ஜனுவரி 1
என்னை நோக்கிப் பாருங்கள்
ஏசாயா 45:22
புது வருஷத்தின் காலை தொடங்குகிறது. நாமோ இன்னும் துக்கத்திற்கும், துன்பத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்திற்கும் உள்ளானவர்களாகவேயிருக்கிறோம். பாவம் நமக்குள்ளே வாசம்பண்ணுகிறது. எண்ணிறந்த காரியங்கள் நமக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது. ஆகிலும் தேவன் நமக்குச் சொல்லுகிறதென்ன? ‘என்னை நோக்கிப் பாருங்கள். பாக்கியத்தின் ஊற்றாக, கிருபையைக் கொடுக்கிறவராக, உங்கள் சிநேகிதனாக என்னை நோக்கிப்பாருங்கள். எந்தத் துன்பத்திலும், எந்த இடத்திலும், உங்களுக்கு வேண்டிய சகலத்திற்கும், என்னை நோக்கிப்பாருங்கள். இன்றைக்கு என்னை நோக்கிப்பாருங்கள். உங்களுக்குத் தருகிறதற்கான ஆசீர்வாதங்கள் என்னிடமுண்டு. நான் தயவு காண்பிக்கக் காத்திருக்கிறேன். இயேசுவில் நான் உங்கள் பிதா-உங்கள் இகபர நன்மைகளைக் குறித்து எனக்கு அதிகக் கவலையுண்டு. நான் வாக்களித்ததெல்லாவற்றையும் நிறைவேற்றுவேன். உங்களை ஆசீர்வதிக்கவேண்டுமென்றே உங்களோடிருக்கிறேன். உங்கள் காரியங்களில் நான் கவலையற்றவனல்ல. சகலத்தையும் உங்கள் நன்மைக்கென்று முடிப்பதற்கு நான் பொறுப்பாளி. முற்காலங்களில் உங்கள் பேரிலும், மற்றவர்கள் பேரிலும் நம்பிக்கை வைத்தீர்கள். அதனால் உங்கள் நம்பிக்கை அவமாகித் துக்கப்பட்டீர்கள்; இப்பொழுது என்னைமாத்திரம் நோக்கிப் பாருங்கள், சகலத்திற்கும் என்னைப் பாருங்கள். இந்த நாளிலும், இந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளிலும், உங்கள் கண்ணையும் மனதையும் என்னிடம் ஏறெடுங்கள். எனக்கு முன்பாக சமாதானமாயும் பரிசுத்தமாயும் நடவுங்கள். அப்படி நடக்கும்போது, நான் உங்களைப் பரிசுத்தரும் பாக்கியருமாக்குகிறேனோ இல்லையோவென்று பாருங்கள். என்னைச் சோதித்து, என் வாக்கின் ஒவ்வொரு அட்சரமும் உண்மையோ அல்லவோவென்று அறிந்துகொள்ளுங்கள்’ என்கிறார்.
உனதாவி தேகமும்
உன் சிந்தை முழுவதும்
அவருட நேசமே
நடத்தி ஆளட்டுமே;
உன் கண் எந்தநோமும்
அவரையே நோக்கட்டும்.