Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home வேததியானங்கள்

மத்தேயு 1:1-25

Webmaster by Webmaster
January 18, 2015
in வேததியானங்கள்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

விளக்கவுரை

You might also like

ஆதியாகமம் 10:25-11:26

ஆதியாகமம் 8:1-9:1

ஆதியாகமம் 6:14-7:24

1. மேசியா அரசரின் மூதாதையர் மரபு வரலாறும் அவரது பிறப்பும் (அதி.1)

அ. இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் மரபு வரலாறு (1:1-17)

புதிய ஏற்பாட்டை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், சலிப்படையச் செய்வதாகத் தோன்றும் ஒரு குடும்ப அட்டவணையுடன் ஏன் இந்த நூல் தொடங்குகிறது என வியப்படையக் கூடும். இந்தப் பெயர் அட்டவணையிலிருந்து ஏதொரு சிறப்பான குறிப்பையும் காண இயலாது என்று முடிவுசெய்யும் அவர், இப்பகுதியை விடுத்து நிகழ்ச்சிகளின் விவரங்கள் தொடங்கும் பகுதிக்குத் தாண்டிச் சென்றுவிடுவார்.

ஆனால், இந்தக் குடிவழி வரலாறு மிகவும் இன்றியமையாததாகும். தொடர்ந்து வருகிற அனைத்துச் செய்திகளுக்கும் இது ஆதாரமாக விளங்குகிறது. இயேசு கிறிஸ்து தாவீதின் அரசர் வம்சத்தில் பிறந்தவர் என்பதை அறிமுகப்படுத்தாவிடில், அவரே இஸ்ரவேலின் மேசியா – அரசர் என்னும் உண்மையை மெய்ப்பிக்க இயலாது. ஆகவே எங்கு தொடங்க வேண்டுமோ அங்கேயே மத்தேயு தனது நூலைச் சரியாகத் தொடங்கியிருக்கிறார். அதாவது தமது வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பின் வழியாக தாவீதின் அரியணைக்கு இயேசு கிறிஸ்துவே சட்டப்படி உரிமையாளர் என்பதற்கான சான்றுகளுடன் இந்நூல் தொடங்குகிறது.

இயேசு கிறிஸ்து சட்டபூர்வமாக இஸ்ரவேலின் அரசராவதற்கு உரிமைபெற்றவர் என்பதை மத்தேயு கூறும் குடிவழி வரலாறு புலப்படுத்துகிறது. அவர் தாவீதின் குமாரன் என்பதற்கான ஆதாரத்தை லூக்கா பயன்படுத்தியுள்ள குடிவழி அட்டவணை தெரிவிக்கிறது. தாவீதுக்குப் பின்னர் அரசனாக விளங்கிய அவனது குமாரனாகிய சாலொமோன் வழிவந்த அரச வம்சம் மத்தேயுவில் சொல்லப்பட்டுள்ளது. தாவீதின் மற்றொரு மகனாகிய நாத்தான் வழிவந்த உறவுவழி மரபை லூக்கா பின்பற்றியுள்ளார். இந்நூலில் காணும் வம்ச வரலாறு இயேசு கிறிஸ்துவைத் தத்துப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட யோசேப்போடு முடிவடைகிறது. ஆனால் லூக்கா நற்செய்தி நூல் மரியாளின் மூதாதையருடைய வம்ச வரலாற்றை எடுத்துரைக்கிறது. அந்த மரியாளிடம் பிறந்த குமாரனே இயேசு கிறிஸ்து ஆவார்.

ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தாவீதுடன் தேவன் நிபந்தனையற்ற ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி தாவீதுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும் அரசையும், தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் அரச வம்சத்தையும் தேவன் வாக்களித்தார் (சங்.89:4, 36,37). அந்த உடன்படிக்கையானது இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அவர் யோசேப்பின் மூலமாக தாவீதின் அரியணைக்குச் சட்டபூர்வமான வாரிசாக விளங்குகிறார். அதே நேரத்தில் அவர் என்றென்றும் உயிரோடிருப்பதால், அவரது அரசு என்றென்றும் நிலைநிற்கும். இஸ்ரவேலின் அரியணைக்கு உரிமை கொண்டாடுவதற்கான இரண்டு அடிப்படைக் காரணங்களான சட்டப்படியான மரபுரிமையையும், பிறப்பின்படியான மரபுரிமையையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டவராக இயேசு கிறிஸ்து விளங்குகிறார். இந்தத் தகுதிகள் வேறு எவருக்கும் இல்லை. மேலும் அவர் எப்போதும் உயிரோடிருப்பதால் இனி எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கொண்டாட முடியாது.

