யூன் 7
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (வெளி 19:6)
தமது தனிச்சிறப்புமிக்க இறை இயல்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் செய்ய வல்லவராக தேவன் இருக்கிறார் என்பதையே சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் பெயர் பொருளாகக் கொண்டிருக்கிறது. இதற்குத் திருமுறை தொடர்ந்து ஒரே ரீதியாகச் சான்று வழங்குகிறது! “நான் சர்வவல்லமையுள்ள தேவன்” (ஆதி.17:1). “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” (ஆதி.18:14). “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது” (யோபு 42:2). “உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமி.32:17). “தேவனால் எல்லாம் கூடும்” (மத்.19:26). “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக்.1:37).
ஆனால், தமது குணநலன்களுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்த தேவனால் கூடாது. எடுத்துக்காட்டாக தேவனால் பொய்யுரைக்க முடியாது (எபி.6:18). தம்மைத்தாமே மறுத்துரைக்க அவரால் முடியாது. (2.தமோ.2:13). அவர் நிறைவான பரிசுத்தத்தை உடையவராக இருப்பதால், அவரால் பாவம் செய்ய முடியாது. முற்றிலும் சார்ந்துகொள்வதற்குப் பாத்திரராக இருப்பதால் அவர் கைவிடவேமாட்டார்.
தமது படைப்பிலும், இப்பிரபஞ்சத்தைத் தாங்குவதிலும், அவருடைய அருட்கொடையிலும், பாவிகளுக்கு இரட்சிப்பை வழங்குவதிலும், மனந்திரும்பாத பாவிகளை ஒறுப்பதிலும் தேவனுடைய சர்வ வல்லமை விளங்குகிறது. இஸ்ரவேலர் எகிப்தினின்று மீட்கப்பட்டு கானான் நாட்டிற்குப் பயணம் செய்த நிகழ்ச்சி தேவனின் சர்வ வல்லமையை வெளிப்படுத்தும் மாபெரும் நிகழ்ச்சியாகும்.
தேவன் சர்வவல்லமையுள்ளவராக இருக்கின்ற காரணத்தினால், அவரோடு எவரும் போராடி வெற்றிகாண முடியாது. “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை (நீதி.21:30).
தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால், விசவாசி வெற்றிபெறுகிறவனாக இருக்கிறான். தேவனோடு இருப்பவன் மாபெரும் படையைச் சேர்ந்தவன். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோ.8:31).
தேவன் சர்வல்லமையுள்ளவராக இருப்பதால், நிகழக் கூடாதவை என்று கருதப்படுகிறவை நிகழத்தக்கதாக நாம் ஜெபத்தில் ஈடுபடலாம். நிகழக்கூடாதவற்றைக் கண்டு நகைத்து, “இது நிறைவேறும்” என்று முழக்கமிடலாம்.
தேவன் சர்வ வல்லமையுள்ளவராக இருக்கின்ற காரணத்தினால் நாம் சொல்லிமுடியாத ஆறுதலைப் பெறுகிறோம். “அவருடைய வல்லமையில், பலனற்ற நான் சாய்ந்துகொள்ளும்வேளையில், எல்லாம் பளுவற்றுக் காணப்படும்.”