ஜனவரி 1
இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. (யாத்.12.2)
புத்தாண்டு தீர்மானங்கள் நல்லவை. ஆயினும் எளிதில் மீறக்கூடியவை. புத்தாண்டு மன்றாட்டுக்கள் சிறந்தவை. இறைவனின் இருப்பிடம் சென்று, விடையினை ஏந்திவரும் வாகனத்தை முடுக்கிவிடுகின்றன. புதியதொரு ஆண்டின் தொடக்கத்திற்கு வந்திருக்கும் நாம் கீழ்க்காணும் குறிப்புக்களை நமது மன்றாட்டுகளாக ஏறெடுத்தல் நன்று.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, இன்றைய நாளில் என்னை மீண்டும் உமக்கு ஒப்புவிக்கிறேன். இவ்வாண்டில் என் வாழ்வைத் தூய்மையாக்கி உம் மகிமைக்கெனப் பயன்படுத்துவீராக.
உம்முடைய திருப்பெயருக்கு அவப்பெயரைக் கொண்டுவரக்கூடிய எல்லாப் பாவத்தினின்றும் என்னை விலக்கிக் காத்திடுவீராக. தூய ஆவியானவரால் நான் கற்பிக்கப்படத்தக்க நிலையில் என்னைக் காத்திடுவீராக. நான் ஊக்கமற்றுப் போய்விடாமல் முன்னேறிச் செல்லவிரும்புகிறேன். „ அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் „ என்பதே எனது இவ்வாண்டுக் குறிக்கோளாக இருக்கட்டும். எல்லா மகிமையும் உமக்கே உரித்தாகுக. அதில் ஒன்றையும் தொடாதபடி நான் வாழ உதவுவீராக. நான் எடுக்கும் தீர்மானம் ஒவ்வொன்றும், எனது ஜெபத்தின் பொருளாக விளங்க எனக்கு கற்றுத்தாரும். என்னுடைய சுயஅறிவைச் சார்ந்துகொள்வேனோ என்னும் எண்ணம் என்னை அச்சுறுத்துகிறது. மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். (எரேமி.10:23).
இவ் உலகிற்கு இறந்தவனாக என்னைக் காணச்செய்வீராக. எனக்கு அன்பானவர்களும் நண்பர்களும் வழங்கும் வாழ்த்துதலுக்கும் பழிச்சொல்லுக்கும் நான் மரிப்பேனாக. ஓன்றே என் தூய விரும்பம். அது உமது இதயத்தைக் களிகூரச்செய்வதாகும். புறங்கூறுதலுக்கும், குறைகூறுதலுக்கும் என்னை விலக்கிக், படிப்பினை ஊட்டுவதும் பயனுள்ளதுமான சொற்களைப் பேசச்செய்வீராக.
தேவையுள்ள ஆத்துமாக்களிடம் என்னை நடத்துவீராக. பாவிகளின் நண்பரான உம்மைப்போல என்னை மாற்றுவீராக. அழிந்துபோகிறவர்களைக் குறித்து அழச்செய்வீராக. திரளான மக்களை எனது மீட்பர் கண்டதுபோல நானும் காணவேண்டுமே. கண்ணீரினால் என் பார்வை மங்கவேண்டுமே. ஆலைந்து திரியும் ஆடுகளிடம் பரிவுகாட்டி, என் நேசரின் நிமித்தம் அன்புகூரவேண்டுமே.
கர்த்தாவே, என் கிறிஸ்தவவாழ்வில் இடர்ப்பாடு எது நேரிடினும், நான் குளிர்ந்து, கசந்து, குறைகூறுகிறவனாகப் போய்விடாதபடிக்குக் காத்திடுவீராக. என்னிடத்தில் நீர் ஒப்புவித்திருக்கிற அனைத்தையும் சீராகப் பராமரிக்கவும், பணத்தைத் தகுதியாய்ச் செலவிடவும் என்னை வழிநடத்துவீராக. ஓவ்வொரு வேளையும் எனது சரீரம் தூயஆவியானவரில் ஆலயம் என்று நான் நினைவுகூர உதவிசெய்வீராக. இப்பேருண்மை எனது நடத்தையைச் சீர்ப்படுத்துவதாக.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, இந்த ஆண்டு உம்முடைய வருகையின் ஆண்டாக விளங்குவதாக. உமது திருமுகத்தைக் கண்டு, உமது காலடியில் வீழ்ந்து தொழுதிட வாஞ்சிக்கிறேன். இவ்வாண்டினில், இவ்வினிய நம்பிக்கை என் இதயத்தில் புதிய பொலிவுடன் நிலைத்திருப்பதாக. இவ்வுலகம் என்னை இறுக்கிப் பிடிக்கமுயலும் அனைத்திற்கும் இடங்கொடாமல், உமது வருகையை எதிர்நோக்கிய நடையுடையோனாய்க் காத்திடுவீராக. ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.