1:1-15 “ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு” என்று இந்நூலில் கூறியிருக்கும்முறையானது “ஆதாமின் வம்சவரலாறு”என்று ஆதியாகமம் 5:1 -இல் கூறியிருப்பதற்கு ஒத்திருக்கிறது. ஆதியாகமம் முதலாம் ஆதாமை அறிமுகம் செய்கிறது. மத்தேயு நற்செய்தி நூல் கடைசி ஆதாமை அறிமுகம் செய்கிறது. முதலாம் ஆதாம் முந்தினதும் மாம்ச சம்பந்தமானதுமான படைப்பின் தலைவனாவான். கடைசி ஆதாமாகிய கிறிஸ்து புதியதும் ஆவிக்குரியதுமான படைப்பின் தலைவராவார்.

இந்த நற்செய்தியின் கருப்பொருளாக இயேசு1 கிறிஸ்துவே விளங்குகிறார். இயேசு என்னும் பெயர் அவர் கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது. கிறிஸ்து என்னும் பெயர் (“அபிஷேகிக்கப்பட்டவர்”) அவரே நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இஸ்ரவேலின் மேசியா என்று காட்டுகிறது. தாவீதின் குமாரன் என்னும் பட்டம், பழைய ஏற்பாடு கூறும் மேசியா மற்றும் அரசர் ஆகிய பதவிகளோடு அவரைத் தொடர்புபடுத்திக் காட்டுகிறது. ஆபிரகாமின் குமாரன் என்னும் பட்டம், நம்முடைய கர்த்தரே, எபிரெய மக்களுக்கு அருளப்பட்ட வாக்குறுதிகளின் இறுதியான நிறைவேறுதலாக விளங்குகிறார் என்பதைக் காட்டுகிறது.

இந்த வம்சவரலாறானது, ஆபிரகாம் முதல் ஈசாய் வரை என்றும், தாவீது முதல் யோசியா வரை என்றும், எகொனியா முதல் யோசேப்பு வரை என்றும் மூன்று வரலாற்றுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியானது தாவீது வரை தொடர்கிறது. இரண்டாவது பகுதி அரசர்களின் வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. மூன்றாவது பகுதி கி.பி. 586-ஆம் ஆண்டு முதல் சிறையிருப்புக் காலத்தில் வாடிநந்த அரச வம்சத்தாரின் பெயர்களைப் பாதுகாத்து வைத்துள்ளது.

இந்தப் பெயர்ப்பட்டியலில் நமது ஆவலைத் தூண்டும் பல செய்திகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தப் பகுதியில் நான்கு பெண்டிரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தாமார், ராகாப், ரூத், (உரியாவின் மனைவியாயிருந்த) பத்சேபாள். கிழக்கத்திய மரபு வரலாற்றில் பெண்களின் பெயர்களைக் காண்பது அரிது. மேலும் இப்பெயர்ப் பட்டியலில் விலைமகளிரான தாமார், ராகாப் ஆகியோருடைய பெயர்களும், விபசாரம் செய்த பத்சேபாளின் பெயரும் இடம் பெற்றிருப்பதைக் காண்பது மிகுந்த வியப்பினைத் தருகிறது. பாவிகளுக்கு இரட்சிப்பையும், புற இனத்தவருக்குக் கிருபையையும் கிறிஸ்துவின் வருகைகொண்டுவருகிறது என்பதைக் கூறவும், அவருக்குள்ளாக இன வேறுபாடுகளும், ஆண்பெண் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கமடைகின்றன என்பதைக் கூறவும், இப்பெண்களின் பெயர்கள் மத்தேயுவின் முன்னுரையில் சாதுரியமாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன.

