யூன் 18
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்.1:27)
மேற்கூறியவற்றை ஒரு விசுவாசி செய்வானானால், செய்யவேண்டிய அனைத்தையும் அவன் செய்துவிட்டான் என்ற பொருளுடன் யாக்கோபு இதை எழுதவில்லை. திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்து, தன்னைக் கறைபடாதபடிக்குக் காத்துக்கொள்வது மாசில்லாத பக்திக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன என்றே கூறுகிறார்.
வேத விளக்கப் பிரசங்கங்கள், நற்பணி ஊழியம், தனியாள் ஆத்தம ஆதாயம் ஆகிய இவற்றையே பக்தியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவர் சொல்லியிருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம். அவற்றை அவர் கூறாமல், தேவையுள்ளவர்களைச் சந்திப்பதையே முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார்.
தான் “வீடுகள் தோறும்” சென்றதை, எபேசு நகர மூப்பர்களிடம், பவுல் நினைவுறுத்தினார் (அப்.20:20). வீடுகள் சந்திப்பதை மிகவும் இன்றியமையாத ஊழியமாக டார்பி கருதினார். “மணிக்கூண்டில் கடிகாரம் ஓசை எழுப்புகிறது. வழிப்போக்கர் அவ்வொலியைக் கேட்கின்றனர். ஆனால், கடிகாரத்தின் உள்ளே தொடர்ந்து வேலை நடக்கிறது. முட்கள் நகர்ந்து மணிஓசை எழுகிறது. வீடுகள் சந்திப்பது, அதிகமான நேரம் செலவிட வேண்டிய ஊழியம் எனக் கருதுகிறேன். மற்ற ஊழியங்கள் உங்களிடம் வரும்போது அவற்றைச் செய்யுங்கள். பொது இடங்களில் சாட்சிபகர நான் அஞ்சுகிறேன். வேறு மறைவான ஊழியம் இல்லையெனில் அப்பொழுது அதைச் செய்வேன்”.
தனியாக வசித்த விதவை, தனது வயது முதிர்ச்சியின் நிமித்தமாக அருகில் வசிப்பவர்களிடமும், நண்பர்களிடமும் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கையில் ஒரு நாட்குறிப்பு ஏட்டை வைத்திருப்பார். ஒவ்வொருநாள் நிகழ்ச்சியையும் அதில் எழுதிவைப்பார். குறிப்பாக வெளியுலகத் தொடர்புகளைப் பற்றி அதில் எழுதுவார். சிலநாட்கள் அந்த வீட்டின் உள்ளே எந்த நடவடிக்கையையும் காணாத அயலகத்தார் காவல்துறையினரை அழைத்தனர். உள்ளே சென்ற காவல்துறையினர், சில நாட்களுக்கு முன்னரே இறந்து கிடந்த மூதாட்டியின் உடலைக் கண்டனர். அம்மூதாட்டி இறப்பதற்கு முன்னதாக மூன்றுநாட்கள் தனது குறிப்பேட்டில், “ஒருவரும் வரவில்லை” , “ஒருவரும் வரவில்லை”, ஒருவரும் வரவில்லை” என்ற சொற்களையே எழுதியிருந்தார்.
தங்களுடைய சொந்த அலுவலில் மூழ்கிப்போய் இருப்பவர்கள், தனிமையில் வாடுவோரையும், தேவையுள்ள நிலையில் வசிப்பவர்களையும், வயது முதிர்ச்சியினால் பலவீனமடைந்த நிலையில் உள்ளவர்களையும் மறப்பது எளிது. வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழியங்களிலும், கவர்ச்சிமிக்க பணிகளிலும் ஈடுபட விரும்புகிறோம். அவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆயின் நம்முடைய பக்தி தூய்மையாகவும, மாசில்லாததாகவும் இருக்கவேண்டுமாயின், திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும், வயது முதிர்ந்தோரையும், வீட்டில் தனிமையில் அடைபட்டுக்கிடப்போரையும் அசட்சை செய்யக்கூடாது. தேவையுள்ளவரைக் குறித்து அக்கறை கொண்டவராக தேவன் இருக்கிறார். அத்தகையோருக்கு உதவிசெய்ய முன்வருவோருக்கு அவர் சிறப்பான பரிசுப்பொருட்களை வைத்திருக்கிறார்.