ஏசா.25:1-12
சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்து கடைசி நாட்களைக் குறித்த தரிசனத்தில் ஏசாயா தீர்க்கன் எளியவர் பெறும் விடுதலை பற்றிக் கூறுகிறார். இறைவன் எளியவர்களை நேசித்து அவர்களைப் பராமரிக்கிறார். நமது சமுதாயம் பொருளாதார வேறுபாட்டினால் பாகுபடுத்தப்பட்டுள்ளது. பகையினால் பிளவுப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் இறையாட்சியை மக்கள் முழுமையாய் ஏற்றுக் கொள்ளும்போது ஏழை செல்வந்தன் என்ற வேறுபாடு முறிவடைகிறது. சமாதானம் நிலவுகிறது. தீர்க்கன் இயேசு கிறிஸ்துவின் கடைசி இராப்போஜனத்தின் நிழலாக ஒரு விருந்தைக் குறித்து எழுதுகிறார். யோவான் 6:35ல் ஏசு கிறிஸ்து நானே ஜீவ அப்பம் என்னிடத்தில் வருகிறவன் ஒரு போதும் பசியடைவதில்லை எனக் கூறுகிறார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார். மனிதனின் கீழ்ப்படியாமையினால் சாபமாகிய மரணம் தோன்றியது. மரணத்தினால் ஏற்படும் வேதனை விவரிக்க இயலாது. இறைவனின் இறையாட்சி ஏற்படுத்தப்பட்டவுடன் கடைசி சத்துருவாகிய மரணம் பரிகரிக்கப்படும். இயேசு கிறிஸ்து தனது உயிர்தெழுதலினால் மரணத்தை வென்றார். ஜீவ காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும் படிக்குப் பிசாசைத் தமது மரணத்தினாலே வென்று உயிரோடு எழுந்தார். நாம் ஆராதிக்கும் கர்த்தர் உயிர்த்தெழுந்தவர். யோவான் 11:25-ல் நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார்.