எகொனியா என்னும் அரசனுடைய பெயரும் இதில் இடம் பெற்றிருப்பது நமக்கு பேராவலை உண்டாக்குகிறது. இந்த மனிதனுக்கு எதிராக எரேமியா 22:30-இல் கர்த்தருடைய சாபம் கூறப்பட்டுள்ளது:

“இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக் குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப் போகிறதில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இயேசு கிறிஸ்து உண்மையாகவே யோசேப்பின் உண்மையான மகனாக இருந்திருப்பாரென்றால், அவர் இந்தச் சாபத்திற்கு உட்பட்டிருப்பார். ஆயினும் தாவீதின் அரியணையை தமது உரிமையாகப் பெறுவதற்கு அவர் யோசேப்பின் சட்டப்பூர்வமான மகனாக இருக்க வேண்டும். அற்புதமான கன்னிப்பிறப்பினால் அந்தச் சிக்கல் நீங்கிப்போயிற்று. மேலும் மரியாளின் வழியாக அவர் தாவீதின் உண்மையான மகனுமாவார். மரியாளும் அவளுடைய பிள்ளைகளும் எகொனியாவின் குடிவழியில் வந்தவர்கள் அல்லர்; ஆகவே அவன் மீது சுமத்தப்பட்ட சாபத்திற்கு அவர்கள் நீங்கலாகி இருக்கின்றனர்.

1:16 அவளிடத்தில் என்று தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் மூலமொழியாகிய கிரேக்கில் சொல்லப்பட்டுள்ளது போலவே ஒருமையிலும் பெண்பாலிலும் நேர்த்தியாகக் காணப்பட்டு, இயேசு மரியாளினிடத்தில் பிறந்தார் என்பதையும், யோசேப்புக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை என்பதையும் தெரிவிக்கிறது. இத்தகைய சுவைமிக்க பல செய்திகள் இந்தக் குடிவழி வரலாற்றுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதோடு, சில சிக்கல்களும் உள்ளன என்பதை நாம் குறிப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

1:17 இந்த குடிவழிவரலாறு பதினான்கு தலைமுறைகளைக் கொண்ட மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்தேயு நூல் நமது கவனத்தை ஈர்க்கிறது. ஆயினும் இந்தப் பட்டியலில் சில பெயர்கள் விடுபட்டுள்ளன என்பதை பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம். எடுத்துக்காட்டாக, யோராம் உசியா (வச.8) ஆகிய அரசர்களுக்கிடையே அகசியா, யோவாஸ், அமத்சியா ஆகியோர் அரசாண்டனர் (2இரா.8-14; 2 நாளா 21-25 ஆகிய பகுதிகளைக் காண்க).

மேலும், மத்தேயு, லூக்கா ஆகியோருடைய வம்ச வரலாறுகள் இரண்டிலும் சலாத்தியேல், செருபாபேல் ஆகிய பெயர்களைக் காண்கிறோம்  (மத். 1:12,13; லூக். 3:27). யோசேப்பு, மரியாள் ஆகிய இருவருடைய மூதாதையர் பட்டியல்கள் இந்த இரண்டு மனிதர்களுடைய பெயர்களில் இணைந்து பின்னர் மீண்டும் பிரிவது விநோதமாயிருக்கிறது. மேலும் இரண்டு நற்செய்தி நூல்களும் எஸ்றா 3:2-இல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பின்பற்றி சலாத்தியேலின் குமாரன் செருபாபேல் என்று குறிப்பிடுவது சிக்கலை அதிகப்படுத்துகிறது. ஆனால் 1 நாளா. 3:19 – இல் அவன் பெதாயாவின் குமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது சிக்கல் யாதெனில், தாவீது முதல் இயேசு கிறிஸ்துவரை இருபத்தேழு தலைமுறைகள் என மத்தேயுவும், நாற்பத்திரண்டு என்று லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருவரும் வெவ்வேறு குடும்ப வழிமரபை எடுத்துரைத்தாலும், தலைமுறை எண்ணிக்கையில் இத்தனை பெரிய வேறுபாடு காணப்படுவது விந்தையாகவே தோன்றுகிறது.

