நீதிமொழிகள் 10:1-32
மனிதன் தனித்து வாழ்வதில்லை. அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு கொண்டவனாகவே இருக்கிறான். ஆகவே ஒரு கிறிஸ்தவன் தன் வார்த்தையின் மூலமாகவும், வாழ்க்கையின் மூலமாகவும் பிறருக்கு உறுதுணையாய் இருப்பதற்கு நீதிமொழிகள் 10 ஆம் அதிகாரம் வழி கூறுகிறது. ஒரு மனிதனுக்கு முதலாவதாக அறிமுகப்படுவது அவனது தாயாரே. நீதி 10:1 இதனை சுட்டிக் காட்டுகிறது. நல்வாழ்வுக்கான கருத்துக்களையும், அதற்காகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கற்பிக்கின்ற இந்த அதிகாரம், முரண்பாடுள்ள வாழ்க்கை எப்படி ஒரு மனிதனுக்கும், அவனைச் சூழ இருப்பவருக்கும் தீமையை விளைவிக்கிறது என்றும் எச்சரித்துக் கூறுகிறது. இன்றைய வாசிப்பின் மூலமாய் நன்மையையும் தீமையையும் சுட்டிக் காட்டுகின்ற கர்த்தர், நன்மையான வழிகளை நாம் தெரிந்து கொள்ளும் படி நம்மைத் தம்முடைய ஞானத்தினால் நிரப்புவாராக.