பெப்ரவரி 22
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்… (எபேசி.4:12).
புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வரங்கள் பரிசத்தவான்கள் சீர்பொருந்துவதற்காகவும், அவர்கள் நற்செய்திப் பணியினை நிறைவேற்றுவதற்காகவுமே தரப்பட்டுள்ளன. பரிசுத்தவான்களின் தொடரும் பணி வரங்களைப் பெருகச் செய்யும். ஒருவர் தான் இறைப்பணியாற்றும் இடத்தில் குறுகிய காலத்திற்குள் தனது பணியை நிறைவேற்றிவிட்டு வேறு இடத்தை வென்றிட நாடிச்செல்வாராயின் அதுவே கிறிஸ்தவப் பணியில் அடையும் வெற்றியாகக் கருதப்படும்.
இதைத்தான் பவுல் தன் வாழ்வில் நிறைவேற்றினார். எடுத்துக்காட்டாக, தெசலோனிக்கேயா பட்டணத்திற்கு வருகை புரிந்த பவுல் மூன்று ஓய்வுநாட்கள் நற்செய்தியை வழங்கினார். அதன் விளைவு, ஆங்கு செயலாக்கம் மிக்க சபை நிறுவப்பட்டது. சபை நிறுவுதலில் இத்தகைய விரைவு அபூர்வமானது. ஆயினும், எபேசுப் பட்டணத்தில் தங்கியிருந்த இரண்டாண்டுக் காலமே அவர் சபை நிறுவுவதற்கென எடுத்துக்கொண்ட நெடுங்காலமாகும்.
சொல்லப்பட்டுள்ள வரங்களில் ஏதொன்றையும் தம்மக்கள் சார்ந்திருக்கக்கூடாது என்றே தேவன் விரும்புகிறார். வரங்கள் தியாகம் செய்யப்படத்தக்கவையே. விசுவாசிகள் என்றென்றும் திறமைமிக்க சொற்பொழிவுகளையே நாடுவார்கள் எனில், ஊழியத்தில் பங்கவகிக்காமல், அடையவேண்டிய ஆவிக்குரிய வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். தேவன் விரும்பும் நற்செய்தி விரிவாக்க வளர்ச்சி உலகில் நிகழாது போய்விடும்.
வெளிநாட்டிலிருந்து வந்து வெற்றிமிக்க இறைப்பணியைச் செய்த ஊழியர், தனக்குப்பின் தான் செய்த பணியினைத் தொடர வேறோரு ஊழியரைக் கொண்டுவரமாட்டார் என வில்லியம் டில்லான் என்பவர் உரைத்துள்ளார். இவ்வுண்மை உள்நாட்டு ஊழியருக்கும் பொருந்தும். ஒரு உழியரின் பணி நிறைவேறிய பின்னர், அச்சபையின் பொறுப்பை அங்கிருக்கும் விசுவாசிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். மேடைச் சொற்பொழிவாளர்களை அச்சபை தேடி அலையக்கூடாது.
பொதுவாக நற்செய்திப் பணியாளர்கள் தஙர்கள் பணியாற்றும் இடத்தை வாழ்வின் நிரந்தர நியமனமாகக் கருதுகின்றனர். பிறரால் அங்ஙனம் சிறப்பாகப் பணியாற்ற இயலாது எனவும் அவர்கள் காரணம் காட்டுகின்றனர். தாம் அங்கிருந்து இடம்பெயர்ந்ததால் சபைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துபோகும் என்று நினைக்கின்றனர். மற்றவர்கள் சரியான முறையிலும் நம்பிக்கைக்குரிய வகையிலும் பணியினைத் தொடரமாட்டார்கள் என்றும் குறைகூறுவர். ஆனால், மற்றவர்கள் கற்றுக்கொள்ளவேண்டுமே. அதற்கென சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமே. பிறரும் பயிற்சிபெற வேண்டும். பொறுப்புகள் வகிக்கவேண்டும். வளர்ச்சி காணப்படவேண்டும். ஒரு குறிப்பிட்டபோதகரோ, நற்செய்திப்பணியாளரோ இன்றி, சபை தொடர்ந்து செயல்ப்படும் என்ற நிலை வந்தவுடன் அவர் மனக்கிலேசம் அடையவேண்டுவதில்லை. அதனை மனமகிழ்ச்சிக்குக் காரணம் என்றே கருதவேண்டும். தேவையுள்ள பிறஇடத்திற்குச் செல்வதற்கு அவருக்கு விடுதலை கிடைக்கிறது என்றே கருதவேண்டும்.
ஒரு மனிதர் எவ்வளவுதான் வரம் பெற்றவராக இருப்பினும், அவரை நிரந்தரமாகச் சார்ந்து கட்டப்படும் இறைப்பணி தகுதியற்றது என்றே சொல்லவேண்டும். அவருக்கு அங்கு வேலையில்லை என்று சொல்லும் அளவிற்கு அவருடைய திறமை மற்றவர்களிடம் பெருகவேண்டும். பரந்த இவ்வுலகில், அத்தகையோர் வேலையற்றுப்போக தேவன் விடமாட்டார்.