இந்தச் சிக்கல்களையும், முரண்பாடாகத் தோன்றும் குறிப்புகளையும் வேத மாணாக்கன் எந்த மனப்பான்மையோடு அணுக வேண்டும்? முதலாவது, தேவ வார்த்தையானது தேவ ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத அடிப்படை உண்மையாகும். ஆகவே வேதத்தில் ஏதொரு தவறும் இருக்காது. இரண்டாவது, வேதம் எல்லைகட்கு அப்பாற்பட்டது, இது தேவனுடைய எல்லையற்ற தன்மையை பிரதி பலிக்கும் தன்மையுடையது. வேதத்தின் அடிப்படை உண்மைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியுமே ஒழிய, அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்துக் கூறுகளையும் முற்றுமுடிய நம்மால் அறிந்துகொள்ளமுடியாது.

ஆகவே இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்க்கும் நாம், இவற்றிற்கான காரணம் நமது அறியாமையேயொழிய வேதவசனங்களில் எவ்விதத் தவறும் இல்லை என்பதை உணர வேண்டும். வேதாகமத்தில் எழுகின்ற கேள்விகள், நாம் வேதத்தை ஆடிநந்து படிக்க வேண்டுமென்றும் ஆராய்ந்து பார்த்து விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் நமக்கு அறைகூவல்களாகத் திகடிநகின்றன. “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வது ராஜாக்களுக்கு மேன்மை” (நீதி.25:2).

வரலாற்று அறிஞர்களின் கவனமிக்க ஆராய்ச்சிகளினாலோ, அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளினாலோ திருமறையில் உரைக்கப்பட்டுள்ள எந்தவொரு கூற்றையும் பொய்யென மெய்ப்பித்துக்காட்ட இயலவில்லை. நமக்குப் பிரச்சினைகளாகவும் முரண்பாடுகளாகவும் தோன்றுபவை யாவற்றிற்கும் ஆவிக்குரிய முக்கியத்துவமும், நன்மை பயக்கத்தக்கவையுமான அறிவார்ந்த விளக்கங்களும் உள்ளன.

ஆ. மரியாளின் மகனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து (1:18-25)

1:18 வம்ச வரலாற்றில் காணும் எல்லா மூதாதையரின் பிறப்புகளினின்றும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வேறுபட்டதாகும். அந்தப் பட்டியலில் “அ என்பவன் ஆ-வைப் பெற்றான்” என்னும் முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் மனிதத் தகப்பனின்றி ஒரு பிறப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அற்புதமான கருத்தரிப்பைக் குறித்த உண்மைகள் மிகுந்த மதிப்போடும் எளிமையோடும் விவரிக்கப்பட்டுள்ளன.

மரியாள் யோசேப்புக்குத் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தாள். ஆயினும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் தொடக்ககாலங்களில் திருமண நிச்சயம், உடன்பாடாகக் கருதப்பட்டது. இந்த நாட்களில் நடைபெறும் திருமண ஒப்பந்தங்களைக்காட்டிலும் அது அதிக உறுதியானது. அந்த உடன்பாடானது விவாகரத்தினால் மட்டுமே முறிக்கப்படக் கூடியதாக இருந்தது. அவ்விதமாகத் திருமண நிச்சயம் செய்யப்பட்ட தம்பதிகள் திருமணம் நடைபெறும்வரை கூடி வாழ்வதில்லை. எனினும் அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உண்மையற்ற முறையில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால் அது விபசாரம் என்று கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்.

திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்த கன்னிமரியாள் பரிசுத்த ஆவியினால் அற்புதமான முறையில் கருத்தரித்தாள். முன்னதாகவே இந்த அதிசயமான நிகழ்வைக் குறித்து ஒரு தேவதூதன் அவளிடத்தில் கூறியிருந்தான்: “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்” (லூக்.1:35). இப்பொழுது மரியாளின் நடத்தையில் ஐயங்கள் எழக்கூடிய சூழ்நிலை உண்டாயிற்று, மக்கள் பழிச்சொற்களால் தூற்றுவார்கள். மனித வரலாற்றில் இதுவரை ஒரு கன்னி பிள்ளை பெற்றதில்லையே! திருமணமாகாத பெண்ணொருத்தி கருத்தரித்திருப்பதைக் காணும் மக்கள் ஒரே ஒரு விளக்கத்தைத்தான் தரமுன்வருவார்கள்.

