திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10)
நீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச் சில வாழ்நாட்களே எஞ்சியிருந்தன. ஒருநாள் அவன் தனிமையில் படுத்திருந்தபோது தன்னை ஒரு பாம்பு நெருங்கி வருவதைக் கண்டான். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் விரும்பினாலும் அவனால் முடியவில்லை. அவனுக்குள் உயிர் இருந்தது. ஆனால் அந்த உயிரினால் பலனில்லை. ஒரு கல்லை எடுத்து வீசி அம்பாம்பைக் கொல்ல அவனுக்குச் சக்தியில்லை. பாம்பு வருவதைப் பார்த்து அஞ்சி நடுக்கத்தான் அவனால் முடிந்தது. அது அவனைத் தீண்டிய சிறிது நேரத்திற்குள் அவன் வாழ்வு முடிந்தது. அதன்பின் அவனுடைய உறவினன் ஒருவன் வந்து அப்பாம்மை அடித்துக்கொன்றான். அவன் பலசாலியாக இருந்ததால் அப் பாம்மைக் கொல்ல அவனால் முடிந்தது. கிறிஸ்தவர் அநேகர் உயிர்பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாவம் என்னும் நச்சுப்பாம்பைக் கொல்லும் சக்தி அவர்களுக்கில்லை. பெலனில்லாத உயிரினால் பலனில்லையே? இதன் விளைவாக சாத்தான் எனப்படும் பகைவன், பாவம் என்னும் விஷத்தால் தீண்டி அவர்களைக் கொன்று போடுவான்.. நமதாண்டவரோ ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனைத் தருவதாக வாக்களித்திருக்கிறார். பரிபூரண ஜீவனைப் பெற்றிருப்போர் பாவம் என்னும் பாம்பைக் கொல்லும் சக்தியுடையோர் !