவை பாவமற்றவைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெற்றிருக்கிற சுயாதீனத்தைக் கண்டு மனக்கசப்பு அடைகிறோம்.
கிறிஸ்தவப் பணிபுரியம் ஊழியர்களுக்கிடையேயும் இது காணப்படுகிறது. ஊழியத்தில் பொறாமை உடையவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்வது மிகவும் வருந்தத்தக்கது. ஒருவர் புகழ்பெற்றவராக இருக்கிறார், பல நண்பர்கள் அவருக்கு இருக்கிறார்கள், எல்லாராலும் அறியப்பட்டவராக அவர் இருக்கிறார். தகுதியற்றது என்று கருதும் வழிமுறைகள் நமது உடன் ஊழியர்கள் பின்பற்றுவதால் நாம் மனமடிவு அடைகிறோம்.
நம்மிடத்தில் காணப்படும் தகுதியற்ற மனப்பான்மை யாவற்றிற்கும் கர்த்தருடைய வார்த்தைகள் மகா வல்லமையோடு எதிர்த்து வருகின்றன, “அதைக் குறித்து உனக்கென்ன? நீ என்னைப் பின்பற்றி வா. “மற்ற கிறிஸ்தவர்களோடு கர்த்தர் எவ்வாறு, ஈடுபடுகிறார் என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல. நமக்கென்று கர்த்தர் வகுத்த பாதையில் அவரைப் பின்பற்றுவதே நமது பொறுப்பாகும்.