1:19 மரியாள் அடைந்த இந்நிலைக்கு உண்மையான காரணத்தை யோசேப்பும்கூட இன்னும் அறியவில்லை. தன்னுடைய வருங்கால மனைவியின்மீது அவன் கடுங்கோபம்கொள்ள இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று, அவனுக்கு அவள் உண்மையற்றவளாக நடந்து கொண்டாள் என்று தோன்றியது. இரண்டாவது, அவன் ஒரு குற்றமும் செய்யாதவனாயிருந்தும், குற்றம் புரிவதற்கு உடந்தையாயிருந்தான் என்ற குற்றச்சாட்டு எழவாய்ப்புண்டானது. மரியாள் மீது அவன் கொண்டிருந்த அன்பினாலும், நீதி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தினாலும், அவன் அவளுடன் செய்திருந்த திருமண நிச்சயத்தை, விவாகரத்தின் மூலம் இரகசியமாய் முறிக்க நினைத்தான். அவ்வாறு செய்வதனால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவமானத்தை அவன் தவிர்க்கக் கூடும்.

1:20 பெருந்தன்மையுள்ளவனும் சிந்தித்துச் செயல்புரிபவனுமாகிய யோசேப்பு மரியாளை எவ்வாறு பாதுகாப்பது என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டான். “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே” என்று அத்தூதன் வாழ்த்துதல் கூறி அழைத்தான். அவ்வழைப்பு யோசேப்பின் அரச வம்சத்தை அவனுக்கு நிச்சயமாய் நினைவூட்டியிருக்கும். மேலும் அவ்வழைப்பு மேசியாவாகிய இஸ்ரவேலின் அரசர் அற்புதமான முறையில் தோன்றவிருப்பதை அறிந்து ஏற்றிட அவனுடைய உள்ளத்தை ஆயத்தம் செய்தது. மரியாளைத் திருமணம் செய்வதற்கு அவன் அஞ்சவேண்டிய தேவையில்லை. அவளுடைய தூய்மையைக் குறித்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை. அவள் கர்ப்பந்தரித்திருப்பதோ தூய ஆவியானவரின் அற்புதச் செயலாகும்.

1:21 பின்னர், பிறக்கப்போகும் குழந்தையின் பால், பெயர், பணி ஆகியவற்றை அத்தூதன் விவரித்துக் கூறினான். மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பெயரிடவேண்டும் (யெகோவா இரட்சிப்பாக இருக்கிறார் அல்லது யெகோவா இரட்சகராக இருக்கிறார் என்பதே அப்பெயரின் பொருளாகும்). அவருடைய பெயருக்கு ஏற்றபடி அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். இவ்வாறு முன்னுரைக்கப்பட்ட குழந்தை கர்த்தரே ஆவார். அவரே மனிதர்களை அவர்களுடைய பாவத்தின் தண்டனையிலிருந்தும், பாவத்தின் வல்லமையிலிருந்தும், இறுதியில் பாவத்தின் சமுகத்திலிருந்தும் விடுவித்துக் காக்க இப் புவிக்கு வருகை தருகிறார்.

1:22 இந்த நிகழ்ச்சிகளை மத்தேயு பதிவு செய்தபோது, மனித இனத்துடன் தேவன் கொண்டிருந்த செயல்பாட்டின் வரலாற்றில் புதிய தொரு காலகட்டம் மலர்ந்துவிட்டது என்பதை அவரால் உணரமுடிந்தது. நீண்டகாலமாகச் செயலிழந்து கிடந்த, மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனச் சொற்கள், இப்பொழுதோ உயிர்பெற்று எழுந்துவிட்டன. ஏசாயாவின் மறைபொருளான தீர்க்கதரிசனம் மரியாளின் குழந்தையில் நிறைவடைந்தது: “தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.” கிறிஸ்து பிறப்பதற்குக் குறைந்தது 700 -ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயாவால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் தேவ ஆவியின் வெளிப்பாடென்று இங்கே மத்தேயு வலியுறுத்திக் கூறுகிறார்.

1:23 ஏசாயா 7:14-இல் உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தில், ஒரு தனித்தன்மை வாய்ந்த பிறப்பு (“இதோ கன்னிகை கர்ப்பவதியாகி”), குழந்தையின் பாலினம் (“ஒரு குமாரனைப் பெறுவாள்”), குழந்தையின் பெயர் (“அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்”) ஆகியவை இடம் பெற்றிருந்தன. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்பது பொருளாகும் என்று மத்தேயு விளக்கத்தைச் சேர்த்துச் சொல்லுகிறார். கிறிஸ்து இவ்வுலகில் இருந்தபோது “இம்மானுவேல்” என்று அழைக்கப்பட்டதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. எப்போதும் அவர் “இயேசு” என்றே அழைக்கப்பட்டார். ஆயினும் இயேசு என்னும் பெயரின் பொருளில்  (வச.21), தேவன் நம்மோடிருக்கிறார் என்னும் உண்மை உள்ளடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அவருக்கு வழங்கப்படும் பதவிப் பெயராக இம்மானுவேல் என்னும் பெயர் விளங்கும்.

1:24 தேவதூதனின் தலையீட்டின் விளைவாக, யோசேப்பு மரியாளை விவாகரத்து செய்யவேண்டும் என்று தான் முன்பு தீர்மானித்திருந்த திட்டத்தைக் கைவிட்டான். இயேசு பிறக்கும்வரை அவர்களுக்கிடையே இருந்த உறவு, நிச்சயம் செடீநுதிருந்த நிலையிலேயே நீடித்தது. அதற்குப் பின்பு அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

1:25 இந்த வசனத்தின் முடிவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், மரியாள் தன் வாழ்நாட்களெல்லாம் கன்னியாகவே இருந்தாள் என்னும் போதனை தவறானது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. யோசப்பின் மூலமாக மரியாள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் என்பதைக் குறிப்பிடும் மற்ற வசனங்களாவன: மத்தேயு 12:46; 13:55,56; மாற்கு 6:3; யோவான் 7:3,5; அப். நடபடிகள் 1:14; 1 கொரிந்தியர் 9:5; கலாத்தியர் 1:19 ஆகியவையே.

மரியாளைத் தனது துணைவியாக யோசேப்பு ஏற்றுக்கொண்டதின் நிமித்தம், அக்குழந்தையைத் தனது வளர்ப்பு மகனாகவும் அவன் ஏற்றுக்கொண்டான். இவ்வாறுதானே இயேசு தாவீதின் அரியணைக்குச் சட்டப்பூர்மான உரிமையாளராக மாறினார். தேவதூதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, குழந்தைக்கு இயேசு என்று யோசேப்பு பெயரிட்டான்.

இவ்வாறு மேசியா-அரசர் பிறந்தார். நித்தியமானவர் கால எல்லைக்குள் காலடி எடுத்துவைத்தார். சர்வ வல்லவர் சிறு பாலகனாக மாறினார். மகிமையின் கர்த்தர், மனித உடல்கொண்டு அந்த மகிமையை மறைத்துக்கொண்டார். “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” (கொலோ. 2:9).

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

ஆதியாகமம் 10:25-11:26

July 16, 2016

https://www.tamilbible.org/blog/video/twr/genesis_21.mp4

Read moreDetails

ஆதியாகமம் 8:1-9:1

June 27, 2016

https://www.tamilbible.org/blog/video/twr/genesis_18.mp4

Read moreDetails

ஆதியாகமம் 6:14-7:24

June 21, 2016

https://www.tamilbible.org/blog/video/twr/genesis_17.mp4

Read moreDetails

மத்தேயு 3:1-17

April 27, 2015

3. மேசியாவின் ஊழியங்களுக்கான ஆயத்தமும், தொடக்கமும் (அதி. 3,4) அ. யோவான் ஸ்நானகன் வழியை ஆயத்தப்படுத்துதல் (3:1-12) இரண்டாம் அதிகாரத்திற்கும் மூன்றாம் அதிகாரத்திற்கும் இடையே இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. அதைக்குறித்து மத்தேயு எதுவும்...

Read moreDetails

மத்தேயு 2:1-23

February 15, 2015

2. மேசியா அரசரின் இளமைக் காலம் (அதி. 2) அ. அரசரைத் தொழுதுகொள்ள வந்த ஞானிகள் (2:1-12) 2:1,2 இயேசு கிறிஸ்துவின் பிறப்போடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் குறித்துப் படிக்குங்கால், அவற்றின் கால வரிசையைக் கணக்கிடுவதில் குழப்பம் ஏற்படுவது எளிது....

Read moreDetails
Next Post

The King and Bathsheba

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?